கவிதை
மாற்று மதத்தவன் தானே! ரசிகவ் ஞானியார்
பக்கத்து வீட்டுக்காரன்
பசிக்கு உதவியிருக்கலாம்!
வயதானவரின் கைபிடித்து
வீதி கடக்க வைத்திருக்கலாம்!
குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில்
காசு போட்டுவிட்டு
கடந்து சென்றிருக்கலாம்!
பேருந்தில் இருக்கையை
கர்பிணிப்பெண்ணிற்காக ..
காலி செய்து கொடுத்திருக்கலாம்!
எவருக்கேனும்
இரத்தம் கொடுத்து
உயிர்காக்க..
உதவியிருக்கலாம்!
எவரும் மிதித்துவிடக்கூடாதென
பாதையின் முட்களை..
பக்குவமாய் ஒதுக்கியிருக்கலாம்!
பனியில் நடுங்கும்
பூனையைக் கண்டு
பச்சாதாபப்பட்டிருக்கலாம்!
காகத்தின் பசிக்காக
சோற்றுப்பருக்கைகளை
வீட்டு மாடியில்..
வீசியிருக்கலாம்!
பூகம்பம் - சுனாமி - புயல் - வெள்ளம்
நிவாரண நிதி கூட
நீ அனுப்பியிருக்கலாம்!
இப்படி
எத்தனையோ இருக்கலாம்
இருக்கலாம்தான்...
இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!
- ரசிகவ் ஞானியார் (rasikow@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|