Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்


ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
         அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
         என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
         சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
         எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
         மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
         கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!

desert
கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
         கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
         மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

‘எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?’
         என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
‘அத்தனையும் போதுமடா! போவோம்!’ என்றால்
         அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
         வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
         இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
         பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
         உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

‘கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!’ என்னும்
         கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
         இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
         உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
         இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
         ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
         கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
         துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
         யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
         கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
         கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com