கவிதை
உள்ளே கொதிக்குதோர் உலைக்களம் மானியூர் மைந்தன்
அன்னியதேசத்து அகதியாய்
தனிமையின் தாவாரத்தில்
உட்காரும் போதெல்லாம்
உறங்கிய உணர்வுகள்
உசும்பிவிடுகின்றன
செழுமையான கிராமத்தூளியிலே
கண்மலர்ந்த மழலைகள்நாம்
அந்த செம்மண்புழுதி
சந்தணமாய் உடல்தழுவ
கிளித்தட்டு ஆடியவர்
ஆயிரம் கதைசொல்லி
அன்னை சோறூட்ட
சிரித்துக்களித்து
உருசித்து மகிழ்ந்தவர்கள்
சிட்டுக்குருவியாய்
சிறகடித்துப் பறந்தஇனம்
பட்டுக்களைத்து இங்கு
பரிதவித்துப் ஏங்கிறதே
இரும்புப் பறவையிடும்
எச்சத்தில் என்இனம்
சிக்கிச்சிதைந்து
செங்குருதிச் சேற்றில்
செத்துவீழ்கிறதே
பூமிக்குவந்து பத்தேநாள் ஆன
பிஞ்சு குழந்தையும்
நெஞ்சுபிளந்து பஞ்சாகிப்போகிறதே
விட்டில்ப+ச்சிகளாய்
பட்டினியோடு தெருவோடும்
மரநிழலோடும் அச்சத்தில்
அந்தரித்துக்கிடக்கிறதே என் இனம்
பேனாவைத்தூக்கியவர்
காணாமல் போகையிலே
உணர்வுகளின் உண்மைகளை
உரக்கச் சொல்லச்சக்தியில்லை
உறவுகள் சருகாகி
உதிர்ந்து போகையிலே
உறங்கிக் கிடப்பது
உத்தமம் ஆகுமோ
இதுவெல்லாம்
விதிவிட்ட வழியென்று
மதிகெட்டுப்பேசுவதோ
எம் உள்ளக்கிடக்கையை
ஊர்கேட்கச் சொல்கின்றோம்
செத்துவிட்ட உலகச்
செவிகட்குக் கேட்குமா?
இந்த மரணஓலம்!
- மானியூர் மைந்தன் (navaas06@yahoo.de)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|