தள்ளுபடிகள் தீர்வாகுமா?
இரா.முத்தெழிலன்
தேர்தல் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்ட நமது மத்திய பட்ஜெட்டின் மிகப்பெரிய அறிவிப்பாக கருதப்படுவது ரூபாய். 6 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி. அதாவது நமக்குக் கடன் தள்ளுபடி செய்வது, இலவசங்களை வழங்குவது போன்று சிறு லஞ்சத்தை வழங்கி தற்காலிக சந்தோஷத்தை அளித்து நமக்கான நிரந்தர தீர்வுக்குள் செல்லாமல் இந்த அரசுகள் நம்மை ஏமாற்றுகின்றனவோ என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது. இதனால் நாங்கள் இந்தக் கடன் தள்ளுபடியை எதிர்ப்பதாகக் கருதாமல் சரியான வழிபற்றுதலுடைய தள்ளுபடிகளையும் நதிநீர் இணைப்புத் திட்டம் போன்ற நிரந்தர தீர்வுக்கான முயற்சிகளைப் பின்பற்றவில்லை என்ற எமது ஆதங்கமே வெளிப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பொருளாதாரம், அடுக்குமாடிக் கட்டிடத்தில், குளிர்சாதன வசதி அறையில் கணிப்பொறியைப் பெருக்குவதல்ல, நமது நாட்டின் வளர்ச்சியில் இருபத்து ஐந்து சதவிகிதம் பங்குபெறும் விவசாய உற்பத்தித் திறனைப் பெருக்குவதும் அரசின் கடமையாகிறது.
நதிநீர்ப் பங்கீட்டில் பல மாநில அரசுகளின் பங்கு, அரசியல் கட்சிகளுக்கு வேறுபட்ட வாக்கு வங்கிகள் உள்ளதால் அதைப்பற்றி யோசிக்கவில்லை என்று கருதினாலும் கூட இருக்கின்ற விளைநிலங்களைச் சரியான முறையில் பாதுகாத்தார்களா என்றால் அதுவும் இல்லை. ஆம் மேற்கு வங்கத்தில் ஓர் நந்திகிராமம், மகாராஷ்டிரத்திற்கு ஒரு ராய்காட், கர்நாடகத்திற்கு நந்தக்குடி, தமிழ்நாட்டிற்கு தூத்துக்குடி என வெளிநாடு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவர்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு தொடர்கிறது.
இதற்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும் செந்தோழர்களின் நந்திகிராமத்து விளையாட்டு அவர்களின் விவசாய பந்தத்திற்குப் பெரும் பின்னடைவை தந்துள்ளது. இதை ஓர் தனிப்பட்ட இயக்கத்தின் சாடுதலாகக் கருதக்கூடாது ஏனெனில் எந்த ஒரு கட்சியும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இருக்கும் விவசாய பந்தம் ஆளும் கட்சியாக மாறும்போது அறவே புறக்கணிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம்.
நமது தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் வரவேற்கப்பட்டாலும், நதிகளுக்கிடையேயான கதவணைகள் சரியான முறையில் திட்டமிடாத காரணத்தால் 100 D.M.C. தண்ணீர் கடலில் கலந்த கொடுமையும் இந்த ஆண்டு நடந்துள்ளதே. இத்தண்ணீர்ப் பிரச்சினையால் 5.25 லட்சம் ஏக்கர் குறுவை விவசாயம் 1. 25 லட்சமாக குறைந்துள்ளது என்பதும் கவலையை அளிக்கிறது. ஆனால் இப்பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகளைப் பார்க்கும்போது சொல்லில் அல்லாமல் செயலிலும் நடைபெறும் என்று நம்புவோமாக, இதில் குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்றால் இந்நதிகளில் நடக்கும் மணல் திருட்டையும் நமது அரசு இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும்.
நமது இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தின்கீழ் அமைந்துள்ள பயிர்மாற்று விதைகளால் ஏற்படும் ஆபத்துகள் நம் கண் முன்னே நிகழ்ந்தும், அதற்கான தீர்வுகளை நாம் பின்பற்றாமல் இருப்பதும், அன்றைய சூழ்நிலையில் சம்பிரதாய குரல்களுடன் அரசியல் கட்சிகள்; நிறுத்திக் கொள்வதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் விலை மற்றும் விவசாயக் கூலிகளின் சம்பளம் உயர்ந்த போதிலும், நெல்லிற்கான குவின்டாலின் விலையை உயர்த்தாமல் அரசு இருட்டடிப்பு செய்வது வருந்தத்தக்கதே.
மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கோதுமை, இவ்வாண்டு 75 மில்லியன் டன் விளைந்திருந்தும் நம் அரசின் தேவைக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய டெண்டர் விட்ட அவலநிலையும் அரங்கேறியுள்ளது. இது அரசியல் கட்சிகளின் ஊழல்களுக்கு அடித்தளமாகிறதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.
மதிப்பிற்குரிய பிருந்தாகாரத் கூறியது போல நமது அரசு பங்குசந்தைச் குறியீட்டெண்ணில் மட்டும் குறியாக இருந்தால் போதாது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டெண் ஏன் கணக்கிடவில்லை. நமது விவசாயிகளின் தற்கொலையை பார்க்கும்போது அவர்களின் கூற்று சரியே என்று தோன்றுகிறது. கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. மேலும் உத்திரபிரதேசத்தில் ஏழு மாவட்டங்களில் 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அரசின் கணக்கீட்டிற்குள் வருகிறது. இது ஏறத்தாழ 2000 பேரை தொடும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் 385 பேர் ஆந்திராவிலும், கர்நாடகத்தில் 1999 முதல் 2001 வரை 110 விவசாயிகளும், இராஜஸ்தானில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 3329 விவசாயிகளின் தற்கொலை அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 505 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தினம் ஒரு தற்கொலையா என்னும் அளவிற்கு எண்ணத் தோன்றுகிறது. 2008 பட்ஜெட் அறிவித்த பின் கூட 3 விவசாயிகள் ஒரிசாவில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநில விதர்பா தற்கொலைக்கு நமது பாரத பிரதமர் நேரடியாகச் சென்று சுமார் 11-ஆயிரம் கோடி அளவு நிவாரண நிதியாக வழங்கிய போதும் தற்கொலைகள் இரு மடங்காகக் கூடியது. மேலும் தானிய உற்பத்தி 212 மில்லியனிலிருந்து 174 மில்லியனாக குறைந்ததே கடன் தள்ளுபடிகள் மட்டும் விவசாய நலனுக்கான தீர்வாக அமையாது. மேலும் உலகமயமாக்கல் மற்றும் உலக வர்த்தக மையத்தினுடைய நமது ஒப்பந்தங்களில் மாற்றங்கள், பயிர் மாற்று விதைப் பயன்பாடுகளில் தெளிவான சிந்தனை, கால்நடைகளுடைய பயன்பாட்டை அதிகரித்தல், கந்துவட்டிக் கடனிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றுதல், பயிர்களுக்கான நஷ்டஈடு வழங்குதல், விவசாயிகளுக்கான முன்னுரிமை வழங்கும் திட்டங்கள், உயிர் உரங்களின் பயன்பாடுகளை அதிகரித்தல், விவசாயிகளின் குழந்தைகளுக்குச் சரியான முறையில் கல்வி ஏற்படுத்துதல், சிறந்த ஆலோசகர்களை வைத்து ஆலோசனை வழங்குதல், விவசாய உற்பத்தித் திறனிற்கேற்ற விலையை நிர்ணயிப்பது, பயிர்மாற்று விவசாயத்தினால் ஏற்படும் பயனை எடுத்துரைப்பது, இயற்கை இடர்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விவசாயிகளை ஊக்குவிப்பது, சிறு விவசாயிகளுக்கான நிதி உதவியை உயர்த்துவது முதலியன நலன் பயக்கும், அரசிற்கும் கிராமத்திற்குமான தொடர்பை வலுப்படுத்தி விவசாயிகளின் பற்றாக்குறையை போக்கி வளங்குன்ற விவசாயத்திற்குச் அரசு பாதை போட வேண்டும் என வேண்டுகிறோம்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|