நாலு வார்த்தை
மண்மொழியின் 24வது இதழ் இது. முந்தைய இதழுக்கு இந்த இதழ் சற்று கூடுதல் இடைவெளி. மின்வெட்டுச் சிக்கல், சில வெளியூர்ப் பயணங்கள், வேறு சில புறப்பணிகள் ஆகியன இதழ் பணிக்காக நமக்கு வாய்க்கும் தருணங்களைக் குறைத்து, ஆக்கத்தைச் சற்றுத் தள்ளிப் போட்டு விட்டன. இருமாத இடைவெளியில் என்னதான் பக்கங்கள் கூடுதலாக வருவதாக மனம் நிறைவடைவதானாலும், இடைவெளி கூடுவது தொடர்பே விட்டது போல், அல்லது ஒரு நீண்ட தேக்கத்தை ஏற்படுத்துவது போல் ஆகிவிடுவதை உணர முடிகிறது. எனவே, இந்த ஆண்டு நவம்பர் - திசம்பருக்கு இன்னும் ஒரு இதழ் கொண்டு வந்துவிட்டு பிறகு, அடுத்த ஆண்டிலிருந்து இதை முறைப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.
நிர்வாகி
இராசேந்திரசோழன்
நிர்வாகக்குழு
காஞ்சி அமுதன்
சக்தி சுப்பு
பொன்.மாயவன்
மா.மு.பூங்குன்றன்
தொடர்பு முகவரி:
மண்மொழி வெளியீட்டகம்,
காந்தி நகர், மயிலம் - 604 304,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி: 04147-241256
கைபேசி: 94432-12761
|
இதனிடையே இன்னொரு கருத்தும் எழுகிறது. மண்மொழி நல்ல வரவேற்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், எல்லோரது ஏகோபித்த ஆதரவையும், பாராட்டுகளையும் பெற்றே வெளிவந்து கொண்டிருக்கிறது. என்றாலும் இதழைக் கொண்டு வருவதில், முறையாக அனுப்பி வைப்பதில் தற்போதைக்கு நம்மிடமுள்ள மனித ஆற்றல் போதாமையால் எழும் சிந்தனை இது.
அதாவது, யாராவது தமிழ்த் தேசிய உணர்வோடு கூடிய வசதி படைத்தவர்கள் எவரும், ‘மண்மொழியை’ இப்போதுள்ளது போலவே, முழு சுதந்திரத்தோடு நடத்துங்கள், மற்றபடி அதன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பொறுப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முன் வந்து இதழின் அகக்கட்டுமானத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டால், இதை இன்னும் சீரோடும் சிறப்போடும் கொண்டு வரலாம் என்றுபடுகிறது.
பல நேரங்களில், தேவை ஒருபுறமும், அதை நிறைவு செய்கிற ஆற்றல், விருப்பம் ஒருபுறமும் இருந்து இரண்டிற்கும் தொடர்பு இல்லாமல் போய் விடுவதனாலேயே பல பணிகள் விரும்பியவாறு செய்து முடிக்கப்படாமல் போகின்றன என்பதால் இது ஓர் அறிவிப்பாகவே வெளிப்படையாக இப்படி தெரிவிக்கப்படுகிறது. அப்படி யாரும் உணர்வாளர்கள் இருந்து, இந்த செய்தி அவர்களது கவனத்திற்குச் சென்று, யாரும் முன்வந்தால் பார்ப்போம். இல்லாவிட்டாலும் இதழ் நொண்டியடித்தேனும் தன் பயணத்தைத் தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.
சரி. இந்த இதழுக்கு செய்திகள் ஏராளம். இன்னமும் எவ்வளவோ சொல்லவேண்டும். எழுத வேண்டும் என்று இருக்கிறது. பக்க வரம்பு எதையும் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே சொல்லக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, எல்லா செய்திகளைப் பற்றியும் பேசவேண்டும், ஒவ்வொன்று பற்றியும் நம் நிiயைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்கிற விழைவு அதிகமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு இதழும் மிகுந்த மனக் குறையோடே - எடுத்து வைத்த செய்திகள் பற்றி யெல்லாம் சொல்ல முடியவில்லையே என்கிற ஆதங்கத்தோடே வெளிவருகிறது. என்றாலும், பயணத்தின் போக்கில் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் ஒரு தீர்வு கிட்டும் என்று நம்பிக்கையிருக்கிறது.
எனவே, இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி பங்களிப்பு செலுத்த முடியும் என்று யோசியுங்கள். வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம் மண்மொழி மேம்பாட்டுக்கு உதவி, தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தையும் முன்னேற்றிச் செல்ல உதவுங்கள்.
நல்லது. பார்ப்போம்.
தோழமையுடன்
ஆசிரியர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|