கவிதை
வழியாத காமம்
ஒளியவன்
அர்த்தங்களின்றிக் கழியும்
அந்தி நேரங்களில்
ஒரு சூனியக்காரியின்
மர பொம்மையாய்
மாறியது மனது
ஏக்கங்கள் தசைகளில்
ஏறி அதை
இறுக்கி இறுக்கி
மேலும் உணர்வுகளைப்
பலப்படுத்தியது
இரணம் இரணமாய்
வழிந்து செல்லும்
உணர்ச்சிக் கோடுகளின்
வழியே மீதமிருந்த
வெட்கமெல்லாம்
கரைந்து அழிய
தனிமையில் ஒதுங்கிய
மானின் முதல்
அலட்சியத்திற்காக
ஊடுறுவும் ஓநாயின்
கண்களோடு தசைகளைத்
துளையிட்டுத் திறக்கும்
காமம்
மழை முடிந்த பின்னும்
வழிந்து முடியாத
இலையின் தூறலாய்
அவள் கடந்த பின்னும்
தொடரும் கண்கள்.
- ஒளியவன் (oliyavan.b@gmail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|