சாமானியர்களுக்குத் தமிழ்த்தேசியம் ஓவியர் வீர.சந்தனம் விடையளிக்கிறார்
1. காவிரி சிக்கல் அப்படியே கிடப்பில் போட்டதுபோல் ஆகிவிட்டதே? மு. குமரேசன், சீர்காழி
ஆமாம். தாகம் எடுக்கும்போது தண்ணீர் ஞாபகம் வரும். பிறகு மறந்து போய்விடும். இது தனி மனிதருக்கு மட்டுமல்ல, அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். இப்போது தென்மேற்கு பருவமழை நன்கு பெய்து கர்நாடகா அணைகள் நிரம்பி வழிவதால் வேறு வழியில்லாமல் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது. இப்படி போதுமான மழை மட்டும் பெய்யா மலிருந்தால் அப்போது தெரிந்திருக்கும் உண்மை நிலவரம்.
இடைக்கால தீர்ப்பு என்றும் இறுதி தீர்ப்பு என்றும் அதன்மீதான வழக்கு என்றும், நாட்கள் போய்க்கொண்டே இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு இது வசதியாய் போய் விட்டது. எல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதைதான் என்பதை எல்லோரும் அறிவார்கள். இதில் முதல் குற்றவாளி முத்தமிழ் அறிஞர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழர்கள் தூங்கிக் கிடக்கிறார்கள். தலைவர்களால் தட்டித் தாலாட்டித் தூங்கவும் வைக்கப்படுகிறார்கள். கன்னடர்களோ தூங்குவது இல்லை. தூங்க வைக்கப்படுவதும் இல்லை. இப்பொழுது பாருங்கள். எங்களது நிலத்தை மறு ஆய்வு செய்யாமல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கக்கூடாது என்றும் தமிழக எல்லையில் இருந்தால் நாங்கள் ஏன் தடுக்கப் போகிறோம் என்றும் வம்புக்கு வருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க, இயற்கைக் கொடை அருள்கிற வரைக்கும் காவிரிச் சிக்கல் தெரியாதுதான். காயும்போதுதான் தெரியும் அதன் உண்மையான சிக்கல்.
2. கேரள அரசு கண்ணகி கோயிலை கைப்பற்ற முயலுகிறதே? வே. கலிவரதன், மேட்டுப்பாளையம்.
கண்ணகி தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம். பெண் போராளி. வண்ணத்திப் பாறையில் அமைந்திருக்கும் கண்ணகி கோயில் தமிழக எல்லையில் உள்ளது. சுற்றுப்புற சுவர்களில் தமிழ் எழுத்துகள் உள்ளன. வண்ணத்திப் பாறைக்கு செல்வதற்கான வழி நமது தமிழக எல்லையிலேயே இருந் திருக்குமானால், இதில் கேரள அரசு தலையிட எந்த நியாயமும் இருந்திருக்காது. கண்ணகி கோயிலுக்குப் போகும் வழி கேரள எல்லை வழியாக இருப்பதால்தான் இடையூறு செய்கிறார்கள். கண்ணகியை வழிபடுவதற்கு தடையில்லை என்ற தீர்ப்பும் உள்ளது.
முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அவர்களே அனுபவிக்க, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என்றும், குமுளி மூழ்கி பல்லாயிரக் கணக்கானோர் மாண்டு மடியப் போகிறார்கள் என்றும் தெருத் தெருவாக சென்று மாரடித்து ஒப்பாரி வைத்தவர்கள் இவர்கள். மறந்து விடக்கூடாது. தேவி குளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரையை இழந்ததினால் வந்த வினை இது. இப்போது கண்ணகி கோவிலுக்கு குறி வைத்திருக்கிறார்கள்.
அடுத்தவர் மண்ணை அபகரிக்க அண்டை மாநிலத்தவர் காட்டும் முனைப்பு, சொந்த மண்ணைக் காப்பாற்ற, தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களும் அரசும் காட்டவில்லை என்பதே உண்மை. எனவே, நாம் விழிப்போடிருந்து கண்ணகி கோயிலைப் பாதுகாக்க வேண்டும். நமது பாரம்பரிய அடையாளத்தை நிலை நிறுத்தவேண்டும்.
3. ரஜினிகாந்த் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளாரே? - சு. பக்கிரிசாமி, தியாகதுருகம்
ஆம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்த கர்நாடகாவை கண்டித்து தமிழக திரைப்படத் துறையினர் மேறகொண்ட உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழன் சத்தியராஜ் எதிரிகளை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இளிச்சவாய் தமிழனை நினைத்து பொங்கி எழுந்தார். அவர் இருக்கையில் அமர்ந்த பின்பும், அவர் உதடுகள் கோபத்தோடு துடித்ததை சின்னத்திரையில் பார்த்தேன். தமிழன் என்ற முறையில் தொலைபேசியில் அவரை வாழ்த்தினேன்.
சத்தியராஜ் பேச்சைக் கேட்டு அடுத்து பேச வந்த ரஜினிகாந்த், அவரை மிஞ்சும்நோக்கிலோ என்னவோ உணர்ச்சியின் எல்லைக்குப் போய், ‘தவிச்ச வாய்க்கு தண்ணீர் தரலன்னா அவர்களை உதைக்க வேண்டாமா’ என்று பலரின் ஏகோபித்த கைத்தட்டல்களுக்கிடையே முழங்கினார். அப்போது தான் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது தவறு என்று உணர்ந்திருந்தால் மறுநாளே தவறுக்கு வருந்துகிறேன் என்று கூறியிருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த குசேலன் திரைப்படம் குடுவைக்குள் சுருண்டது. கருநாடகத்தில் படத்தை ஓட்ட விட மாட்டோம் என்று ரகளை செய்தார்கள். அதற்காக இப்போது அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இல்லை இல்லை, வருத்தம்தான் தெரிவித்தார் என்று சிலர் சொல்கிறார்கள். வருத்தமோ, மன்னிப்போ எதுவானாலும், மறுநாளே தெரிவித்திருந்தால், அவரது பண்பை நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். ஆனால் அதைவிட்டு இப்போது வந்து வருத்தம் தெரிவித்தால் என்ன பொருள் ? தான் ஒரு அப்பட்டமான சுயநல நோக்குள்ள வெறும் திரைப்பட வியாபாரி என்பதுதானே. அதுதானே தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இப்போதாவது உண்மையை உணர்ந்து இந்த மாயையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுபட்டால் சரி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|