சாமானியர்களுக்குத் தமிழ்த் தேசியம் ஓவியர் வீர.சந்தனம் விடையளிக்கிறார்
1. ஈழச்சிக்கலில் ஒன்றாய் நின்ற கட்சிகளைக் கூட தேர்தல் இப்படி அணிமாற வைத்து விட்டதே. இதில் உணர்வாளர்கள் நிலை என்னாவது?
சி. பத்மநாபன், திருநெல்வேலி
காங்கிரஸ் இனத் துரோகம் புரிந்து வருகிற கட்சி. இலங் கைக்கு ஆயுதம், ராடார், பயிற்சி, பணம், படை என எல்லா உதவியும் செய்து வருகிறது. இதுவரை போரை நிறுத்து என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பது உணர்வாளர்கள் அனைவரும் அறிந்த கதை. முத்தமிழ் அறிஞரோ தமிழ் நாட்டின் மக்கள் திரள் தமிழீழ எண்ண ஓட்டத்தில் கலந்து நிற்பது கண்டு மிரட்சியில் இருக்கிறார். அவற்றை திசை திருப்புவதற்கு உண்ணாவிரத நாடகமெல்லாம் நடத்தி போர் நின்று விட்டது என்றார். பிறகு பத்திரிகையாளர்களிடம் மழை விட்டாலும் தூவானம் தொடரும்தானே என்றார். இதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது டீ சாப்பிடலாம், வாங்க என்கிறார். இதுபற்றி பலரும் நையாண்டி செய்யும் அளவிற்கு கேவலமாக போயிருக் கிறது முதல்வர் கருணாநிதியின் நிலை.
ஆனால், மருத்துவர் ஐயா தமிழீழம்தான் தீர்வு என்று அதில் உறுதியாக இருந்து போரை நிறுத்த பல்வேறு வழிகளை சொல்லிக் கொண்டு வருகிறார். ராஜபட்சேவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வாழ் நாளெல்லாம் ஈழத் தமிழருக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் தம்பி பிரபாகரனையும், ஈழத்தையும் உயிரை விட மேலாக நேசிப்பவர். இதற்காகத் தன் அரசியல் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டாலும் அஞ்சப் போவதில்லை என்று ஓங்கி முழங்கி வருகிறார்.
இது நாள் வரை போராளி எதிர்ப்பு நிலை கொண் டிருந்த ஜெ.வே தற்போது ஈழம் குறித்த உண்மை நிலை மையை உணர்ந்து, தமிழர்களும் சிங்களவர்களும் சம உரிமை பெற்று வாழ வேண்டும். இல்லையேல் தமிழீழம் அமைக்க பாடுபடுவேன் என்று கூறியதுடன் மீண்டும் மீண்டும் தமிழகம் முழுக்க அதை உறுதிபட முழங்கி வருகிறார். ஆனால், ஈழப்பிரச்சனையில் கண் துஞ்சாது உழைத்து தமிழ்த் தேசியத்தை வளர்த்த தமிழ்நாட்டுத் தம்பி தொல் திருமாவோ, காங்கிரசை கருவறுப்பேன், வேரையும் வேரடி மண்ணோடும் அகற்றுவேன் என்று முழக்கமிட்டவர், நான் மூப்பனாரால் வளர்க்கப்பட்டவன், காங்கிரசின் விசுவாசி என்கிறார். ஈழப்பிரச்சினையில் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால், அவர்தான் தற்போது துரோகக் கூட்டணியில் இருந்து வருகிறார்.
ஜெ. போராளி எதிர்ப்பு நிலை கொண்டிருந்த வரை திருமா இந்த அணிக்குத் திரும்பாமலிருந்ததில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், ஜெ. நிலையில் மாற்றம் ஏற்பட்ட பின்னும், இவர் தன்னை மாற்றிக் கொள்ளாது கொலைக்கார காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் நிற்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் உணர்வாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி. இந்த நிலையில் உணர்வாளர்கள் யாரை ஆதரிக்க வேண் டும் என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே, களவாணித்தனம் பண்ணும் காங்கிரசுக்கும் அதற்கு துணை போகும் தி.மு.க.வுக்கும் வாக்களிக்காதீர். அவர்களுக்கு அளிக்கும் வாக்குச் சீட்டானது தமிழினம் தன் தலையில் தானே வைத்துக் கொள்ளும் தீக்கு ஒப்பானதாகும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
2. ஈழத் தமிழர் சிக்கலில் உலகம் உரியவாறு கண்டிக்கவில்லையே. ஏன்?
வெ. சுந்தரமூர்த்தி, வாலாசாபேட்டை
உலக நாடுகள் உரியவாறு கண்டித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்காததற்கு பல சர்வதேசக் காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தின் அண்டையில் உள்ள நாடு இந்தியா. இது இலங்கைக்கு உதவுகிறது. சொல்லப் போனால் இந்தியாதான் போரை நடத்துகிறது. உலகில் வல்லமை மிக்க நாடுகள் சீனாவும், ரஷ்யாவும் இலங்கைக்கு உதவுகின்றன. இதனால் உலகில் பிறநாடுகளும் இலங்கைப் பிரச்சனையில் எச்சரிக்கையாக அடக்கியே வாசிக்கின்றன.
இனவெறியின் ராஜபட்சேவின் ஆட்சி ஹிட்லரின் நாசிசப் படைகள் யூதர்களை செய்ததை விட கோரக் கொடுமை புரிந்து, தமிழர்களைக் கொலை வெறியோடு கொன்று வருகிறது. வரலாறு காணாத அளவிற்கு மனித பேரழிவு ஏற் பட்டுள்ளது. 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீதி, நிதி நிர்வாகம் என்று ஆட்சி செய்த தமிழன் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முடங்கி கிடக்கின்றார்கள். இதற்குள் ளிருந்துதான் போராளிகள் போராடுகின்றார்கள். இந்த நிலைக்கு காரணம் இந்திய அரசு.
போரை உடனே நிறுத்து! இனப் படுகொலை செய்யாதே என்று ஐ.நா. தலைவர் பால்கிமுன் கூறுகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, தென்னாப்பிரிக்கா போன்ற உலகநாடுகள் பல ஒரே குரலில் போரை நிறுத்தக் கோரு கின்றன. உலகத் தமிழர்கள் பலர் போரை நிறுத்து என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். உண்ணாநிலை மேற் கொள்கிறார்கள். இருவர் இறந்தும் இருக்கிறார்கள். டர்பன் மாரியம்மன் கோயிலில் தமிழ் ஈழ விடுதலை முன்னணி தலைவர் 76 வயதுடைய ஈழவேந்தன் உண்ணா நிலை மேற்கொண்டுள்ளார். இப்போது அறிஞர்கள் பலர் வேண்டு கோள் விடுகிறார்கள். “நம்பிக்கையூட்டும் வகையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அது சுதந்திரமாக கண் காணிக்கப்பட வேண்டும்’ என்று புகழ்மிக்க மனித உரிமைப் போராளி பி.யூ.சி.எல். கண்ணபிரான், தேசிய தலைவர் ஏ.ஜி. தேவசகாயம், நீதிபதி இராஜேந்திர சச்சார், அருந்ததிராய் போன்றவர்களும் இதில் அடக்கம். ஆனால் பலன்தான் இல்லை. பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை விடுகிறார். ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க அதிபர் ஒபாமா போரை நிறுத்தாவிட்டால் இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். ஆனால் பாசிச ராஜபக்சே எந்த நாடும் எங்கள் நாட்டில் தலையிட உரிமை இல்லை. இது உள்நாட்டு விவ காரம் என்கிறார். இந்த அளவுக்கு ராஜபக்ஷே ஆணவத்தோடு பேசுவதற்கு சீன, ருஷ்ய பின்னணியுடன் இந்தியப் பின்னணி யுமே காரணம்.
எனவே, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை சார்ந்த அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத் தாமல், உலக நாடுகளின் நடவடிக்கையில் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்த முடியாது. இந்நிலையில் தமிழகத் தலைவர்கள்தான் தில்லியின் நிலைபாட்டை மாற்ற முயல வேண்டும். அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர நிர்ப்பந்திக்கலாம். இல்லையெனில் தமிழக மக்களின் எழுச்சி மிகு போராட்டம் மூலம்தான் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|