பேரறிவாளனின் பெற்றோரது கோரிக்கை மடல்
விடுநர் : தேதி : 31.08.2007
தி. அற்புதம்
த. ஞானசேகரன்,
11, கே.கே.தங்கவேல் தெரு,
பெரியார் நகர், சோலையார்பேட்டை-635 851.
அன்புடையீர், வணக்கம்.
ஆகஸ்டு-15 சுதந்திர தின-வைர விழாவை முன்னிட்டு எமது புதல்வன் அ.ஞா.பேரறிவாளன் (இராசீவ் கொலைவழக்கு) உள்ளிட்ட மரண தண்டனை சிறைவாசிகளின் தண்டனை மாற்றியமைக்கப்பட பெரிதும் முயன்றோம். தாங்களும் எமது வேண்டுகோள் ஏற்று உதவினீர்கள். இருப்பினும் தண்டனையில் மாற்றம் ஏற்படவில்லை. எமது துன்பம் முன்னிலும் அதிகமாக நீடிக்கவே செய்கிறது. இருப்பினும் மனம் தளரவில்லை.
முன்பைவிட கூடுதலான வலுவுள்ள மற்றுமொரு வாய்ப்பு அமைந்துள்ளதால் இதில் உறுதியாக தண்டனையை மாற்றி மகிழ்ச்சி கண்டுவிட வேண்டும் என்ற நம்பிக்கையோடு தங்களை மீண்டும் உதவி வேண்டி அணுகுகிறோம்.
அக்டோபர் 02-தேசத்தந்தை காந்தியடிகளார் பிறந்த நாளினை "சர்வதேச அகிம்சை தினமாக'' கடைபிடிப்பது என அனைத்துலக சமூகம் அய்.நா. அவையினில் வரலாற்று புகழ்மிக்க தீர்மானம் நிறைவேற்றி இவ்வாண்டு முதல் கொண்டாட உள்ளது. அப்பெருமைமிகு நாளில் திருமதி. சோனியாகாந்தி அவர்கள் அய்.நா.பொதுச்சபையில் உரையாற்றப் போகும் மிக முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது.
நமது நாட்டில் காந்தியடிகள் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் "சிறைவாசிகள் நல நாளாக'' நமது நடுவண் அரசு கடைபிடித்து வருகிறது என்பதை இவ்விடத்தில் அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம். இச்சூழலின் பின்னணியில் காந்தியடிகளின் மேகோள் ஒன்றினை தங்களது கவனத்திற்கு கொண்டுவருவது பொருத்தமாக உள்ளது.
"கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது''
எனவே, காந்தியார் அவர்களின் பிறந்தநாளான சர்வதேச அகிம்சை தினத்தன்று எமது புதல்வன் உள்ளிட்ட மரணதண்டனை சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்கி காந்தியடிகளின் பிறந்தநாளுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென நடுவண் அரசை வலியுறுத்த மீண்டும் தாங்களும், தங்களது அமைப்பும் மேதகு குடியரசுத் தலைவர், திருமதி. சோனியாகாந்தி, மாண்புமிகு. தலைமை அமைச்சர், மாண்புமிகு. உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.
இம்முறை கோரிக்கையோடு அக்டோபர்-02 - சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கமாக தங்களது முயற்சி செயல்வடிவம் பெறவேண்டும் எனவும் விழைகிறோம். வயது முதிர்ச்சியில் தளர்ந்து போயிருக்கும், 16 ஆண்டுகால நெடிய போராட்டத்தினால் உளச்சோர்வுடன் வாழ்வை நகர்த்தும் எமக்கு இதுவே இறுதி முயற்சியாக இருக்க வேண்டும் எனவும், இம்முயற்சியின் இறுதியில் வெற்றிபெற்று எம் புதல்வனை மீட்டுவிட வேண்டும் எனவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்களிடம் இவ்வுதவியினை வேண்டுகிறோம்.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
தி. அற்புதம்
த.ஞானசேகரன்
முகேஷ் அம்பானியின் ஆடம்பர மாளிகை
மும்பையில் முப்பந்தைந்தாயிரம் கோடி ரூபாய்க்கு 4532 ச.மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கிய முகேஷ் அம்பானியின் குடும்பம் அதில் இருபத்தியேழு அடுக்குமாடிகளைக் கட்டி வருகிறது. முதல் ஆறு தளங்கள் குடும்பத்தினரின் மகிழுந்துகள் நிறுத்துமிடம். ஒரே நேரத்தில் 168 வண்டிகளை அங்கு நிறுத்த முடியும். ஏழாவது தளம் வண்டிகள் பழுதுபார்க்கும் தளமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. திரையரங்கத்திற்கென ஒரு தளமும், உடற்பயிற்சிக்கென ஒரு தளமும் ஒதுக்கப்பட்டிருப்பதோடு 27 அடுக்குகளின் மேல்தளம் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்படுவதற்கு வசதியாக அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.
-நன்றி "விடுதலை முழக்கம்'
குறிப்பு : இவரது மாத வருமானம் 100,00,00,000 (நூறு கோடி) ரூபாய் என்கிறது சென்ற மாதத்தின் புள்ளி விவரம் ஒன்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|