மனமே மட்சி
என்.அஞ்சுகம்
பரட்டைத்தலை ஒட்டிய வயிறு
பிச்சைக்காகக் கையேந்தினாள்
இச்சையோடு கைப்பற்றியது
ஆணின் கரம்
உழைப்பிற்கு ஊதியம் கேட்டாள்
‘உறவுக்குச் சம்மதித்தால்
உழைப்பு உண்டு உனக்கு’
உறுத்தல் இல்லாது வந்தன வார்த்தைகள்’
கூனோ, குருடோ
வந்தவனுக்கு வாக்கப்படுவேன் என்றாள்
‘அக்கம் பக்கம் நாலையும்
அனுசரிச்சுப் பிழைக்கணும்
சரின்னு சொல்லு
வெறுத்துப் போனது மனசு
எந்தத் திசை ஓடினாலும்
பெண் என்பவள் உறவுக்காகவே
சமூகம் குத்திய அழுத்தமான முத்திரை
அழிக்க முடியவில்லை.
அன்பு கருணை இரக்கம்
பாவம் புண்ணியம் எல்லாம்
எந்த இடமோ தெரியவில்லை
‘பசிவந்திடப் பத்தும் பறந்து போம்’
அவளும் ஒரு நாள்
வயிற்றின் உறுத்தலுக்காலி
வாலிப உணர்வுக்கு வடிகாலானாள்...
உடன் கிடைத்த பட்டங்கள் தான்
எத்தனை யெத்தனை!
தாசி விலைமாது அது... இது....
இவையெல்லாம் என்ன...?
அழிக்க முடியாத அடையாளச் சின்னங்களா?
வரண்டுபோன மனித நேயத்தால்
வறுமைப்பெண்கள் மேல் நீங்கள்
இரக்கமின்றி வைத்த பெயர்தானே?
கறைபட்டவள் எனத் தூற்றி
தலைவியாகித் தாயாகும் தகுதி தர மறுக்கிறீர்கள்
மலைப்பயணத்தில் எதிர்பாராது நிகழும்
விபத்து போன்றது தானே இதுவும்?
ஒரு நிமிடம்.... உங்கள் அடிமனம் தொட்டு....
சொல்லுங்கள் அவளும் ஒரு பெண் தானே?
|