Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatrukaruthu
Maatrukaruthu
மார்ச் 2009
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க உடனடியான போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசும் எல்.டி.டி.ஈ.
அமைப்பும் முன்வரவேண்டும்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பிரச்னையால் அமைதியான வாழ்வை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள் இன்று நெருக்கடியான போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழீழம் என்று எல்.டி.டி.ஈ-யினால் அறிவிக்கப்பட்டு அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் பலவற்றை அது ராணுவத்திடம் இழந்துள்ளது. இறுதியில் தனது அரசியல் தலைநகரமான கிளிநொச்சியையும் முக்கிய கடற்படைத்தளமான முல்லைத் தீவு நகரையும் இழந்து எல்.டி.டி.ஈ. அமைப்பினரின் எல்லை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிக் காடுகளுக்குள் சுருக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை இராணுவத்துக்கும் எல்.டி.டி.ஈ-யினருக்கும் இடையிலான போர்க்களம் 300 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முக்கியமாக புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்தும் முல்லைத் தீவிலிருந்தும் எல்.டி.டி.ஈ-யினர் பின் வாங்கும் போது அந்நகரங்களில் வாழ்ந்த மக்களோடு பின்நகர்ந்ததால் இந்த 300 சதுர.கி.மீ பரப்பளவிற்குள் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையிலான அப்பாவித் தமிழர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வீடின்றி வாசலின்றி காடுகளிலும் மேடுகளிலும் குடியேறி உள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையில் ராணுவத்தின் குண்டு வீச்சில் அனுதினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவும் இன்றி அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது. எல்.டி.டி.ஈ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை அமைதிப்பகுதி என அறிவித்து அங்கு வரும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் மையங்களை தனிமைப்படுத்த அரசு முயல்கிறது. அதை நம்பி பாதுகாப்பு பகுதிக்கு வந்த மக்கள் மீதும் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறது.

விடுதலைப்புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் என்று ராணுவம் சொல்கிறது. இல்லை, நாங்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தவில்லை; தமிழ் மக்களை கொல்ல வேண்டுமென்பதற்காகவே இலங்கை ராணுவம் குண்டு வீசுகிறது என்று விடுதலைப்புலிகள் சொல்கின்றனர்.

அங்கே போர்க்களத்தில் சுதந்திரமான பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் எது உண்மை என்று சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இச்சண்டையில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர் அபாயத்தில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளோ இப்போது எழுந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எப்படி ஆதாயம் அடையலாம் அல்லது எதிர்தரப்பை ஆதாயம் அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர். அதே சமயம் இந்திய அரசு தனது ஏகாதிபத்திய நலனை மனதில் கொண்டு, அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்த போரில் இலங்கை அரசிற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் முதற்கொண்டு ஆலோசனை வரை அனைத்தும் வழங்கி வருகிறது.

சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, எல்.டி.டி.ஈ மீது பரிவு காட்ட முடியாது, அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்புப் பிரதேசங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தை ஆளும் தி.மு.க-வின் நிதிஅமைச்சர் அன்பழகன் அடுத்த நாட்டு விவகாரத்தை ஓரளவிற்குத்தான் விவாதிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் இராஜபக்சே, போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து அதற்குள் பாதுகாப்பு பகுதியன அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வந்துவிட வேண்டுமென்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் இறுதி கட்டத் தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் 2 லட்சம் மக்கள் இருப்பதே கடும் நெரிசலாக இருக்கும் நிலையில் அங்கே இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கும் போது அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் மடிவது நிச்சயம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும் மாற்றுக்கருத்து! வன்மையாக கண்டிக்கிறது.

* உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பும் போர்நிறுத்தம் செய்து 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

*ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் குடியேற உதவ வேண்டும்.

*இலங்கை ராணுவத்திற்கு இந்தியா செய்துவரும் ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும்.

*ஆரம்பத்தில் தேசிய இனப் பிரச்னையாகக் கருக்கொள்ளா விட்டாலும் பின்னாளில் தேசிய இனப்பிரச்னையாக உருக் கொண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட - ஜனநாயக வழிமுறையாகிய வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

அதாவது ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் (ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மத்தியில் அல்ல) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அம்மக்கள் விருப்பப்படி தனிநாடாக பிரிந்து செல்வதா ஒன்று பட்ட இலங்கையில் சுயாட்சியுடன் இணைந்திருப்பதா என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அம்முடிவிற்கு இலங்கை அரசு மற்றும் எல்.டி.டி.ஈ உட்பட சர்வதேச சமூகமும் மதிப்பளிக்க வேண்டும்.

மேலே கண்ட ஜனநாயக வழிமுறையில் இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகளும், ஜனநாயக எண்ணம் கொண்டோரும், அறிவுஜீவிகளும் உணர்ச்சிக்கு இடமளிக்காது இலங்கையின் வரலாற்றுச் சூழலோடு இலங்கைத் தமிழர் பிரச்னையை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட நம் பங்கை ஆற்றவேண்டும். தனது கடமையை உணர்ந்துள்ள மாற்றுக் கருத்து! "இலங்கைப்பிரச்னை பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வு ஒன்றினை இந்த இதழில் துவக்கியிருக்கிறது. அது வரலாற்றுப் பின்புலத்துடன் இலங்கைப் பிரச்னையை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறோம்."


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com