Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 1
கல்கியின் சிவகாமியின் சபதம்

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை
28. மலை வழியில்

சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்து நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து, கையில் வேல் பிடித்து, அழகிய உயர்சாதிப் புரவியின் மேல் அமர்ந்து, மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். சூரியன் அஸ்தமிக்க இன்னும் இரண்டு நாழிகைப் பொழுதுதான் இருந்தது. எனினும் அந்த மலைப் பிரதேசத்து மாலை வெயில் அவனுடைய இடது கன்னத்தில் சுளீரென்று அடித்தது.

பகல் நேரம் எல்லாம் தகிக்கும் வெயிலில் பிரயாணம் செய்து பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். குதிரையும் களைப்படைந்திருந்தது. எனவே, குதிரையை மெதுவாகச் செலுத்திக் கொண்டு சென்றான். குதிரை மெள்ள மெள்ள அம்மலைப் பாதையில் ஏறி மேலே சென்று கொண்டிருக்கையில், பரஞ்சோதியின் உள்ளம் அடிக்கடி பின்னால் சென்று கொண்டிருந்தது. சென்ற ஒரு வார காலத்தில் அவன் அடைந்த அதிசயமான அனுபவங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்துக் கொண்டிருந்தன.

காஞ்சி நகரில் புத்த பிக்ஷுவுடன் பிரவேசித்த அன்றிரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தபோதெல்லாம் அவை உண்மையில் நிகழ்ந்தவைதான அல்லது கனவிலே நடந்த சம்பவங்களா என்று பரஞ்சோதி அதிசயித்தான். பன்னிரண்டு நாளைக்கு முன்னால் திருச்செங்காட்டங்குடியிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய பட்டிக்காடுச் சிறுவனா இன்று இந்த அழகான புரவியின் மேலே ஏறிச் செல்பவன் என்று கூட அவன் ஆச்சரியப்பட்டான்.

வெயிலின் வேகத்தினால் வியர்வையைத் துடைக்கவேண்டியிருந்தபோதெல்லாம் பரஞ்சோதிக்குத் தமிழகத்துச் சாலைகளின் அழகும் வசதிகளும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சாலை ஓரங்களில் பெரிய விருட்சங்கள் அடர்த்தியாய் வளர்ந்து, குளிர்ந்த நிழல் தந்து கொண்டிருக்கும். சாலைகளின் இரு புறத்திலுமுள்ள வயல்களில் பசுமையான நெற்பயிற் இளந்தென்றலில் அசைந்தாடும். முதிர்ந்த பயிர்கள் கதிரின் பாரம் தாங்கமாட்டாமல் வயல்களில் சாய்ந்து கிடக்கும். ஆங்காங்கே பசுமையான தென்னந் தோப்புகளும் மாந்தோப்புகளும் கண் குளிரக் காட்சி தந்து கொண்டிருக்கும். வாழைத் தோட்டங்களையும் கரும்புத் தோட்டங்களையும் கண்ணால் பார்த்தாலே நாவறட்சி தீர்த்து தணியும்.

ஆம்; வழிப் பிரயாணத்தின் போது தாகம் எடுத்துத் தவிப்பதென்பது அங்கெல்லாம் கிடையவே கிடையாது. தாமரையும், செங்கழுநீரும் நீலோற்பலமும் பூத்த குளங்களுக்குக் கணக்கேயில்லை. ஆறுகளும் சிற்றாறுகளும் சின்னஞ்சிறு வாய்க்கால்களும் அடிக்கொன்றாக வந்து கொண்டிருக்கும். இருபுறமும் பசுமையான செடி கொடிகள் படர்ந்த சிறு வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் அது ஓர் அழகு. தண்ணீர் இன்றி வாய்க்கால் வறண்டிருந்தால் அது இன்னொரு வகை அழகு. வறண்ட வாய்க்கால்களின் சிறு மணலில் நடப்பதைப் போன்ற இன்பம் வேறென்ன உண்டு? அப்படி நடக்கும்போது இரு கரைகளிலும் ஆங்காங்கே படர்ந்துள்ள காட்டு மல்லிகைக் கொடிகளில் பூத்த மலர்களிலிருந்து வரும் நறுமணம் எவ்வளவு மனோகரமாக இருக்கும்?

அதற்கிணையான இன்பம் இன்னொன்று சொல்ல வேண்டுமானால், உச்சி வேளையில் ஆலமரங்களும் வேப்ப மரங்களும் தழைத்து வளர்ந்த இராஜபாட்டைகளில் பிரயாணம் செய்வதுதான். இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் 'பளபள' என்று மின்னிக் கொண்டிருக்கும். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கும்! மாமரங்கள் புதிய தளிர்விடும் அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஒருநாளைக்கு மாமரம் முழுவதும் கருநீல நிறம் பொருந்திய இளந்தளிர்கள் மயமாயிருக்கும். மறுநாளைக்குப் பார்த்தால், கருநீல நிறம் இளஞ்செந்நிறமாக மாறியிருக்கும். அதற்கு அடுத்த நாள் அவ்வளவு தளிர்களும் தங்கநிறம் பெற்றுத் தகதகவென்று மின்னிக் கொண்டிருக்கும்.

இப்பேர்ப்பட்ட இயற்கை இன்பங்களை அளித்த இறைவனுடைய திருப்புகழை இன்னிசையிலே அமைத்து, மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் பூங்குயில்கள் இடைவிடாமல் பாடிக் கொண்டிருக்கும்.

திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வரும் வழியில் இம்மாதிரி இன்பக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்த பரஞ்சோதி அச்சமயம் அந்தக் காட்சிகளின் அழகையோ இன்பத்தையோ அவ்வளவாக அனுபவிக்கவில்லை.

இப்போது, எங்கே பார்த்தாலும் மொட்டைக் குன்றுகளே காணப்பட்ட பொட்டைப் பிரதேசத்தில், பசுமை என்பதையே காணமுடியாத வறண்ட பாதையில், அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதுதான், சோழ மண்டலத்து வயல்களும் தோப்புகளும், தொண்டைமண்டலத்து ஏரிகளும் காடுகளும் அவன் மனக் கண்ணின் முன்னால் அடிக்கடி தோன்றி இன்பமளித்தன.

மேற்குத் திசையில் மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறையத் தொடங்கியபோது பரஞ்சோதி, அந்த மலைப் பாதையில் ஒரு முடுக்கில் திரும்பினான். அன்றைக்கெல்லாம் முட்புதர்களையும் கள்ளிச் செடிகளையும் தவிர வேறு எதையும் காணாமல் வந்த பரஞ்சோதிக்கு எதிரே, அப்போது ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் நெட்டையும் குட்டையுமான புரச மரங்கள் ஆயிரம் பதினாயிரம் மரங்கள் இலை என்பதே இல்லாமல் ஒரே பூமயமாய்க் காட்சியளித்தன. அவ்வளவும் இரத்தச் சிவப்பு நிறமுள்ள கொத்துக் கொத்தான பூக்கள். மாலைக் கதிரவனின் செங்கிரணங்கள் அந்தப் புரசம் பூக்களின் இரத்தச் செந்நிறத்தை மிகைப்படுத்திக் காட்டின.

அது அபூர்வமான அழகு பொருந்திய காட்சிதான். ஆனால், ஒருவகை அச்சந்தரும் காட்சியுமாகும். பரஞ்சோதி பிறந்து வளர்ந்த திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் தென்மேற்கு மூலையில் இருந்த மயானத்தில் சில புரச மரங்கள் உண்டு. அவை பங்குனி சித்திரையில் இவ்விதம் ஒரே செந்நிறப் பூமயமாயிருப்பதை அவன் பார்த்திருந்தான். எனவே, புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம்.

இப்போது அவன் கிராமத்துக்கு எத்தனையோ தூரத்துக்கு அப்பால் தனியாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தபோது மேற்கூறிய மயானத்தின் ஞாபகம் தோன்றி அவன் மனத்தில் பயங்கரத்தை உண்டுபண்ணிற்று. மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது. மற்ற விஷயங்களில் மகா தைரியசாலியான பரஞ்சோதிக்குப் பேய் பிசாசு என்றால் பயம் அதிகம். 'இன்றைக்கு இந்தக் காட்டு வழியே இருட்டிய பிறகும் போக வேண்டுமே!' என்று நினைத்த போது அவனுடைய நெஞ்சையும் வயிற்றையும் என்னவோ செய்தது. அதோ அந்த இரண்டு மலைகளும் கூடுகிற இடத்தில் தான் அன்றிரவு தங்க வேண்டிய சத்திரம் இருப்பதாக அவன் அறிந்தான். அங்கே போய்ச் சேருவதற்குள்ளே இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகி விடலாம். நிலா வெளிச்சமே இராது. முன்னிருட்டுக் காலம். 'அடடா! வழியிலே ஏன் இவ்வளவு தாமதித்தோம்?' என்று எண்ணியவனாய் பரஞ்சோதி குதிரையை வேகமாய்ச் செலுத்த முயன்றான். ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும்?

நிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது. பட்சிகள் மிருகங்கள் கூட அங்கே காணப்படவில்லை. இருட்டிய பிறகு நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும். பயங்கரத்தை அவை இன்னும் அதிகப்படுத்தும்.

நேற்றெல்லாம் பரஞ்சோதி நேர் வடக்கே சென்ற விசாலமான இராஜபாட்டையில் பிரயாணம் செய்தான். அதன் ஜன நடமாட்டமும் குதிரைகளின் போக்குவரவும் அதிகமாயிருந்தன. பாதையில் பல இடங்களில் அவன் நிறுத்தப்பட்டான். சக்கரவர்த்தி தந்திருந்த பிரயாண இலச்சினையை அவன் அங்கங்கே காட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.

இன்று காலையிலே இராஜபாட்டையை விட்டு மலைப் பாதையில் திரும்பிய பிறகு அத்தகைய தொந்தரவு ஒன்றுமில்லை. ஆனால் இப்போது பரஞ்சோதிக்கு ஒரு பெரிய குதிரைப் படையே அந்த வழியில் வரக்கூடாதா என்று தோன்றியது.

ஆ! அது என்ன சத்தம்! குதிரைக் குளம்படியின் சத்தம் போலிருக்கிறதே! ஆம்; குதிரைதான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. வருவது யாராயிருக்கும்? யாராயிருந்த போதிலும் நல்லதுதான், இருட்டுக்கு வழித்துணையாயிருக்குமல்லவா?

வருகிறது ஒரே குதிரையா? பல குதிரைகளா? பரஞ்சோதி தன் குதிரையை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்டான். சட்டென்று சத்தம் நின்றுவிட்டது. ஒருவேளை வெறும் பிரமையோ? யாராவது வரக்கூடாதா என்று அடிக்கடி எண்ணியதன் பயனோ?

பரஞ்சோதி மேலே குதிரையைச் செலுத்தினான். மறுபடியும் பின்னால் குதிரை வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றதனால் குதிரை சமீபத்தில் வந்தாலும் அதைத் தான் பார்க்க முடியாது.

இதற்குள்ளே சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ ஆரம்பித்துவிட்டது.

அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற இடத்துக்கு வந்தபோது பரஞ்சோதி குதிரையைச் சற்று நேரம் வேகமாக விட்டுக்கொண்டு போய்ச் சட்டென்று நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன்மேல் ஆள் இருப்பதும் தெரிந்தது. பரஞ்சோதியின் குதிரை நின்றதும் அவனும் தன் குதிரையை நிறுத்தினான்.

பரஞ்சோதிக்குச் சொல்லமுடியாத கோபம் வந்தது. குதிரையை லாகவமாய்த் திருப்பிப் பின்னால் நின்ற குதிரையை நோக்கி விரைவாகச் சென்றான். அப்பொழுது கையெழுத்து மறையும் நேரம்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com