Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
குறுக்குப் புத்தி பிள்ளையார் ஒழிக
சூர்யா


தொலைக்காட்சியில் அந்த பழைய சினிமா ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக இந்த ஒரு சினிமாவை மட்டும் பார்த்துவிட்டு ஆரம்பித்துவிட வேண்டியதுதான். இருந்தாலும் ஏதேனும் ஒரு புது சினிமா போட்டிருக்கலாம். திருவிளையாடலில் பிள்ளையார் முருகனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது. இருந்தாலும் என்னவொரு ஜுனியஸ் இந்த பிள்ளையார். இவர் தான் எனது முன்னுதாரணம்.

குறிப்பிட்ட தேவையான விஷயத்தை ஆழமாக நம்புவது குறித்த விஷயத்தில், ஏன்?, ஏதற்காக? என்ற கேள்விகள் இன்னமும் முழுமையாக அழியவில்லை என்னுள். காரணமில்லாமல் காரியமில்லை என்பது எவ்வளவு உண்மையாக இருப்பினும் ஏதோ ஒரு விஷயம் காரணங்களை பற்றி யோசிக்காமல் முட்டாள் தனமாக போய்க்கொண்டே இரு, என்று உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அது முட்டாள் தனமானது தானா என்ற முழுமையான முடிவுக்கும் வர முடியவில்லை. அரைகுறைத்தனம் ஒவ்வொரு நிமிடமும் வெறுப்பை உமிழ்ந்தபடியே இருக்கிறது. எனக்கு தேவை முழுமை. எனக்குத் தேவை தெளிவு. நான் தளர்ந்து விட்டேன் இருப்பினும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கடலின் நடுவில் போய்கொண்டிருக்கும் பொழுது கப்பல் மூழ்கிப் போனால் நாமும் மூழ்கவா முடியும். மிதந்து திரிய ஏதேனும் செய்து தானே ஆக வேண்டும். நான் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான் விஷயம். நான் இன்னமும் நம்பிக் கொண்டிருந்தேன், இல்லை எனது நம்பிக்கை தளர்ந்து விட்டது. இல்லை இல்லை சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நான் மிதந்து திரிய. நான் வாழ்ந்து திரிய ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக , எதையாவது செய்ய வேண்டும் அல்லவா?. நான் இந்த அளவு தெளிவாக இருப்பது குறித்து சிறிது பெருமைப் படுகிறேன். ஆம் நான் ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் என்கிற அளவிற்கு தெளிவு.

இறப்போடு நடக்கும் போராட்டம் குறித்து அதை வெற்றி பெற எனக்கு என் ஆறாவது அறிவால் சுட்டிக் காட்டப்பட்டது கடின உழைப்பு, ஏதேனும் நடக்கும். வெற்றி அல்லது தோல்வி. ஆனால் நிச்சயமாக கடின உழைப்பும் இறப்பை நோக்கித்தான் அழைத்துச் செல்கிறது என்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இரவு மூன்றரை மணிக்கு இந்திய பொருளாதாரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து சாகாமல் வேறு என்ன நடக்கும். பைத்தியம் பிடித்தாலும் சரி விடுவதாக இல்லை. ஏதேனும் ஒன்று நடந்தாக வேண்டும். வெற்றி அல்லது தோல்வி.

கடினமான சூழ்நிலையில் நிமிடங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது மனமானது இன்பத்தை நாடும் நாட்டத்துடன் தீவிரமாக துடித்துக் கொண்டிருக்கும். அதையும் மீறி லட்சியத்துக்கான செயலில் ஈடுபட்டிருக்கும் பொழுது லட்சியமானது கரும்புச் சக்கையை விட மேலானதாக இருப்பதில்லை. எதற்காக என்ற கேள்விக்குறி நொடிக்கொரு முறை ஊதிப் பெரிதாகிக் கொண்டே போகிறது. இருட்டு இயல்பாகவே இருக்கிறது. வெளிச்சத்துக்கு தான் மூலப்பொருள் தேவையாய் இருக்கிறது. மனிதன் இயல்பாகவே கெட்டவனாக இருக்கிறான். அவன் நல்லவனாய் இருப்பதற்குத் தான் முயற்சிகள் தேவையாய் இருக்கிறது. ராவணன் சாசுவதமானவன். ராமன் தான் உருவாக்கப்பட்டவன். உருவாக்கப்பட்டவனாய் மாறுவது தேவைக்காக மட்டுமே உபயோகமாகிறது மற்ற படி அது இம்சையான இம்சை. எதற்காக என் சிந்தனை இரவு 3.30 மணிக்கு இப்படி போகிறது. பேசாமல் படிக்கும் வேலையை செய்யலாம். யாராவது துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினால் எனது படிக்கும் வேலை சிறிது லகுவாக மாறலாம் என்று தோன்றுகிறது.

விவேகானந்தர் கூறுவார் செயல்பட்டுக்கொண்டே இரு, மயக்கமடையும் வரை, பின் இறக்கும் வரை, ஒரு வேளை இறந்து விட்டால் என் ஆன்மா உன்னோடு இருந்து பணி செய்யும். செயலில் இருக்கும் பொழுதே சிந்தனை நழுவி இறப்பிற்குள் செல்வது என்பது எவ்வளவு அசாதாரணமான விசயம். அதற்கெல்லாம் என்னவொரு லட்சிய வெறி வேண்டும். நானும் அப்படித்தான். நான் ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை. அசாதாரனமானவன். நானும் வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தேன். என் உடல் நடுங்க ஆரம்பித்தது. கைகளை தூக்கிப் பார்த்தேன் ஆம் உண்மைதான். நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் ஈரப்பதமே இல்லை. காய்ந்து வரண்டு போய் கிடந்தது. உட்கார்ந்திருந்தால் தூக்கம் ஆழ்த்திவிடும் என்று எழுந்து நடந்து கொண்டே படிக்க ஆரம்பித்தேன். கால்கள் துவண்டன. மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் பேய்த்தனமாக ஒரு சுனாமி அலையை போல் ஏறி அமுக்கிக் கொண்டிருந்தது. மணி 4.15. இது முதல் நாள் அல்ல. 3 வது நாள். நினைவு நழுவி விடுமோ என்று பயமாக இருந்தது. விடுவதாக இல்லை. மனம், உடல், நினைவுகள் அனைத்தும் என்னிச்சை மீறி தன்னிச்சைக்குள் செல்ல ஆரம்பித்தது. என் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்தும் நழுவ ஆரம்பித்தது. ஐயோ என்னால் முடியவில்லை. கண்கள் சொருகி சொருகி, இரண்டு, மூன்று முறை நினைவு நழுவி, வந்து என, தீபம் எண்ணெய் இல்லாமல் அணைய துடிப்பது போல், என் நினைவு நழுவியது. எல்லாம் முடிந்தது.

அந்த கடைசி நொடியில் இது தான் இறப்போ என்று நினைத்தேன். விழித்த பொழுதுதான் தெரிந்தது நான் சாகவில்லை என்று, மணி மதியம் 2.30 உடலின் சக்தியைவிட மனதின் சங்கல்பம் சக்தி மிகுந்தது என்று படித்திருக்கிறேன். என் நினைவை தொலைப்பதற்காக இயற்கை செய்த ஏற்பாடு எதற்காக என்ற கேள்வி என் கோபத்தின் விளைவு தான். 10 மணி நேரம் வீணாகிப் போனதே. என்னை இயக்குவது, என்னை நான் இயக்குவதின் கடைநிலையின் விளிம்பிலிருந்து தொடங்குகிறது. அது ஏன் என்னை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்கிறது. சீரடைவு என்பது இயற்கையின் சர்வாதிகார கரத்திற்குள அடைபட்டு கிடக்கும் விதிகளுள் ஒன்றாக இருக்கிறதோ?. அதை உடைக்கும் முயற்சியில் எத்தனை நூற்றாண்டுகளாக மனிதர்கள் போராடி வருகிறார்கள். நான் சீரடைவை தாண்டிச் செல்ல விரும்புகிறேன். நான் அசாதாரணமானவன். எனக்கு இயற்கையின் ஏற்பாடு தேவையில்லை. நான் இயற்கையை மீறி செல்ல விரும்புகிறேன். இயற்கையின் சர்வாதிகாரத்துக்குள் சிக்க விரும்பவில்லை நான். ஒரு முறை தோற்று விட்டால் நான் தோற்றுவிட்டதாக அர்த்தமா? இல்லை , மீண்டும் முயற்சிப்பேன். ஆம் நான் அசாதாரணமானவன்.

இப்படியெல்லாம் பேசுவது என்னை நான் தேற்றிக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடோ என்கிற சிறு தாழ்வு மனப்பான்மை அவ்வப்பொழுது எட்டிப்பார்ப்பதை நான் கவனிக்காமல் இல்லை. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. எங்கே என் புத்தகத்தை, அதோ கட்டிலுக்கு அடியில்........ பாய்ந்து பற்றினேன்.

என்னவொரு வெறித்தனமான ஒன்றுதல், இந்த உலகத்தின் பரிணாமத்திலிருந்து வேறொரு உலகத்தின், புத்தக உலகத்தின் பரிணாமத்துக்குள் புகுந்து எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தேன். நான் தன்னிச்சை பெற்றேன். விழிப்போடு தன்னிச்சை பெற்றேன். நான் இழுத்துச் செல்லப்பட்டேன். விழித்துப் பார்த்த பொழுது மணி 7.00 இடையில் என்னை அறியாமல் சாப்பிட்டது போல் தோன்றியது. யாரோ எனது அருகில் உணவை வைத்துவிட்டு சென்றது போல் தெரிந்தது. அது என் அம்மாவாகத்தான் இருக்கும். திடீரென்று நியாபகம் வந்தது. நான் பல் விலக்க வில்லை. வாய் நாறியது நான் எதற்கு கவலைப்பட வேண்டும். நான் தன்னிச்சை பெற்று விட்டேன். அது பார்த்துக் கொள்ளும், பசித்தால் வயிறு உண்டு கொள்ளும். தூக்கம் வேண்டும் என்றால் உடல் தூங்கிக் கொள்ளும் .என்னை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. நான் மீறி நிற்கிறேன். இருந்தாலும் வாய்நாற்றம் தாங்க முடியவில்லை. சற்று சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பல்துலக்கிவிட்டு வந்தேன். நேர்மையான சிந்தனைகளுக்கு நடுவில் சிந்தனையை மீற, சிந்தனையை உருவாக்குபவனுக்கு உரிமை உண்டு. ஆம் இதுவும் எனது சிந்தனைதான். எனது சுயநலம், எனது சிந்தனை, எனது சுயநலத்துக்கு தகுந்தாற்போல் என் சிந்தனை மாறி உருக்கொள்ளும் விதம், அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளச் செய்யும் இயற்கையின் பண்பை பற்றி யோசித்தால் தலைப்பகுதியின் நடுப்புறத்தில கடுமையாக வலிக்கிறது. இயற்கை தன் சர்வாதிகாரத்தனத்தை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துகிறது. ஆம், நான் அடிமை, முழுமையான அடிமை. இருந்தாலும் விடுவதாயில்லை. வெற்றி அல்லது தோல்வி. எங்கே அந்த புத்தகம். பாய்ந்து சென்று பிடி.

ஒரு அடிமைக்கு இந்த பண்பு கூட இல்லை என்றால் எப்படி. எதிர்த்து நில். துணிந்து நில். இது தான் நான் உயிர் வாழக் காரணம். என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது ஆயிரமாயிரம் சர்வாதிகாரக் கரங்களை பரப்பி விரித்த படி இயற்கை. பாடிக்கொண்டே வயலில் வேளை செய்தால் களைப்பு தெரியாது. என் பாட்டி சொன்னது. தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக் கொண்டே லட்சியப் பாதையில் நடைபோடு நீ சாவது கூட உனக்கு தெரியாது. இதை நான் எனக்கே சொல்லிக் கொண்டது. கண்ணை மூடினால் நான் தூங்கிவிடுவேன். நான் என் கண்களை மூடும நேரத்தை குறைத்துக் கொண்டேன். இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாகத்தான இருக்கும். தூக்கம் வெல்லும் கலையை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.

தலை வீங்கியது போல் ஓர் உணர்வு. இந்த ஒன்றரை மாதத்தில் அரை இஞ்ச் என் தலை வீங்கிவிட்டது. நான் கூறியதை யாரும் நம்பவில்லை. கேட்டுவிட்டு சிரிக்கிறார்கள். அந்த நான்காவது ஆளிடம் இதைக் கூறும் பொழுது அவன் சத்தம் போட்டு சிரித்தான். அவனது சத்தமான சிரிப்பிற்கு உட்பட்டு அருகிலிருந்தவர்களும் விரும்பியோ விரும்பாமலோ சிரிப்பிற்குள் சென்றார்கள். நான் அப்பொழுது தான் கவனித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்குள் அந்த எள்ளல் சிரிப்பொலிகளை கேட்டு கோபமோ. பச்சாதாபமோ. வெறுப்போ ஏற்படவில்லை. அவை தோன்றிய இடத்திலேயே வலுவிலந்து செத்து விழுந்தது. நான் அப்படியே இருந்தேன் திடப்பட்டு. இது என்ன நிலையோ. ஆடாமல் அசையாமல் தீபத்தை போல நிமிர்ந்தபடி அப்படியே.

புத்தகப் பக்கங்களுக்கு மத்தியில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேலும் நான் உயிரோடு இருக்கிறேன். கடுமையாக பயணித்துக் கொண்டு. கனவுகள் கூட நிஜமானதைப் போல உண்மை எது. போலி எது. இறந்தகாலம். ஏதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் அழிந்து போய், ஆஆஆ, தலை வலிக்கிறது. பேசாமல் படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம். இரண்டு மணி நேரம்....... செல் போன் ஒலித்தது. என் அருகில் எந்த சுத்தியலும் இல்லை. என் செல் போன் தப்பித்தது. கோபம் எழுந்து அடங்கியதில் உடல் சோர்வடைந்தது. சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற அந்த வினாடி அதை கவனித்தேன். அது என் தோழி வெகு நாட்களுக்கப பின அவள் குரல் கேட்கும் ஆசை. ஆந்த ஹலோவை மட்டும் நான் சொல்லாமலிருந்திருந்தால் ஒன்றரை மணி நேரம் தப்பித்திருக்கும். அதற்காக வருத்தப்படாமல் இருந்திருந்தால் அடுத்த அரை மணி நேரம் தப்பித்திருக்கும். நேரம் விழுங்கும் பிசாசைபற்றி வெகுவான பாடங்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டேயிருக்கும் சாபம். துணிந்து போராடு என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதை கேள்விக் குறியாக்கிக் கொண்டே இருக்கிறது.

எழுத்துக்களைத் தவிர எதுவும் தெரியவில்லை. தூங்கும் பொழுதும் எழுத்துக்கள் தான் கனவில்; கனவிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறேன். என் கல்வி தொடர்ச்சி பெற்று விட்டது. நான் வென்றுவிட்டேன் என்ற மகிழ்ச்சி. தூக்கம் என்னை தோற்கடிக்க முடியாமல் தோற்றுப் போனது. அன்று அந்த சத்தம் என் கவனத்தை கலைப்பதாக இருந்தது. அதற்கு என் கவனத்தை கலைக்கும் அளவிற்கு சிறிது வலிமை இருக்கிறது என்பதை என் கவனம் சிறிது சிதறுவதிலிருந்தே தெரிகிறது. பல ஆயிரம பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடித் தொண்டை அதிர அவர்கள் கத்தும் கதறல். நானும் அது போல கத்தியிருக்கிறேன். உற்சாகத்தில் மிதந்திருக்கிறேன். பைத்தியம் பிடித்து அழைந்திருக்கிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு இன்று இப்படி உட்கார்ந்து புத்தகத்துள் மூழ்க எவ்வளவு சிரமம் பிடித்தது என எனக்கு நன்றாக தெரியும். தூக்கத்தையும் வென்றவனையும், வெல்லக் கூடிய துணிச்சல் அந்த சத்தத்திற்கு உண்டா என்ன? எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சச்சின் 99 ரன்களிலேயே அரை மணி நேரம் விளையடிக்கொண்டிருப்பார் என்று நான் என்ன ஜோஸியமா கண்டேன். சீக்கிரம் அடித்துவிட்டு போக வேண்டியது தானே. 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என்று தான் நினைத்தேன். முடிவில் என்ன நடந்தது தெரியுமா? இந்தியா தோற்றுப் போனது. நேரத்தை விழுங்கும் பிசாசு மறுபடியும் என்னை தோற்கடித்துவிட்டது. விடுவதாயில்லை. வேறு என்ன சொல்லிக் கொள்வது.

காலண்டரின் கணம் கரைந்தது. எதிர்பார்த்த நாளும் வந்தது. போர்க்கள உடை தரித்து செல்வதாயிருந்தாலும் அதற்கு நான் தகுதியானவனே. தோரணையுடன் மனதில் கணம் இன்றி கம்பீரமாக....... இந்த ஒரு நாளுக்காக எத்தனை நாள் போராட்டம். அந்த அரசு பேருந்து எனக்குத் தகுதியானது இல்லை. என் தனி ஒருவனுக்காக கார் ஒன்று அமர்த்திக் கொண்டால் அது ஒன்றும் தவறில்லை. ஆனால், ஆனால் நான் இந்த அரசு பள்ளியிலா??? பரிட்சை எழுதுவது. குப்பைத்தொட்டி போன்று இருக்கிறதே? தகுதியானவனை வரவேற்கத் தெரியாத இந்தியாவில் தானே இருக்கிறோம். வேறு என்ன செய்வது. சகித்துக் கொள்வோம். எனது இருப்பிடத்தை தேடிப்பிடித்து அமர்ந்தேன். நெஞ்சம் படபடக்க அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் மற்றவர்களை பார்க்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது. எனது பல வர்ண எழுது கோல்களை எடுத்து வரிசைப்படுத்திக் கொண்டேன். அந்த மணிச் சத்தம் ஐயோ அந்த மணிச் சத்தத்தை மாற்றவே மாட்டார்களா? இந்த அரசுப் பள்ளியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

எனது மூளைப் பிரதேசத்தில் தேடிப்பிடித்து. பதில்களை அலசி ஆராய்ந்து மிகக் கொடூரமாக எனது போரை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டேன். போர்க்களத்தை விட்டு வெளியேறினேன். மாணவர்கள் அனைவரும் உற்காச மிகுதியில் வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. என்னை விட வெற்றி உற்சாகத்தில் மிதந்த படி ஒருவன் வந்து கொண்டிருந்தான். நான் நுழைவதற்குள் அந்த தொலைபேசி பூத்துக்குள் அவன் புகுந்துவிட்டான். நான் விரும்பாவிட்டாலும் அவன் பேசிய வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தன.

‘ஹலோ......ஹலோ...... மாப்ள நீ கொடுத்த கொஸ்டின் பேப்பர் அப்படியே வந்துடுச்சுடா. நான் புல்லா அட்டன்ட் பண்ணிட்டேன். மீதி பணத்தை அந்த வாத்தியார்கிட்ட கொடுத்திடு. ஓகே....... ஆ.....ஓகே...... ஓகே..............................”

தங்கப் பதக்கம் படத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு சிவாஜி தடுமாறியபடி நடப்பார். அப்பொழுது நான் சிரித்தப்படி படம் பார்த்தேன். ஆனால் நான் இப்பொழுது அப்படி நடப்பதை பார்த்து யாராவது சிரித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அவர் சரியாகத்தான் நடித்திருக்கிறார். இதயம் ஏன் இவ்வளவு பலமாக வெடிக்கிறது. இல்லை துடிக்கிறது. எனக்கு சற்று பயமாக இருக்கிறது. எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. முருகன் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் தனது குறுக்குப்புத்தியை பயன் படுத்தி பழத்தை பெற்றுக் கொண்டது தவறு தான். நான் ஒத்துக் கொள்கிறேன். ஆம் நான் கட்சி மாறிவிட்டேன். உலகத்ததை சுற்றியவனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும், குறுக்கு புத்தி பிள்ளையார் ஒழிக.

எனது அழகான, தடிமனான 349 ரூபாய் செருப்பை பார்த்தேன். சத்தியமாக சொல்கிறேன். அந்த செருப்பு புத்தம் புதியது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. என்னையெல்லாம் பிஞ்சு போன பழைய செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.

- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com