புதுமை படைத்திட புறப்படு....
சி.விநாயகமூர்த்தி
அழுகின்ற பெண்கள் கதைகளில் வேண்டாம்
எழுகின்ற பெண்களை இனியேனும் படைக்கவும்.
அடிமைச் சேற்றை சந்தனமாய்ப் பூசிய
அருந்ததி நளாயினியை
பூசிக்கச் சொன்னது போதும் போதும்.
செவ்வாய்க் கோள்வரை சிறகுகள் விரித்த
விஞ்ஞான வீராங்கனையை
வீட்டுக்கு வீடு விளக்குங்கள்.
மனையுறை வாழ்வே மகளிர்க்குரியதாய்
கூறும் குறுந்தொகை
சங்க நூலேனும் சற்றே ஒதுக்குங்கள்
வளைக்கரத்தில் வாளேந்திய
வேலு நாச்சியின் வீர வரலாறு
பள்ளி தோறும் பாடமாகட்டும்.
இணையாம் பெண்ணை
ஈன சாதியாய் இழித்துப் பழிப்பது
கீதையேனும் கிழித்தெறியுங்கள்
அவதாரமெடுத்த ஆண்டவன் என்ற
அகந்தையில் அத்து மீறி
பெண்ணின் மார்பை வாளால் அரிந்த
புரட்டுக் கதையைப் பொசுக்குங்கள்.
பாரதி பாடலை பறை சாற்றுங்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|