Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
தமிழ்த் திரையுலகின் தோற்றமும் தடுமாற்றமும்
பூவிழியன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1919-லிருந்தே தமிழகத் திரைத்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும் அது தன் அடையாளத்தைப் பெற்றது 1931ல்தான். திரையில் தமிழ் மொழியை உச்சரிக்க ஆரம்பித்த பின்னரே இம்மாற்றம் நிகழ்ந்தது. முதல் படமான கீசக வதம் 1916-ல் தமிழகத்தில் வெளி வந்த போது அதற்கு மொழி கிடையாது. வெறும் மவுனப் படம் மட்டுமே. அந்த ஆரம்பகாலப் படங்களும் சூரிய ஒளியிலேயே படம் பிடிக்கப்பட்டது.

படங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டன என்பதால் நடிகர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்தோடும். சூரியக் கதிர்கள் கண்களை கூசச் செய்யும். எனவே, நடிப்பவர்கள் கண்களைச் சுருக்குவதும், இமைகளை அடிக்கடி மூடுவது என்பதும் இயல்பாக இருந்தது. கூடவே புராணப் படங்கள் என்பதால் காலில் செருப்பு அணிய முடியாமல் தரைச் சூட்டில் கால்கள் கொப்பளிக்கும் நிலை. மகிழ்ச்சி, காதல், உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டங்களில்கூட சுடும் தரையில், கொப்பளித்த கால்களில் ஏற்பட்ட வலியால் முகச்சுளிப்பையும் சேர்த்தே படம் பிடிக்க வேண்டி இருந்தது.

பெருத்த வேதனையில் படப்பிடிப்பு நடந்த அந்நாட்களில் பெண்கள் படங்களில் நடிக்கத் தயங்கினர். நாடக நடிகைகளும் புகைப்படக் கருவி தங்களின் அழகை அபகரித்து விடும் என்ற நம்பிக்கையில் நடிக்க மறுத்து விட்டனர். எனவே, ஆரம்ப காலத்தில் துணிந்து நடிக்க வந்த ஐரோப்பியப் பெண்களையும், ஆங்கிலோ-இந்தியப் பெண்களையுமே நடிக்க வைத்தனர். இதனால்தான் 1917-ல் நடராச முதலியார் தயாரித்து இயக்கிய ‘திரௌபதி வஸ்திராபரணம்' மவுனப் படத்தில் துச்சாதனனால் துகிலுரியப்படும் திரௌபதியாக நடித்தவர் ஒரு ஐரோப்பியப் பெண். அக்காலத்தில் மிக அதிகமாக ஊதியம் பெற்று நடித்தவர் ‘லியோச்சனா' எனும் ஆங்கிலோ இந்தியப் பெண். இவரின் இயற்பெயர் மரைன் ஹில்.

மேலைநாட்டினர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக ஊமைப்படங்கள் பேசும் படங்களாக உருமாறின. பம்பாய் பட நிறுவனமான ‘இம்பீரியல் மூவிடோன்' அதிபர் அர்தே ஷீயர் ஈரானி இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம்ஆரா'வைத் தயாரித்தார். இவரே தமிழின் முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தைத் தயாரித்தவர். சென்னை சென்ட்ரல் திரையரங்கில் 21-10-1931-ம் நாள் இப்படம் திரையிடப் பட்டது.

1934-ல் ராஜா சான்டோ இயக்கத்தில் வெளிவந்த ‘மேனகா' திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இவ்வாறு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதான் தமிழ்த்திரைப்படம் பேசத்தொடங்கி முழுமை பெற்றது.

பெண்கள் நடிக்கப் பயந்து போய் ஓடி ஒளிந்ததும் மறுத்ததுமான காலத்தைக் கடந்து இன்று தமிழ் சினிமா முழுவதுமே பெண்களின் கவர்ச்சிக் காட்சிகளால் நிரம்பி வழிகின்றன.

அந்தக் கவர்ச்சியின் ஓர் அத்துமீறல்தான் அண்மையில் வெளிவந்த ‘பருத்திவீரன்' திரைப்படத்தில் பெண்மையை பொத்தாம் பொதுவாகக் கேவலப்படுத்தி இருப்பது. நாயகியை ஐந்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும் பாலியல் வல்லுறவு கொள்வதாகக் காண்பிக்கப்படும் அக்காட்சி படுகேவலம். ஆடைகளை அவிழ்ப்பதும், உள்ளாடைகளைக் களைவதும் என்பதாக அமைந்திருக்கும் அந்தக் காட்சியின் முடிவு தமிழ்ச்சினிமாவினை உமிழத் தோன்றுகிறது. இத்தகைய காட்சி எந்தத் தமிழ்ச் சினிமாவிலும் இதுவரையில் வரவில்லை.

திரைப்படங்கள் எதார்த்தம் கலந்தாக இருக்க வேண்டும் என்பது சரியானதுதான் என்ற போதும் அவை கலாச்சார, பண்பாட்டுத் தளத்தினைச் செப்பணிடுவதாக இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம். பெண்கள் மத்தியில் ‘பருத்திவீரன்' படம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், பெண்கள் அமைப்புகள் இத்திரைப்படத்தை எதிர்க்காமல் போனது வியப்பாகவே இருக்கிறது. சமூகப் பொறுப்பு என்கிற வரையறைக்கு கட்டுப்படாதவர்கள்தான் இத்தகைய படங்களை எடுக்கவும் முடியும். அமீர் அந்தப் பட்டியலில் முதல் நபராக இருக்கிறார்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கிற படுக்கையறைக் காட்சியை நாடெங்கும் திரையில் ‘நீலப்படம்' போன்று காட்டுவதில் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் காலாவதியாகிப் போனது என்பதை இப்படம் நிரூபித்து இருக்கிறது. சமூகப் பொறுப்பில்லாத படங்கள் பொழுது போக்குச் சாதனம் என்கிற சராசரியான வடிவத்தை மீறி ‘காமத்திற்கு வடிகால்' என்று உருவம் கொள்வது கண்டனத்திற்கு உரியது.

பருத்திவீரன் படத்தில் வரும் காட்சியை எல்லாம் காண்பித்து சமூகத்தில் ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனால், சமூகச் சீரழிவு அதிகம் என்பதாலேயே இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

சமூக உணர்வுள்ளோரும், பெண்கள் அமைப்புகளும் எதிர்க்காமல் விட்டதால், இது போன்ற படங்களால் ஏற்படும் கொச்சைத்தனம் உச்சம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உணர்வு பெறுவோம்!
உறுதியுடன் எதிர்ப்போம்!!
இப்போக்கு வளராமல் தடுப்போம்!!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com