மற்றுமொரு கடல்
செல்வகுமாரி
அவளுக்குள் ஒரு கடல்
அலையடித்துக் கொண்டிருந்தது
பெரும்பசியுடன்.
சோராது தூங்கும் இரவைத்
தட்டி எழுப்பினாள்
தூக்கத்தில் விடுபடாத
கணவனையும் எழுப்பினாள்
அடுக்களை அருகில் இருந்த
கஞ்சிப் பானையில் மீந்த
பழைய சோற்றுடன் வெங்காயம் இட்டு
ஒரு கையில் பரியுடனும்
மறு கையில் கஞ்சிக்கலயத்தோடும்
கடலை வரவழைத்தாள்
மண்மீது மோகித்திருந்தன
கட்டுமரங்கள் யாவும்
தன்கணவனோடு கைசேர்த்து
எதிரும் அலைகளுக்கு எதிராகச்
செலுத்தினாள் கட்டுமரத்தை
இருள் பிரியாது
தூக்கம் கலையாது
தாவு தாங்கிச் செல்லும்
கணவனைக் கணநேரம் பார்த்தாள்
நாளை விடியுமா
நாளும் பசிதீருமா எனக்
கேள்விகளைச் சுமந்து
தாகத்தோடு வீடு திரும்பினாள்.
பொழுது விடிந்தது
கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
எனச் செய்தித்தாள் சொல்லியபோதும்
தென்புலக் கடல் நோக்கி
அவளுடனே காத்திருக்கும்
வெறும் கூடையும்
தாளாப் பசியும்
தீரா நம்பிக்கையும்...
மற்றுமொரு கடலாக...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|