Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

ராஜ்பவன் கனவுகள்
புதிய மாதவி

கனவு காணுங்கள்
விடிந்துவிடும்
நம் கலாம் சொல்லலாம்
எங்கள் கவிதைகள்
சொல்லுமோ?

Slum kids கனவுகள் காண விழிகள் வேண்டுமே
கனவுகள் எழுத இமைகள் வேண்டுமே
விழிகளில்லாத இமைகள்
இமைகள் எரிந்த விழிகள்
எப்படி எழுதுவது
எங்கள் கனவுகளை.

இமயத்தைப் புரட்டிப்போடும்
நெம்புகோல் கவிதையை
இந்த நொடியிலும்
என்னால்
உங்கள் அவைக்குத் தரமுடியும்
அதனால் என்ன பயன்?
கங்கையும் காவிரியும்
இணைந்திடவா போகிறது?

எல்லோருக்கும் விடுதலை
எல்லோருக்கும் சம உரிமை
மக்களாட்சியின் மகத்துத்தை
எழுதிய சட்டங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
செங்கோட்டையில்.
ஆனால்
நாங்கள் மட்டும் எப்போதும்
வெண்மணியில் எரிந்து
தாமிரபரணியில் கரைந்து
ஊடகங்கள் காட்டமறுக்கும்
கோர முகத்துடன்
புதைந்து கொண்டிருக்கிறோம்.

டாலர்க் கனவுகளில்
கணினி மூலைகள்
கடவோலைக்காக காத்திருக்கின்றன.
இரட்டைக் குடியுரிமைப் பேசும்
பச்சை அட்டைகளின்
பாதம் நக்கிய
இந்திய நாக்குகள்
வல்லரசுகளின் ஒப்பந்தக்கோப்பையில்
மதுவருந்தி
மயங்கிக் கிடக்கின்றன.

சட்டம் ஒழுங்கு
கெட்டுப்போனதாய்
நித்தமும் குரைக்கின்றன
அரசியல் மேடைகள்.
மறதி எப்போதும்
மனிதகுணம் என்பதால்
வாழ்ந்துகொண்டிருக்கிறது
கூட்டணி பேரங்கள்.

குடிசைகள் இல்லாத
மும்பையின் சாலைகள்
சாத்தியப்படுமா?
எத்தனைக் கோடிகள்
எத்தனைச் சட்டங்கள்
எத்தனைத் திட்டங்கள்
அத்தனையும் தலைகுனிகிறது
ஓட்டைக்குடிசைகளின்
கிழிசல்கள் கண்டு.

புரிந்துகொள்ள முடிவதில்லை
சமுதாய ரசனையை.
சந்திரமுகியுடம் ஆடிய கண்கள்
தவமாய்த் தவமிருக்கும்
விசாலமான பார்வை
விசித்திரமான காட்சிகள்
எப்போது நடக்கிறது
எங்கள் நாடகமேடையில்.

எங்கள் பதினாறு வயதில்
எந்தை சொல்லுவார்
எப்போதும்
உதவி வேண்டுமானால்
கேட்டுவிடு காவல்துறையிடம்.
இன்று-
எங்கள் புதல்விகளுக்கு
எங்கள் தந்தையர் சொன்ன மந்திரத்தை
தரணியில் சொல்லமுடியாமல்
தலைகுனிந்து நிற்கிறது
எங்கள் சரித்திரம்.

'விடுதலை விடுதலை
எல்லோருக்கும் விடுதலை'
இப்படி எல்லாம்
விடுதலைப் பண்பாடி
விண்ணதிர ஆடிட
எனக்கும் ஆசைதான்
ஆனால்
ரத்தம் சிந்தாத போராட்டங்களில்
ஆயுள்கைதியாகும் விடுதலை
சமத்துவமில்லாத சமுதாயத்தில்
தூக்கிலிடப்படுகிறது.
எங்கள்
போராட்டக்களத்தில் மட்டுமே
எழுதப்பட்டிருகிறது
சமுதாய மீட்சி.

எதிரிகளை வீழ்த்தும்
இமாலயப் போர்களின்
வெற்றி முரசுகள்
வெற்றி மயக்கத்தில்
எதிரிகளிடமே
விற்கப்படுவதும்
விலைபோவதும்
தொடர்கதையாக
தொடரும்வரை
எப்படி எழுதுவேன்
சமத்துவ சமுதாயத்தின்
சரித்திரக் கனவுகளை?

தோற்றுப்போவது
கனவுகள் மட்டுமல்ல
கனவுகளைச் சுமந்த
எங்கள் தலைமுறையின்
போராட்டங்களும்தான்.
இனி-
நாங்கள் கனவுகளை
விலக்கி வைக்கின்றோம்
மன்னிக்க வேண்டும்
வல்லரசு கனவுகாணும்
ராஜ்பவன் தோட்டங்கள்.
மன்னிக்க வேண்டும்
கனவுகளைத் தின்று கொழுத்த
எங்கள் கவிதைராசாக்கள்.
மன்னிக்க வேண்டும்
கனவு வரிகளில்
உங்கள் விருதுகளுக்காக
காத்திருக்க மறுக்கும்
எங்கள் கறுப்பு கவிதைகளை.


- புதிய மாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com) இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.