என் பெயர் பாலாறு
காஞ்சி அமுதன்
பாலாறு தன் கதை கூறும் சோகம் கப்பிய 82 நிமிட ஆவணப்படம் தான் என் பெயர் பாலாறு. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தி ஆகும் இடம் தொடங்கி ஆந்திரத்தில் சித்தூர் மாவட்டம் வழியாக தமிழ் நிலத்தில் படர்ந்து பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமம் அருகே கடலில் கலக்கும் வரை இதில் பாலாறு உயிரோவியமாய் காட்டப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது மூன்று மாநிலங்களின் ஆறாகப் பகுக்கப்பட்டது பாலாறு. 1892, 1924 ஆண்டு ஒப்பந்தங்களுக்கு மாறாக கர்நாடகம் தனது பகுதியில் பாயும் பாலாற்றில் பேதமங்களம், ராமசாகர் உள்ளிட்ட சிறிய பெரிய அணைகளை தன்னிச் சையாக கட்டி தண்ணீரை தடுத்து வைத்துள்ளது. மூடப்டாத கோலார் தங்கவயல் சுரங்கங்களில் மழைநீர் தேங்கி ஆற்றில் நீர் பெருக்கெடுக்க வழியில்லாத நிலையும் உள்ளது.
சித்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள பாலாற்று பள்ளத்தாக்கு பகுதியில் 22 தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தடுத்து சிறை வைத்துள்ளது ஆந்திர அரசு. தமிழக எல்லையில் உள்ள 20 மீட்டர் உயர புள்ளூர் தடுப்பணையில் தண்ணீர் வெள்ளமாய் பாய்வதை படத்தில் காணும்போது நெஞ்சமெல்லாம் கனக்கிறது. வழியும் நீரும் வருவதை தடுக்க கணேசபுரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டத் துடிக்கிறது ஆந்திரம்.
தண்ணீருக்கு தவிக்கும் தமிழ் மண்ணில் பாலாறு ஆக்கிரமிப்புகளினால் பாதை சுருங்கி வாணியம்பாடியில் நுழையும் போதே தோல்கழிவு நஞ்சை கலந்து வரவேற்கும் அவலமும் - ஆம்பூர் பகுதியில் சாக்கடை கழிவுடன் - தோல் துண்டுகள் ஆற்றிலே கொட்டி ஆற்றை அழிப்பதையும் காண்போர் கண்களும் கலங்கும்படியான அவலம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலாற்றங்கரையிலிருந்தாலும் 9 நாளுக்கு ஒருமுறை நீர் பெறும் ஊராக உள்ளது வேலூர். உலகத்தின் கேழுடை நகரங்களில் ஒன்றாக உள்ள ராணிப்பேட்டை பகுதி பாலாற்றில் கருந்திரவமாக தண்ணீர் ஒடைபோல் ஒடுகிறது. இந்த நீர் ஆங்கிலேயன் காலத்தில் கட்டிய புதுப்பாடி அணையில் வெள்ளமாய் வந்து கொண்டு இருக்கிறது. எஞ்சிய ஆற்று நீரையும் காவுவாங்க கழிமுகம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
நோய் நொடி வராமல் தூய நீர் தந்த மணற்படுகை, ஆற்றில் வெள்ளம் வராத போதும் நீரை அணைபோல் காத்து தண்ணீர் தந்த மணற்படுகை, வேளாண்மை, தொழிற்கூடங்களுக்கு தண்ணீர் தந்த மணற்படுகை, இருகரை ஊர்கள் மட்டுமின்றி தலைநகராம் சென்னை கிண்டிவரை தண்ணீர் தர காரணமாக இருந்த மணற்படுகை அற்ப லாப நோக்கத்திற்காக இரவும் பகலும் 24 மணி நேரம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
எந்த தொலைநோக்கு பார்வையும் இன்றி அரசும், பொதுப்பணித்துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் கைகட்டி வாய்பொத்தி மௌனம் காத்து ஆற்றையே அழிக்கின்றன. இந்த அவலத்தை தோலுரிக்கும் வகையில் உலக ஒளியின் பின்னணி பாடல் மணல் லாரிகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறே தங்கள் வாழ்வென கருதும் மக்களின் மனக் குமுறல்கள் சிறப்பாக படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணற் கொள்ளையை எதிர்த்த விஷார் பகுதி மக்களின் போர்க்குணம் உரிய வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாலாற்றின் கரை நெடுகிலுமுள்ள சர்க்கரை ஆலை, சாராய ஆலை கழிவுகள் எந்த வரை முறையும் இன்றி கலக்கப்படும் அவலமும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களினால், தமிழகத்தின் பாலாற்று நீர் உரிமை மறுக்கப்பட்டு அணைகள் கட்டுவதாலும், ஆக்கிரமிப்பு, தோல் தொழில் நச்சுக் கழிவுகள், மணற்கொள்ளை ஆகியவற்றாலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வையே கேள்விக் குறியாக்கி உள்ளது. மனக்குமுறலும் - அநீதியை எதிர்க்கும் ஆற்றலும் உள்ள மக்கள் சிதறிகிடந்து உண்மை அறியாமல் கிடக்கும் நிலையில் சமூக ஆர்வலர்கள், பொறியாளர்கள், நியாய உணர்வுமிக்க அரசியல் தலைவர்கள், மகளிர் என அனைத்து தரப்பு மக்களின் மன உணர்வுகளையும் பதிவு செய்துள்ள என் பெயர் பாலாறு என்கிற ஆவணப் படத்தை நீர் உரிமை பாதுகாப்பு இயக்கம் (செங்கல்பட்டு) தயாரித்து வெளியிட்டுள்ளது.
ஆவணப்பட அறிஞர் காஞ்சனை சீனிவாசனும் தொழில்நுட்ப கலைஞர்களும் நெஞ்சைத் தொடும் வகையில் படத்தை செதுக்கி உள்ளார்.
பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் மற்றும் தோழர்களும், கருத் ரைகள் வழங்கி, பல நெருக்கடிகளை கடந்து படத்தை எடுத்து முடிக்க உதவி செய்துள்ளனர். பண்டைய காவிரியாம் இன்றைய பாலாற்றின் அவலத்தை பாருங்கள் - ஆற்றை காக்க அணு வேணும் உதவுங்கள்.
முகவரி :
காஞ்சி அமுதன்
ஒருங்கிணைப்பாளர்
பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம்,
22எ, வைகுண்ட பெருமாள் கோயில் தெரு,
காஞ்சிபுரம்.
சமூக பண்பாட்டு இயக்கம்,
நீர் உரிமை பாதுகாப்பு இயக்கம்,
மாமண்டூர், செங்கல்பட்டு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|