தலையங்கம்
.
நண்பர்களே,
சிற்றிதழ்களின் வழமையைப் போல, இந்த இதழும் தாமதமாக வருகிறது. நெய்தல் முதல் இதழைக் குறித்த விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. பாராட்டுகளும் குறைகளும் நிறைய. முக்கியமாய் இதழின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு குறித்த குறைகள் அதிகம் சுட்டிக் காட்டப்பட்டன. பின்வரும் இதழ்களில் இவற்றை மேம்படுத்த நெய்தல் குழு உழைக்கும்.
ஆசிரியர் குழு
சங்கர்
முத்தெழிலன்
சபரிநாதன்
ரமேஷ்
சௌந்தரராஜன்
கிருஷ்ணராஜ்
மோகன்ராஜ்
கோப்பெருஞ்சோழன்
ஜெயப்பிரகாஷ்வேல்
தொடர்புக்கு:
ம. ஜெயப்பிரகாஷ்வேல்
நெய்தல்
மு.புத்தூர் அஞ்சல்
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம்-621 203
செல் : 98405 29274
[email protected]
|
அறிவியலை எளிய தமிழில் அனைவருக்குமான தளத்தில் வழங்கி வந்த சுஜாதா என்கிற பன்முக எழுத்தாளனின் மறைவு மிகவும் வருந்தற்குரியது. சுஜாதா இயங்கிய தளங்களில் இருக்கிற வெற்றிடத்தை நிரப்ப புதிய எழுத்தாளர்கள் வெளிவர வேண்டும். மாண்புமிகு நிதியமைச்சர் சிதம்பரம் 6 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கும் இந்தத் தருணத்தில், விவசாயிகளின் நிலை பற்றியும் விவசாயத்தின் எதிர்காலம் பற்றியும் முத்தெழிலன் எழுதும் கட்டுரை இந்த இதழில் இடம் பெறுகிறது.
நிதியமைச்சர் கடன் தள்ளுபடி அறிவித்த சில தினங்கள் கழித்தும் கூட இன்று விவசாயிகள் ஒரிசாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனி மனிதனுக்காக நாட்டையே அழிக்கிற, கலாச்சாரத்தையே அழிக்கிற இந்த உலகில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதும் பட்டினியால் சாவதும் இந்த நாட்டில் மட்டும்தான் வெறும் காகிதச் செய்தியாக நின்று விடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சினிமா, தவிர்க்கவியலாத ஊடகமாக வளர்ந்து வருகிறது. மிகை யதார்த்தம் பேசும் படங்களுக்கு மத்தியிலும் சில நல்ல சினிமாக்கள் வருவது ஆறுதல், சமூகத்தின் முக்கிய அம்சமாகிய குழந்தைகளையும் அவர்களை வளர்க்கும் கலையின் முக்கியத்துவத்தையும் வெகு அரிதாகவே திரையில் காட்டியுள்ளனர். அத்தகைய அரிய முயற்சியாக அமீர்கானின் “தாரே ஜமீன்பர்” வந்துள்ளது. குழந்தைகளின் உலகையும், அவர்களைக் கையாள வேண்டிய விதத்தையும் நுட்பமாக அதே சமயம் மிக எளிமையாகச் சொல்கிற படம் இது. இந்தியத் திரைவானம் என்று சொல்கிறார்களே அதில் இந்தப்படம் நிச்சயம் ஒரு நட்சத்திரம்.
மாணவர்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ் கூடுமானவரை மிக எளிமையாகப் பயணிக்க விரும்புகிறது. மாணவப் படைப்பாளிகளின் பங்களிப்பை வெகு ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளது. இதழ் கிடைக்கப் பெறும் நண்பர்கள் தங்களின் வட்டாரத்தில் உள்ள மாணவப் படைப்பாளிகளிடம் அறிமுகப்படுத்துங்கள். புதிய நீரோட்டம் பாய நெய்தல் களமாக இருக்கும்.
எங்களின் எளிய இதழில் தொடர்ந்து எழுதுகிற ஆதரவளிக்கிற எழுத்துலக நண்பர்களுக்கு நிறைய நன்றிகள். தொடர்ந்து உடனிருங்கள், நிறைய செய்வோம்.
|