Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நேரக் கொடுமை
சூர்யா

தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக ஒலிக்கும் பட்சத்தில் நிறுத்திக் கேட்பதுண்டு. அநத் ரிமோட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் என் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கும். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட அந்த ரிமோட் என் அருகிலேயே தலையணைக்கு பக்கத்திலேயே இருக்கும். யாரேனும் எடுத்துவிட்டால் அவ்வளவு தான். என் உள்மனம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் என்னிடம் இவ்வாறு கூறும். “ஐயோ உனது வலது கையை யாரோ எடுத்துச் செல்கிறார்கள் ஜாக்கிரதை” என்று

Comic man அதிர்ந்து போய் கண்விழித்து பார்த்தால் அந்த ரிமோட் காணாமல் போயிருக்கும். அந்த அளவிற்கு என் உள்ளுணர்வோடு ஊறிப் போனது அந்த ரிமோட். வீட்டிலிருப்பவர்களும் வெறுத்துப் போனார்கள். அவர்கள் டி.வி. பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். பின் ஒரு நிமிடத்திற்கு 20 தடவை சேனலை மாற்றினால் யார்தான் பொறுத்துக் கொள்வார்கள். அந்த ரிமோட்டை 4 முறை பிரித்து வேலை பார்த்து விட்டேன். எனக்கு இப்பொழுது ரிமோட் மெக்கானிசம் கூட நன்றாகத் தெரியும். அன்று ஒரு நாள் என் அம்மா பக்கத்து வீட்டு மாமியின் ரிமோட்டை எடுத்து வந்து சரிபார்த்து கொடுக்கச் சொல்கிறார், நான் எப்பொழுது ரிமோர்ட் மெக்கானிக் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை.

இந்த நான்கு வருடத்தில் நான் எப்பொழுது ரிமோட் மெக்கானிக் ஆனேன் என்று யோசித்தால் புரிபடவே மாட்டேன் என்கிறது. கல்லூரிபடிப்பை முடித்த இந்த நான்கு வருடங்களில், எனக்கு டி.வியை தவிர ஆத்ம நண்பர்கள் மிகக்குறைவு. பெரும்பாலோனோரின் தொடர்பு விட்டுப் போய்விட்டது. எப்பொழுதாவது சந்தித்துக் கொண்டால் தான் உண்டு.

அன்று அதிகாலை 11 மணிக்கு (எனக்கு அதிகாலை என்பது 11 மணிதான்) அரைத்தூக்கத்தில் சேனலை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கண்ணில் மறைந்து சென்றது அந்த உருவம். எங்கேயோ பார்த்த நியாபகம். அதற்குள் 5, 6 சேனல்கள் கடந்து சென்று விட்டேன். என்னிடமா நடக்கும். நான் ஒரே நேரத்தில் அனைத்து சேனல்களையும் பார்க்கும் திறமை படைத்தவன், தொலைக்காட்சியில் வரும் அனைத்து சேனல்களும் என் விரல் நுனியில் அல்லவா இருக்கிறது, தப்பிவிடுவானா அவன். கண்டுபிடித்துவிட்டேன். அது ஒரு ஆங்கில செய்தி சேனல், அந்த முகம்....... ஆஹா வேறு யாருமல்ல, அவன் என் நண்பன் முத்துகிருஷ்ணன். என் நண்பன் தொலைக்காட்சியில், அவன் ஏதோ சாதனை செய்திருக்கிறான். அவனைப்பற்றிய அந்த செய்தி அதற்குள்ளாக முடிந்துவிட்டது, இனி அடுத்த செய்தியில் தான் கேட்க வேண்டும். என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. அது என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள, 24 மணி நேர தமிழ் செய்திச் சேனலை மாற்றி வைத்துக் கொண்டேன். இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே மனம் கொள்ளவில்லை.

அவனும் நானும் கல்லூரி காலங்களில் எத்தனை சேஷ்டைகள் செய்திருக்கிறோம். கல்லூரியின் ஆரம்ப காலங்களில் அவன் தான் எனக்கு ஹீரோவாகத் தெரிந்தான். கல்லூரிக்கு நேரத்திற்கு வருவது எவ்வளவு அவமானமான விஷயம் என்பதை எனக்கு உணர்த்தியவன் அவன்தான.; நேரத்திற்கு கல்லூரி உள்ளே சென்று விட்டால் பின் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுவான். வி.ஐ.பி.க்கள் எல்லாம் நேரம் கழித்துதான் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வார்கள், நாம் வி.ஐ.பி. ஐ போல் நடந்து கொள்ள வேண்டும். நாம் எதைப் போல் நினைக்கிறோமோ, அதுவாகவே மாறி விடுவோம் என்பது உனக்குத் தெரியாதா? என்று கூறுவான். என்னுடைய அதிர்ச்சியெல்லாம், அவன் விவேகானந்தருடைய வார்த்தைகளை உபயோகித்தது தான், எப்படிப்பட்ட ஒரு அதீதமான சூழ்நிலையில் அவன் அதை படித்திருப்பான் என்பது விளங்கவில்லை.

பின் அவன் புத்தகங்களை தன் உடலில் மறைத்து வைத்திருக்கும் இடம், ஏதோ ஆயுதத்தை ஒளித்து வைத்திருப்பது போல், எங்கிருந்து உருவுவான் என்றே தெரியாது. என்னதான் அவன் என் நண்பனாக இருந்தாலும் அவனடைய புத்தகத்தை நான் தொடுவது கூட கிடையாது, காரணம் ஒரு நாள் அவன் புத்தகத்தை உருவிய இடம், அங்கு எப்படி அவனால் வைக்க முடிந்தது என்று புரியவில்லை, அவன் திறமைசாலி என்பது எனக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும் ரோட்டில் பார்ப்பவர்கள் அசிங்கமாக நினைத்திருக்க மாட்டார்கள். அவன் அங்கிருந்து உருவியபொழுது ஆச்சரியத்துடன் நான் கேட்ட கேள்வி இதுதான்.

நண்பா, திடீரென்று யூரின் வந்துவிட்டால் உனக்கு சிரமமாக இருக்காதா?” அவனுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு நாள் ரௌண்ட் நெக் டி.சர்ட் வாங்கிக் கொடுத்தேன். இதில் ஒரு குரூரமான ஆசை உண்டு எனக்கு, அவன் சட்டையின் மேல் பட்டனை போட்டு நான் பார்த்ததேயில்லை. முதல் பட்டனை கழற்றிவிட்டு தூக்கிவிட்டிருப்பான், சில சமயம் சார்ட் சர்ட் போட்டு வந்திருப்பான். அப்பொழுதெல்லாம் அவன் தொப்புள் தெரிகிற அளவிற்கு சட்டையை தூக்கிவிட்டிருப்பான் ஏதோ கவர்ச்சி நடிகையை போல. சட்டையை போட்டால் தானே பட்டனை கழற்றிவிட முடியும், அந்த டி.சர்ட்டில் பட்டனே கிடையாது. அவன் ஒரு நாள் முழுவதும் எனக்காக போட்டிருந்தான் ஏதோ சாதனை முயற்சியாக.

நான் பள்ளியில் படிக்கும் பொழுது கண்ட விஷயம் இது, மணி அடித்துவிட்டால் அவ்வளவுதான் அந்த சூழ்நிலையே பரபரப்பாகிவிடும், அனைவரும் வகுப்பறையை நோக்கி தெறித்து ஓடுவார்கள். இந்தியாவில், பள்ளிகளுக்கும், சிறைகளுக்கும் பெரிதாக 6 வித்தியாசங்கள் கூட இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் எனது கல்லூரியில் மணி, ஏதோ அநாதையை போல் தேவையில்லாமல் அடித்துக் கொண்டிருக்கும். யாரும் கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஆனால் என் நண்பன் அவ்வாறில்லை, அவன் மணி ஓசை கேட்டதும் அதற்கு உரிய மரியாதை கொடுப்பான், அது எவ்விதமென்றால், என்றாவது ஒரு நாள் கல்லூரிக்கு முன்னதாக வந்து விடுவான், என்ன செய்வது என்பது தெரியாமல் ஒரு குட்டித்தூக்கம் போடுவான், மணி அடித்ததும் பரபரப்பாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு, கர்ச்சீப்பில் தயாராக கொட்டி வைக்கப்பட்டிருந்த பவுடரை முகத்தில் அப்பிக் கொண்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் வெளியேறிவிடுவான், பின் யாராவது தவறாக நினைத்துவிட்டால் அவன் மரியாதை என்னாவது.

‘என்ன இந்த பையன் மணி அடித்ததும் வகுப்பறைக்குள் உட்கார்ந்திருக்கிறானே.” என்று எந்த ஆசிரியராவது நாக்கின் மேல் பல்லை போட்டு பேசிவிட்டால் என்னாவது. அது எவ்வளவு பெரிய அசிங்கம். அதனால் சரியாக மணி அடித்ததும் வெளியேறிவிடுவான், நான் சற்று நல்ல பையன், வகுப்பறைக்குள் அந்த ஆசிரியர் அநாதைப் பயலை போன்று உட்கார்ந்திருப்பாரே என்ற பரிதாப உணர்வு எனக்குண்டு. அதனால் ஒரு அரைமணி நேரம் கழித்து வகுப்பறைக்குள் சென்றுவிடுவேன், என்னைப் போல் தான் மற்றவர்களும்.

பொதுவாக குழந்தைகளை சற்று கவனித்துப் பார்த்தால், அவர்களிடமிருக்கும் தனித்திறமை தெளிவாகத் தெரியும், அவர்களின் பேச்சு செயல்பாடுகளை வைத்து அவர்கள் பிற்காலத்தில் என்னவாக வருவார்கள் என்பதை யூகித்துவிட முடியும், என் நண்பனை பார்த்த முதல் தினத்திலிருந்து அவனிடம் இந்த ஆர்வத்தை கவனித்து வருகிறேன், அவன் ரயில்வே துறையில் பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தான் போல, எப்பொழுதும் வானத்தை பார்த்து வட்ட வட்டமாக புகை விட்டுக் கொண்டிருப்பான். ஆம் வட்ட வட்டமாக, அதில் கலை உணர்ச்சி வேறு அவனுக்கு. நான் அவனுக்காக பரிதாப்பட்டேன், இந்தியாவில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வே கிடையாது இளைஞர் மத்தியில், ஆனால் வெகு நாட்கள் கழித்துதான் இந்த விஷயம் என் புத்திக்கு உணர்த்தப்பட்டது. புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல அருகிலிருப்பவர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் என்று, நான் வேண்டிக் கொண்டேன் கடவுளிடம்.

‘கடவுளே எனக்கு மட்டும் கேன்சர் வந்தால், நான் நாத்திகன் ஆகிவிடுவேன் ஜாக்கிரதை” நீதி பரிபாலனை தெரியாத மடக்கடவுள், அவன் சிகரெட் பிடித்தால் எனக்கு நோய் வரவேண்டுமா? இது என்ன முட்டாள் தனம். அவர் நடு நிலைமை பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறத. என்ன தான் அவன் என் நண்பனாக இருந்தாலும் அவன் மடத்தனங்களுக்கு நான் இலக்காக முடியுமா என்ன? இரண்டாமாண்டின் பின்னொரு நாள், அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்ட செய்தி கேட்டு, அதிர்ச்சியில் குடித்துக் கொண்டிருந்த டீ கோப்பையை கீழே போட்டுவிட்டேன். டீ மாஸ்டர் இவ்வாறு என்னிடம் கேட்டார்.

“என்ன தம்பி கை சுட்டுடுச்சா” சுட்டது என் நெஞ்சமல்லவா, அதைவிட ஆச்சரியமானது அவன் சிகரெட் பிடிப்பதை விட்டதற்கான காரணம் , ஆம் அவன் காதலில் விழுந்து விட்டானாம். அந்த பெண் கூறியதன் விளைவாக இன்று சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டானாம். நான் எத்தனை முறை அவனுக்கு கூறியிருப்பேன். ஒரு முறையாவது கேட்டிருப்பானா. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. இப்பொழுது நான் எதைபோட்டு உடைப்பது. அவன் இப்பொழுதெல்லாம் சட்டையில் இருக்கும் 5 பட்டன்களையும் போட்டு வருகிறான். சரியாக நேரத்துக்கு வகுப்பறைக்குள் நுழைந்து விடுகிறான். எங்கள் வகுப்பறைக்கு அல்ல, அந்த பெண் படிக்கும் வகுப்பறைக்கு, இந்த ஆசிரியர்கள் கரும்பலகையை தவிர வகுப்பில் எதையுமே பார்ப்பதில்லை போல, வகுப்பறைக்குள் வந்ததும் வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் அவர்கள் படித்ததை. ஆம் அவர்கள் பாடம் எடுப்பது அவ்வாறுதானிருக்கும். தன் வகுப்பில் யார் யார் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதே இல்லை.

என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும், பூமியில் ஒவ்வொரு வாழ்விடத்துக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் சிலசில சிறப்பம்சங்கள் உண்டு. இதில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்டது. காதல் என்றால், அது தோல்வியை நோக்கிதான் என்பது, ஒரு இந்திய பெண் காதலிப்பவனை ஏமாற்றவில்லையென்றால், அவளுக்கு சொர்க்கத்தில் எப்படி இடம் கிடைக்கும், ஏமாற்றுவது என்பது அவளுடைய தொழில் தர்மம். அதற்காகவெல்லாம் பெண்களை பழித்து பேசக் கூடாது. அது அவர்களுடைய இயல்பு. பெண்கள் நம் நாட்டின் கண்கள் அல்லவா?

இந்த மடையனிடம் இதையெல்லாம் சொன்னால் எங்கே புரியப் போகிறது, நமது நாட்டில் வயதிற்கு வந்த ஆண்கள் உளரீதியாக கவனிக்கப்படுவதேயில்லை. இவர்களுக்கு விதிக்கப்பட்டதெல்லாம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட ஒழுக்கவிதிகள் தான். அடக்கு அடக்கு என்பதை தவிர வேறொன்றும் தெரியாது, பின் என்னதான் செய்வார்கள் இந்த இளைஞர்கள். ஒரு பெண் தன் கண்களால் முதல் ஒப்புதலை அளித்து விட்டால் போதும். காஞ்ச மாடு கம்பங்கொள்ளைக்குள் புகுந்த மாதிரி தன் தன்மான உணர்வையெல்லாம் இழந்து, எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. வெறும் வயதுக் கோளாறு என்று ஒதுக்கிவிடுவது சரியாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த நாளை, எங்கள் ஊரில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பவர்களின் முயற்சியையெல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கும் அந்த மருத்துவர் பெயர் திரு. ராஜமாணிக்கம், அவரது வேலை நேரங்களை சரியாக குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரது முகவரியையும் குறித்து வைத்துக் கொண்டேன். தமிழக விவசாயிகள் அனைவரும் என் நண்பன் போன்ற மடையர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு நடத்தவில்லையென்றால் ஆபத்து அவர்களுக்குத்தான். பின் அவர்கள் வயலில் அடிப்பதற்குரிய பூச்சி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும், இந்த தற்கொலை செய்து கொள்பவர்கள் ரயிலில் விழுவது, தூக்கு மாட்டிக் கொள்வது, உயரமான கட்டிடத்திலிருந்து குதிப்பது இதையெல்லாம் ஓல்;டு பேஷனாக்கி விட்டார்கள். மெடிக்கல்லுக்கு சென்று தூக்க மாத்திரை கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் நேராக உரக் கடைக்கு செல்ல வேண்டிது. கண்ணில்படும் டப்பாவை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டியது. அதை பாலில் கலந்து குடித்து விட வேண்டியது. விஷத்தைக் குடிக்கும் பொழுது கூட சுவையாக இருக்க வேண்டுமாம். அப்படியே குடித்தால் கசக்குமாம். இவர்களை என்ன செய்வது.

என் நண்பன் சென்று அந்த உரக் கடையில் கை நீட்டிய பொழுது, அவன் ஆள் காட்டி விரலுக்கு நேராக இருந்த டப்பாவில் இருந்தது ஒரு எலிமருந்து, இந்த எலிமருந்து என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது எலிக்கு பூஸ்ட் சாப்பிடுவது போல. நாம் தான் நினைத்துக் கொள்ள வேண்டும் இதை சாப்பிட்டால் எலி செத்துவிடும் என்று. என் நண்பனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றாலும், சற்று அஜீரணமாக உணர்ந்தான். அதனால், அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றோம்.

டாக்டர் ராஜமாணிக்கம் என் நண்பனுக்கு சில உடற்பயிற்சிகளையெல்லாம் பயிற்றுவித்தார். ‘தம்பி எந்திரிங்க.........கை, கால ஆட்டுங்க......... ரெண்டு குதிகுதிங்க” பின் கண்களை உற்று பார்த்தார். அடி வயிற்றை அமுக்கி பார்த்தார். நாக்கை வெளியே நீட்டச் சொன்னார். அவன் காளியாத்தாவை போல் நாக்கை முழுவதுமாக வெளியே தொங்கவிட்டான். அதை எதுக்கு டார்ச் அடித்து பார்க்க வேண்டும். அப்படியே பார்க்க வேண்டியது தானே. ‘தம்பி சிகரெட் பிடிப்பிங்க போல இருக்கு, மறைக்காம உண்மைய சொல்லணும்” அவன் ஒத்துக் கொண்டான், ஆனால் அவன் கஞ்சா அடித்ததை சொல்லவேயில்லை

‘இனிமே, சிகரெட்டெல்லாம் பிடிக்கக் கூடாது, புரியுதா” வேகவேகமாக பிரிஸ்கிரிப்சனில் மலாய் மொழியில் எழுதினார். ‘இத வாங்கிக் கொடுங்க, மூணு வேளையும் கஞ்சிதான், நேரத்துக்கு சாப்பிடணும், நேரத்துக்கு தூங்கணும்” எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. ‘ஏதோ மருந்தைக் குடித்து விட்டான் என்று கூட்டி வந்தால், குதி, கைய கால ஆட்டு, கஞ்சிகுடி, சிகரெட் பிடிக்காதன்னு, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிகிட்டுடிருக்கார், இவரை பற்றி வெளியில் பிரமாதமாக பேசிக் கொண்டார்களே?”

எனது நண்பனின் தந்தை லேசாக இழுத்தார் “டாக்டர் ஊசி எதும் .......... போட வேணாமா?” இந்த ஊரில் ஊசி போடவில்லையென்றால் அவரை டாக்டராகவே மதிக்க மாட்டார்கள். அந்த வார்த்தைகளை கேட்டு பதறிப் போன டாக்டர் வேகவேகமாக ஒரு ஊசியை எடுத்து மருந்தை ஏற்றி குப்புறபடுக்க வைத்து கு....... ஏற்றினார். ‘ம்.......... நல்லா படுத்து ரெஸ்ட் எடுக்கணும்” அதட்டலாக கூறினார். எலி மருந்துக்கு இவ்வளவு பதற்றமடைவது அநாவசியமான விஷயம், ஏன் இந்த தந்தைமார்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது என்பது தான் புரியவில்லை.

பின் பெண்களை கண்டாலே வெறுக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு சும்மாவே படிப்பு வராது. இதன் பின் அவன் படித்து பட்டம் வாங்குவானேயானால் அது சூரியன் மேற்கில் உதிப்பதற்கு சமம். சிறிது நாள் ஆசிட்டுடன் அலைந்து கொண்டிருந்தான். அந்த பெண் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டாள் என்பதை அறிந்த பின்தான் அந்த ஆசிட்டை தூக்கி போட்டான். திடீர் திடீர் என நினைத்து அழுவான், அவனால் அழ முடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

வெகு நாட்களுக்குப் பின், இன்றுதான் அவன் என் நியாபகத்திற்கு வந்தான், எனது நண்பன், தொலைக்காட்சியில் ஆஹா, ‘நண்பா காதல் தோல்வியில் உணர்ச்சிபெற்று ஏதேனும் சாதித்து விட்டாயா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே” அடுத்த செய்தி ஆரம்பித்து 5 நிமிடம் கடந்து விட்டது. இன்னும் என் நண்பனை பற்றிய செய்தி வரவில்லை. காத்துக் கொண்டிருந்தேன். ஆஹா இதோ வந்து விட்டது, செய்தி: நேற்று காதலர் தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையோர ரெசார்ட் ஒன்றில் நடைபெற்ற காதலர் தின கொண்டாட்டத்தின் பொழுது ஆண்களும், பெண்களுமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் அங்கிருந்த இளம் பெண்களையும், அவர்களின் ஆண் நண்பர்களையும் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது. இதனிடையே கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை....... அமைப்பினர் நடத்தியதாக தெரியவந்ததை அடுத்து சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் பார்த்தேன், அந்த ரோஸ் சட்டைக்காரன்,அவன் தான் என் நண்பன். பெண் பிள்ளைகளை தாவித்தாவி மண்டையில் அடித்துக் கொண்டிருந்தான். என்ன ஒரு வெறி அவன் தாக்குதலில், அதைப் பார்த்தால் சமுதாய அக்கறை போல் தெரியவில்லை எனக்கு. சமுதாயம் தான் எவ்வளவு உபயோகப்படுகிறது நமது சொந்த கோபத்தை, மற்றும் உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்துவதற்கு, ‘அடே நண்பா, நீ மட்டும் ஒழுங்காக படிப்பை முடித்து, ஒரு வேலையிலமர்ந்து, ஒரு இனிமையான பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கியிருப்பாயேயானால், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாயா? நீ சமுதாயத்தை, கலாச்சாரத்தை காப்பாற்ற கிளம்பிவிட்டாய். அதை கூட விட்டுவிடு, சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் பின் எதற்காக இருக்கிறது. நாம் காப்பாற்றத்தானே, பின் அதை வைத்துக்கொண்டு ஒரு பீடித்துண்டு கூட வாங்க முடியாது. சல்லிக் காசு பெறாதது நாம் காப்பாற்றுவதற்காவது உதவிவிட்டு போகட்டுமே. பிரச்சனை அதுவல்ல நண்பா, நீ அடிக்கும் பெண்களில் உன் காதலி இல்லை என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறாய். உனக்கே உன்னைப்பற்றி தெரியவில்லை, உனக்கு மட்டும் சொந்த ரிவென்ச் இல்லையென்றால், பின் சமுதாயமாவது, கலாச்சாரமாவது.

இந்திய அரசாங்கம் உனக்காக ஒரு நல்ல மனநல மருத்துவரை நியமிக்குமானால், அவர் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் மட்டும் தான். உனக்கு ஒருநல்ல வேலை. உன்னை ஏற்றுக் கொண்ட ஒரு இனிமையான பெண். விஷயம் அவ்வளவுதான். உன்னை சிறையில் போட்டு என்ன ஆகப் போகிறது. நீ வெளியில் வரும் பொழுது தியாகியை போல் அல்லவா உணருவாய், நண்பா நேரக் கொடுமை என்று கூறுவார்கள் தெரியுமா? அது வேறொன்றும் இலலை. நீ நாளை தியாகியாகப் போவது தான். நீ உன்னை சமுதாய சீர்திருத்தாளன் என்று பறைசாற்றிக் கொள்ளப் போவது தான். என்னுடைய கோபமெல்லாம் அந்த எலிமருந்தை கலப்படமாக தயாரித்த நிறுவனத்தின் மேல் தான், அவன் ஒரு நேர்மையானவனாக இருந்திருப்பானேயானால் இன்று எவ்வளவு பெரிய நன்மை நடந்திருக்கும்.”

- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com