Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 1
கல்கியின் சிவகாமியின் சபதம்

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை
12. தெய்வமாக் கலை

அரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக் காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம் எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல் இருந்தது.

நாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள் காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம், தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத் தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன.

முற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச் சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதாயிருந்தது.

ஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப் பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும் அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக் கவர்ந்திருக்கும்.

சித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, "நில்!" என்றார், அந்த க்ஷணமே சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல் நின்றாள்.

ஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர் கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து பார்த்து, "சற்று இரு! அம்மா!" என்று கூறி, மேலும் அச்சிலையின் புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, "போதும்! குழந்தாய்! இங்கே வந்து உட்கார்!" என்றார்.

சிவகாமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால் துடைத்துவிட்டு, "அம்மா! சிவகாமி! பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய்? நடன கலைக்காகவே நீ பிறந்தவள்!" என்றார்.

"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி.

"பிடிக்கவில்லையா? என்ன பிடிக்கவில்லை?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.

"நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை!" என்றாள் சிவகாமி.

"சிவகாமி! இது என்ன இது? மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய்? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார்.

"உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா! பரத சாஸ்திரம் என்று ஒன்றை எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை கற்றுக் கொண்டோ ம் என்றிருக்கிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.

"ஆகா! என்ன வார்த்தை சொன்னாய்? பரத முனிவரின் பேரில் கோபமா? சிவகாமி! நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக் கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா! அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக் கொண்டுவிட்டார்..."

"யார் ருத்ராச்சாரியார்? சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா?"

"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர். சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மகள் நன்றாயிருக்கவேண்டும். அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத் திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம் எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான் சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு!' என்று சொன்னார். சங்கீத மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்..."

"அப்பா! யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்?"

"சிவகாமி! நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று? மகளே! நான் கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா? இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா?"

சிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் கூறினார்.

"அம்மா! எனக்குத் தெரிந்தது. உன்னை அறியாப் பிராயத்துச் சிறு குழந்தையாகவே நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது தவறுதான். உனக்குப் பிராயம் வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய். உன் அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை மறந்து விடவில்லை. சிவகாமி! பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்!"

இவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து, "கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அப்பா! எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா? அத்தகைய கிராதகி அல்ல நான்!" என்றாள்.

உண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர் அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.

எனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, "எனக்குக் கல்யாணம் வேண்டாம்" என்று மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம்.

இன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும், அவர் மேலும் தொடர்ந்து, "அதெப்படி, சிவகாமி! மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? உலகம் ஒப்புக்கொள்ளுமா? ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத் தடைப்படும் போலிருக்கிறது."

சிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும் அழகுபடுத்தியது.

"என்ன அப்பா சொல்கிறீர்கள்? யாருக்குத் திருமணம்? குமார சக்கரவர்த்திக்கா?" என்றாள்.

"ஆமாம்! மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம் என்று கேள்வி."

சிவகாமி குரோதம் ததும்பிய குரலில், "அப்பா! யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும்! அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றாள்.

ஆயனர் மீண்டும், "அதெப்படி முடியும், சிவகாமி! சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம்? நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது?" என்றார்.

"அப்பா! நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்" என்றாள் சிவகாமி.

அவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் "புத்தம் சரணம் கச்சாமி" என்று குரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அருகில் நாகநந்தி அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com