இசையே வாழ்க்கை
விக்னேஷ் ராம்
கண்ணுக்கு இமை காவல். காதுகளுக்கு எதுவுமில்லையே என்ற குறை எனக்கில்லை. iPod, Carphone எப்போதும் என் காதுகளுக்குள் குடியிருக்கும். சிப்ஸ், கோக் போன்ற உணவு இல்லாமல் கூட இருப்பேன். செவிக்கு உணவு இல்லையெனில் பைத்தியம் பிடித்து விடும். காதுக்குள் எப்போதும் இசைப்புயல் மையம் கொண்டு, Carphone ல் இருந்து வெளியே இசை தெறித்து விழும் அளவிற்குச் சத்தம் இருக்க வேண்டும். மெல்லிசை, மெலடி எல்லாம், என் தாத்தா, அப்பாவுக்குத் தான் லாயக்கு. நரம்புகளை முறுக்கேற்றும், வேகமான துள்ளல் இசைதான் என் விருப்பம்.
வேகம், வேகம், வேகம் தானே இளமைக்கு அடையாளம். லேட்டஸ்ட் இசை ஆல்பம், செவிவழி இதயம் தொட, என் எண்ணங்களை rewind செய்தேன். ரேடியோவின் காதைத் திருகி இலங்கை வானொலியில் கரகர இசை கேட்டது; தவமிருந்து வெள்ளிக்கிழமை ‘ஒலியும் ஒளியும்’ பார்த்தது; பாடல்கள் பொறுக்கி எடுத்து “T-Series” கேசட்டில் பாடல் பதிந்தது; பாக்கெட் மணி சேர்த்து முதல் CD வாங்கியது; பின் இப்போது இசைப்புயலை முழுவதும் தீப்பெட்டியளவு iPod இல் அடைத்தது என சிலிர்த்து, என் இதழ் என்னைக் கேட்காமல் புன்னகைத்தது. காற்று என் அழகுக்கலை நிபுணராகிக் கேசம் கலைக்க, ரகுமானின் ரத்தம் சூடேற்றும் துள்ளல் இசை என்னை பூமி தாண்டி எங்கோ பறக்க வைத்தது...
திடீரென்று இசை நின்றுவிட, நிசப்தம், பவர் கட் போல, வெறும் இருட்டு.
Low Voltage மெதுவாக ஒலியும் ஒளியும் வர, என்னைச் சுற்றி ஏன் பலபேர் நிற்கிறார்கள். என் பைக் எங்கே? என் சட்டை ஈரமாக இருக்கிறதே என்ன சிவப்பு நிற திரவம் இது. மெல்லத் தலை சுற்ற ஒரு பெரிசு பேசுவது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது. “யாரு பெத்த பிள்ளையோடு அந்தத் தண்ணி லாரிக்காரன் எவ்வளவு சத்தமா ஹாரன் அடிச்சான், நாங்களும் கத்தி ஓரமாகப் போகச் சொன்னோம். பாவம் காதுல போட்டுக்கவே இல்லை”
திரும்பவும் இருட்டு..... நிசப்தம்..... வெள்ளை உடை தேவதைகள் யாழ் மீட்டுகிறார்கள்..... முதல்முறையாய் மெல்லிசையை ரசிக்கிறேன்.....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|