Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்


ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
         அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
         என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
         சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
         எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
         மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
         கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!

desert
கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
         கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
         மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

‘எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?’
         என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
‘அத்தனையும் போதுமடா! போவோம்!’ என்றால்
         அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
         வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
         இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
         பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
         உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

‘கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!’ என்னும்
         கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
         இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
         உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
         இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
         ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
         கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
         துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
         யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
         கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
         கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.