நூல் அகம்
தமிழா! நீ பேசுவது தமிழா?
விலை ரூ.15/-
தொகுப்பு : அ.சி.சின்னப்பத்தமிழர்
இந்தியர்-திராவிடர் என்ற மாயையிலிருந்து விடுபடாமல் தமிழராக ஒன்றுபட முடியாது என்பது போல தமிழ்மொழியில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களைக் களையாமல் தமிழால் ஒன்றுபட முடியாது என்கிறது இந்நூல். உயிரெழுத்துக்களின் வரிசைப்படியும் மெய்யெழுத்துக்களின் வரிசையிலும் ஒவ்வொரு எழுத்திலும் அமையப்பெற்ற பிறமொழி வார்த்தைகளுக்குத் தகுந்த தமிழ் வார்த்தைகளைச் சொல்லி விளக்குகிறது. சான்றாக அகதி என்பதன் தமிழ்ச்சொல் ஏதிலி என்பது முதல் ஓமம் என்பதற்கு வேள்வி எனும் தமிழ்ப்பெயரைச் சொல்கிறது.
வெளியீடு : தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம் முதல் தெரு,
அரும்பாக்கம், பேசி : 2475 3373
தமிழரின் காலக்கணக்கு
விலை ரூ.10/-
தொகுப்பு : சின்னப்பத்தமிழர்
தமிழர்கள் காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பிரித்து ஓர் ஆண்டுக்குரிய ஆறு பருவங்களை பெரும் பொழுதிலும், ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறுபொழுதிலும் உள்ளடக்கினர். ஆறு கூறுகளுக்கு ஒவ்வொன்றும் நான்கு மணிநேரப் பொழுது மொத்தம் 24 மணிநேரம். சிறுபொழுதில் விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம், வைகறை என ஆறு கூறுகள் அடக்கம். கார்காலம், கதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற் காலம் என்பவை பெரும்பொழுதுகள்.
வெளியீடு : தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம் முதல் தெரு,
அரும்பாக்கம், பேசி : 2475 3373
இட ஒதுக்கீடு-தொடரும் விவாதம்
விலை ரூ.20/-
நலங்கிள்ளி
அனைத்துத் தரப்பினரின் திறமைகளையும் நாட்டிற்குப் பயன்படுத்த வேண்டுமானால் இட ஒதுக்கீடு என்பது மிக முக்கியம். ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்த மண்டல்குழு அறிக்கை இன்றும் எதிர்ப்பிற்குள்ளாகி வருகிறது. எனவே இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதாரமாக இந்தத் தொடரும் விவாதம் நூல் வினா-விடை வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பவர்கள் சாதியவாதிகள் அல்லவா என்ற கேள்விக்கு சாதிய அமைப்பு நிலவுவதாலேயே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்க வேண்டியிருக்கிறது என்பது பதில். இடஒதுக்கீடு தொடர்பான ஐயங்களை இந்நூல் தெளிவு செய்யும்.
வெளியீடு : சாளரம்
348-ஏ, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை-14.
த.ஒ.வி.இ.யின் பெயர்த்திருட்டு, பித்தலாட்டம், அடாவடித்தனம்
1976ம் ஆண்டு முதற்கொண்டு ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதான த.நா.மா.லெ.க.வின் ஒரு மக்கள் திரள் அமைப்பான மக்கள் உரிமை கழகம் என்ற பெயரை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் எவ்வித முன்னறிவிப்பின்றி-அனுமதியின்றி தனது புதிய அமைப்புக்கான பெயராகச் சேர்த்துக் கொண்டதைக் கண்டிக்கிறது. த.நா.ம.லெ.க.வின் இளைஞர் அணியான புரட்சிகர இளைஞர் முன்னணி இவ்வெளியீட்டினை வெளியிட்டுள்ளது.
மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்று, வரலாற்றுப் பின்னணியோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி பயன்பெற நினைக்கும் திருட்டையே உரிமைக்கான போராட்டம் என்று அறிவிக்கும் அடாவடித்தனத்தை தஒவிஇ செய்வதாகத் தெரிவிக்கிறது. தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தனது கொள்கை விளக்க நிலைப்பாடுகளில் பெரிதும் குளறுபடியான தடுமாற்ற நிலைகளைக் கொண்டிருந்தது என்பதையும் இறுதியில் அமைப்பின் பெயர்த்திருட்டு என்றளவிற்குக் கீழிறங்கி வந்துவிட்டதையும், கடுமையாகச் சாடுகிறது.
வெளியீடு : புரட்சிகர இளைஞர் முன்னணி
11, டி.எம்.பி.நகர், பாடி, சென்னை-50.
குறிப்பு: த.நா.மா.லெ.க., த.ஒ.வி.இ. இவற்றின் இடையேயான மனக்கசப்பு நமது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மையோர் இப்பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும்படி த.ஒ.வி. இயக்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். புதிய பெண்ணியம் இதழும் இந்த இடர்பாட்டிலிருந்து விலக த.ஒ.வி.இ. தான் உடனடி முயற்சியினைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கிறது. த.ஒ.வி. இயக்கமும், இயக்கத் தலைமையும் ஓர் இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ‘பெயருக்காக’ புதிதான போராட்ட வடிவங்களைக் கைக்கொள்வது சமூக அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, அமைப்பியல் அறத்திற்கும் புறம்பானது.
-ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|