சாமானியர்களுக்குத் தமிழ்த்தேசியம் ஓவியர். வீர. சந்தனம் விடையளிக்கிறார்
1. பாகிஸ்தான் இறையாண்மையைப் பற்றிக் கவலைப்படாத இந்திய அரசு, இலங்கை இறையாண்மையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறதே. இது நியாயமா?
- கு. நடராசன், பெரம்பலூர்
நியாயமில்லைதான். இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக ஆனதில் இருந்து பாகிஸ்தானை தனது எதிரி நாடாகவே பார்க்கும் மனோபாவம் இந்தியாவிற்கு இருந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையையும் இந்தியாவிற்கு தலைவலியாய் ஆக்கியது பாகிஸ்தான். இதன் வெளிப்பாடாகவே கிழக்கு பாகிஸ்தான் போராட்டத்தை ஆதரித்து நேரடியாகவே படையை அனுப்பி பங்களாதேஷ் என்கிற நாட்டை உருவாக்கித் தந்தது இந்தியா. ஆனால் இந்தியப் பெருங்கடலில் உள்ள அண்டை நாடான மாலத்தீவில் புரட்சிகாரர்கள் நுழைந்தார்கள் என்றவுடனே சில மணி நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இந்தியப் படை நுழைந்து புரட்சியாளர்களைத் தேடி அழித்து கைது செய்து, அதிபர் கையூமை காப்பாற்றி தனது ஆதரவு நாடாக்கிக் கொண்டது.
அதுபோலவே இலங்கையை தனது செல்ல நாடாக வைத்துக் கொள்வதற்காக ஆயுதங்களும், ராடர்களும், பயிற்சியாளர்களும் தந்து வருவதோடல்லாமல், சுமார் 2000 கோடி ரூபாய் வட்டி இல்லாக் கடனும் தந்து உதவி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இந்தியாவிற்கு கவலை இல்லை. நாடற்றவர்களாய் புலம் பெயர்ந்து உள் நாட்டிலேயே அகதியாய், வெளி நாட்டிலே அனாதைகளாய் வாழும் தமிழர்கள் குறித்தோ இதனால் தமிழ்நாட்டில் ஏற்படும் குமுறல்கள் குறித்தோ கவலைப்படுவதில்லை. கேட்டால் இலங்கை இறையாண்மையில் தலையிட முடியாது என்கிறார்கள்.
சீனா, பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்று சாக்கு போக்கு சொல்லி இந்தியா இலங்கையைத் தன் செல்லப் பிள்ளையாக வைக்க விரும்பி தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு உதவி ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் ஆறு கோடி தமிழர் நெஞ்சில் இந்திய இறையாண்மை பற்றி மாற்று சிந்தனை விளைவதைத் தவிர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை எழாது தடுப்பது இந்தியாவின் கையிலதான் உள் ளது. ஆகவேதான் கேட்கிறோம் “தொப்புள் கொடி உறவுக்கு கை கொடுங்கள், தொழுங்கை படை ஒடுங்கா நிலை எடுங்கள்” என்று.
தமிழ் ஈழத்தின் தற்போதைய நிலைமைதான் என்ன?
- இளம்பரிதி, இராசபாளையம்.
துயரமாகத்தான் இருக்கிறது. சொந்த நாட்டில் சொந்த வீட்டை இழந்து ஏதிலிகளாக குழந்தை குட்டிகளோடு குந்தவும் இடமின்றி தூக்கமின்றி, மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், பாம்பு, தேள் பூச்சிக் கடிகளில் சிக்கியும் சொல்லொணாத் துயரை அடைந்து வருகின்றனர். சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் 54 ஆயிரம் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. 2 இலட்சம் வீடுகளும் பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அழியா சின்னங்களும் தூளாக நொறுக்கப்பட்டுள்ளன.
பல்வேறுப்பட்ட ஆயுதங்களாலும், பீரங்கிகளாலும் கொத்து குண்டுகளாலும் தாக்கியும், வாள்களால் வெட்டியும், வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டும் இறந்தவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் என்று சொல்லப்படுகிறது. ராணுவத்தை எதிர்த்து சமர் புரியும் போராளிகள் இதுவரை 22 ஆயிரம் பேர் வித்துடலாகி இருக்கிறார்கள். 14 ஆயிரம் குழந்தைகள் மனநோய்க்கு ஆளாகி இருக்கின்றார்கள். அவர்களை ஏதேனும் வரையச் சொன்னால் துப்பாக்கிகளை வரைகிறார்கள். உடைந்த சிதிலமடைந்த வீடுகளை வரைகிறார்கள். மனம் சிதறுண்டு கிடக்கிறது.
இந்திய விடுதலைப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டவில்லை. ஆனால் ஒரு குட்டித் தீவில் தமிழனின் வரலாற்று மண்ணில் எவ்வளவு கொடுமை. நாதியற்றுப் போகலாமா தமிழினம். ஆறுதலாக சில செய்திகள் : “எம் வரலாற்று மண்ணை மீட்டே தீருவோம், அலை அலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புகளை எல்லாம் நேருக்கு நேர் சந்திக்கிறோம். புயலாக எழுந்த பேராபத்துகளை மலையாக நின்று எதிர்கொண்டோம். எமக்கு இது புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல” என்று மாவீரர் நாளில் ஒலித்ததே அந்த மாவீரனின் குரல்.
கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் முன்னேற முடியாமலும், பின்னுக்கும் செல்ல முடியாமலும் சிக்கிக் கொண்டார்கள் என்றும் புதை குழிக்குக் போவது உறுதி என்றும் செய்தி வருகிறது. உலகத்தில் 122 நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளால் (கிளஸ்டர் பாம்) செத்து மடியும் அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற “போரை நிறுத்து” என்று தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களும் குரல் எழுப்புகிறார்கள். தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழினத் தலைவர்களை கோமாளி என்கிறான் பொன்சேகரா என்கிற இலங்கை ராணுவத் தளபதி. அவன் கொட்டம் அடங்க தமிழகம் கொதித்தெழ வேண்டும்.
“வாருங்கள் புலிகளே, தமிழீழம் காப்போம். வாழ்வா சாவா, ஒரு கை பார்ப்போம்” என்கிற கவிஞர் காசியானந்தனின் பாடல் வரிகள்தான் காதில் கேட்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|