Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

தண்ணீர் படைக்கும் தடை!
தொ. சூசைமிக்கேல்

Cauvery River

(நேரிசை வெண்பா)

ஆறுகளே! நாட்டுக்(கு) அணிகலனாய் வாய்த்திருக்கும்
பேறுகளே! உம்மால் பெருந்துயரே! – வீறுகொளாக்
கோழைத் தமிழோர் குறைபா(டு) அறியாதே
நீள நடக்கின்றீர் ‘நீர்’!...

மணற்கொள்ளை என்னும் மதிகேட்டின் உச்சம்
கணக்கில்லை யன்றோ,எம் கண்முன்! – மணக்கும்
நதிநீர் உயிருக்கு நாச(ம்)விளை விக்கும்
கதிகேட்டைக் கண்டிலரோ, நீர்?

நன்னடத்தைப் பொன்னியாம் நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார் – இந் நடத்தை
ஏற்புடைத்தோ என்றெழும் எம்மோர் குமுறலெல்லாம்
கேட்பதுண்டோ உங்கள் செவிக்கு?

பாலாற்றை எம்முன்னே பாழாறாய் ஓடவைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார் – நூலாய்
இளைக்கும் உழவர்தமை ஏறெடுத்தும் பாராப்
பழிக்(கு)இங்கே என்ன பதில்?

எல்லைப் புறத்திருக்கும் எங்கள்நீர் ஆதாரம்
முல்லைப் பெரியாற்றின் மூச்சடைத்துத் – தொல்லை
புரிகின்ற ‘தோழர்’களின் புல்லறிவாண் மைக்குப்
புரிந்துகொண் டீரோ பொருள்?

மழைநீர் பெருகின் மதகுதிறக் கின்றார்…
பிழைவானம் பொய்க்குங்கால் பேணார்…– விளைநிலமோ
வெட்டவெளி யாhனபின்பும் வெள்ளம்தாரார்… நீவிர்
உற்றபுகழ்க்(கு) உண்டோ பொருள்?

நதிநீர்ப்பங் கீட்டு நடுவர்மன்றம் இன்றோர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்(று)! – எதுசொலினும்
கேட்காது, தீர்ப்பும் கிடைக்கா(து)!... உரிமைகளை
மீட்கவழி வேறுண்டோ, மேல்?

எம்மவர்க்கு எட்டும்நீர் எட்டா(து) உமைத்தடுத்து,
வன்முறைக்கு மேலும் வழிவகுத்து, – உம்மீ(து)
அணைமேல் அணைசெய்(து) அடைக்கும் கொடுமைக்(கு)
இணையேதும் உண்டோ இவண்?

முலைசுரந்(து) பால்வார்க்கும் முன்னறி தெய்வம்போல்
அலைசொரிந்து எம்கூழ் அளக்கும் – விலைகடந்த
ஆறுகளே, நீவிர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்கிங்(கு) ஆர்?

பொழிலொடு,பூங் காற்றும் புடைசூழப் பூமீ(து)
எழில்நடையாய் ஏகும் நதிகாள்! – விழிபடரும்
கண்ணீர் துடைக்கும் கருத்திலையோ? எத்தனைநாள்
தண்ணீர் படைக்கும் தடை?

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.