Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

மூன்று கவிதைகள்
சோ. சுப்புராஜ்

1.பறக்கும் கம்பளம்

சிறுவயதில் பள்ளிக்குப் போக - நான்
அடம் பிடிக்கும் போதெல்லாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
"ஒழுங்காய் பள்ளிக்குப் போய்
நல்லபடியாய் படித்து முடித்தால்
உனக்கு நான்
பறக்கும் கம்பளம் ஒன்று வாங்கி
பரிசளிக்கிறேன் ... " என்று.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய
ஆகட்டுமென்று ஓடியிருக்கிறேன்
ஆகாயம் பார்த்தபடி பள்ளிக்கு;
கதைகளில் கேட்டதுண்டு
சினிமாக்களில் பார்த்ததுண்டு - ஆயினும்
பார்த்ததில்லை நிஜத்தில்
பறக்கும் கம்பளத்தை.........

ஏறி உட்கார்ந்ததும் விர்ரென்று
மனதில் நினைக்கும் இடத்திற்கு
பறந்து போய் இறக்கி விடுமாம்;
எத்தனை சந்தோஷம் அது!
நினைக்கும் போதே பறக்கிற உணர்வில்
நெஞ்செல்லாம் இனித்திருக்கும் அப்போது!

கனவுகளில் மிதந்தபடி
காத்திருந்தேன் பறக்கும் கம்பளம்
கைவசமாகும் நாளுக்காக.
அப்புறம் தான் புரிந்தது.......
அறிவு வளர விவரம் புரிய
அம்மா சொன்னது பொய்யென்று !

அவள் சொன்ன அனேகம் பொய்களில்
இதுவும் ஒன்றென்று விட்டுவிட முடியாமல்
திணறித் திரிந்தேன் சில நாட்களுக்கு;
ஏன் இப்படி ஏமாற்றினாள்?

யோசித்தபோது புரிந்தது;
சைக்கிளோ வேறெதுவோ
வாங்கித்தர வசதியில்லை அவளுக்கு
இல்லாத ஒன்றை இரையாய்ப் பிடித்து
இழுத்து வந்திருக்கிறாள் இவ்வளவு தூரம்
பாவம் அம்மா என்று
பரிதாப பட்டேன் அவளுக்காக........

அவளிடமே இது பற்றி
ஒரு முறை கேட்டபோது
"வாக்குத் தந்தபடி எப்போதோ
வாங்கித் தந்து விட்டேன்
பறக்கும் கம்பளத்தை உனக்கு;
எதுவென்று புரியவில்லையா?
காலம் உணர்த்தும் மகனே
காத்திரு அதுவரை" என்று
நழுவிப்போனாள் சிரித்தபடி......

அப்போதும் புரியவில்லை;
அறிவு கொஞ்சம் கம்மி தானெனக்கு.
ஒவ்வொரு நாடாய்ப் பறந்து
உலகம் சுற்றும் போது
உண்மை புரிந்த தெனக்கு; அவள்
பரிசளித்த பறக்கும் கம்பளம்
பத்திரமாய் இருக்கிறது என்னிடம்
கல்வி என்னும் பேறுருவில்....

ஆசை ஆசையாய் அம்மா
பரிசளித்த பறக்கும் கம்பளத்தில்
ஒரே ஒருமுறை கூட அவளை
உட்கார்த்தி அழகு பார்க்கும்
பாக்கியந்தான் இல்லாமலானது - எனது
வாழ்வின் இன்னொரு அவலம்!
*** *** ***
(குறிப்பு :அன்புடன் இணையதளம் நடத்திய இயல் கவிதைப் போட்டியில்
ஆறுதல் பரிசு பெற்ற கவிதை இது)

2.வாழ்க்கைப் பயணங்களும்

வாகனங்களும்
கிராமத்தின் வீதிகளில்
கால்களில் புழுதி படிய
நடந்து கொண்டிருந்தேன்
வெயிலின் சுகம் உணர்ந்தபடி.....

கொதிக்கும் தார்ச் சாலையில்
கொண்டு போய் எறிந்தது விதி!
பாதம் பொசுங்கி பரிதவித்து
சைக்கிளில் போகிறவனைப் பார்த்து
சபலம் வந்தது கொஞ்சம்;
முட்டி மோதி முனைந்ததில்
கைவசமானது ஒரு சைக்கிள்!

குரங்கு படல் போட்டுப் பழகி
சில்லு மூக்கு உடைந்து
சிராய்ப்புகள் பல கடந்து - என்
கட்டுப்பாட்டுக்குள் சைக்கிள் வரவும்
விட்டுவிடுதலையான உணர்வில்
சிட்டுக்குருவியைப் போல்
பறந்து திரிந்தேன் வீதிகளில்!

சக பயணிகளின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை
எனது சைக்கிளால்....
எல்லோரும் மிக எளிதாய்
என்னைக் கடந்து போகவும்
எரிச்சலானது பயணங்கள் மீது.....!

பெடலை மிதித்து மிதித்து
கால்களில் வலி மிகுந்து
தொலைதூரப் பயணங்கள் தொந்தரவானதில்
சலித்துப்போனது சைக்கிள் பயணம்!

மோட்டார் சைக்கிளின் மீது
மோகம் வந்தது அப்புறம்!
மீண்டுமொரு இடைவிடா தேடலில்
மின்னலென கைக்கும் எட்டியது!

காதல் மனைவி பின்னால் அமர்ந்து
கட்டிப் பிடித்து வர
கற்றைக் குழலும் சேலைத் தலைப்பும்
காற்றிலாடி கவிதை பாட
காற்றைக் கிழித்துப் பறந்தேன்;
சந்தோஷங்கள்
சதிராடிய தினங்கள் அவை!

அதிக நாட்கள் நீடிக்கவில்லை
அந்த சந்தோஷங்கள்;
சீறிப்போகும் வாகனங்கள்
சினேக மாயில்லை;
கொஞ்சம் அசந்தாலும் நம்மை
முட்டித் தள்ளி முன்னேறி
கடந்து போக எப்போதும்
காத்திருந்தது ஒரு கூட்டம்!
வெயிலும் மழையும் சேதப்படுத்த
வேகம் என்னைக் கலவரப்படுத்த
பாதுகாப்பற்ற பயணமாயிருந்தது அது!

காரில் கடந்து போனவர்கள்
கனவை வளர்த்தார்கள்;
அடுத்த கட்டத்திற்கு அலைபாய
ஆவலாயிற்று மனது!

கார் வாங்குவதற்கு முன் - அதை
நிறுத்துவதற்கு வசதியாக
விசாலமான வெளிகளுடன் ஒரு
வீடும் வாங்க வேண்டியிருந்தது!

கடின உழைப்பிலும் பின் தேதியிட்ட
காசோலை வசதிகளிலும்
கைகூடிற்று காரும் வீடும்!
குளிரூட்டப்பட்ட காற்றும்
கூடவே இதமான இசையுமாய்
பரவசமாயிருந்தன பயணங்கள்!

இருந்தும் -
தேடல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை;
குண்டும் குழியுமான சாலைகளும்
நீண்டு நெளியும் வாகன நெரிசல்களும்
சலிப்பூட்டுகின்றன பயணங்களை......

குட்டி விமானமிருந்தால்
இலக்குகளை இன்னும்
விரைவாய் அடையலாமென்ற
வேகம் பிறந்திருக்கிறது மனதில்....

ஆசைகளும் தேடலும் எல்லைகளற்றவை;
முடிவற்று நீளும் பாதையில்
மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்.....
பயணங்கள் ஒரு போதும் முடிவதில்லை!
*** *** ***

3.அ முதல் • வரை

அமைவதில்லை எதுவும்
ஆசைப்பட்டபடி;
இச்சைகள் தீர்வதில்லை
ஈரேழு ஜென்மங்களிலும்...
உள்ளம் நிறைந்து பொங்குமோ
ஊன்றுகோல் வயதிலேனும்
எல்லாக் கனவும் கனிந்தாலும்
ஏகாந்தம் கூடுமோ?
ஐம்புலன்களும் மலரும்
ஒரே ஒரு கணமாயினும் ஜனிக்குமா?
ஓங்காரிக்கும் ஆசைகள் மடிந்தால்
ஒளங்காரம் ஒளிரும் மனதில்
அ•தே இனிது; இனிது.....!


- சோ.சுப்புராஜ் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com