Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

ஓர் உண்மை சொல்லட்டுமா...
பாலகிருஷ்ணன்

இதுநாள் வரை
நிறைய
கவிதைகள் எழுதியிருக்கிறேன்

இன்றுதான்
முதன் முதலாய்
கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்

இறைவன்
பூமிக்கு வரமுடியாத காரணத்தால்
இங்கே தாய்மார்கள்
பிள்ளை பெறுகிறார்கள்

குழந்தைகள் பிரசவிக்கும்
முதல் இசையை
சுரம் பிரிக்கவே முடிவதில்லை
எந்த இசைக்கருவியாலும்

குழந்தைகள்
பிறக்கும் பொழுது
அழுவதன் காரணம்
பூமிக்கு வருவதன் மீதான
பயமாய்க் கூட இருக்கலாம்

குழந்தைகள்
தொப்புள் கொடியில்
பூக்கும் மலர்கள்

குழந்தைகளின்
முதல் அழுகையின் பொழுதுமட்டும்தான்
எல்லோராலும்
வெளிப்படையாகச் சிரிக்க முடிகிறது

குழந்தைகள்
கைகளை மூடிக் கொள்வதன்
காரணம் தெரியுமா?
திறந்து பாருங்கள்
நமக்கு தெரியாத ரகசியங்களை
அவர்கள் ஒளித்து வைத்திருக்கிறார்கள்

குழந்தைகள்
ஞ ங ண ந ம ன மட்டும் தெரிந்த
மெல்லினங்கள்

குழந்தைகளை
தயவு செய்து திட்டாதீர்கள்
பாவம்!
அவர்கள் கண்ணாடிகள்
பிறிதொரு நாள்
அப்படியே பிரதிபலிப்பார்கள்

குழந்தைகள் காகிதங்கள்
கவிதை எழுதுங்கள்
ஓவியம் வரையுங்கள்
கிறுக்கவும் கிழிக்கவும் மட்டும் செய்யாதீர்கள்

குழந்தைகள்
கேள்வி கேட்டால்
குழந்தைகளைப் போல பதில் சொல்லுங்கள்
உங்கள் மௌனத்தை
அவர்கள் எப்பொழுதுமே விரும்புவதில்லை

குழந்தைகளுக்காக
கதை படியுங்கள்
நாம் திருந்த வாய்ப்பிருக்கிறது

குழந்தைகளிடம்
கற்றுக் கொள்ளுங்கள்
பிரம்புகளில்லாத
ஆசிரியர்கள் அவர்கள் மட்டும்தான்

ஒரு உண்மை சொல்லட்டுமா!
ஒவ்வொரு குழந்தையும்
வளரத் தொடங்கிறபொழுது
இங்கே
ஒரு இறைவன்
இறந்து போகிறான்

- பாலகிருஷ்ணன் (balakrishnanalagarsamy@yahoo.com)



இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.