Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

காடுகளை வனைபவர்கள்...
த.அகிலன்

Man in wound எரியுண்ட நகரத்தில்
இருந்து சேதிகள் வருவதற்கான..
கடைசி வழியையும்
நேற்று மூடினர்..
கொஞ்சமாய்க் கேட்டுக்கொண்டிருந்த
விசும்பல்களும் தேம்பல்களும் கூட
கேட்காது போகும் இனி..
கருவறையின்
கதவுகளிற்குப் பின்னால்
ஒழித்தபடி..
இடுக்குகள் வழியே
கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார்..
தனது பலிபீடத்தில் வழிந்துகொண்டிருக்கும்..
குருதியின் கொடும்பசுமையை
கடவுளின் பார்வை நடுங்கிக் கொண்டிருந்தது...

பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
அந்நியர்களின்
காலரவங்கள் நொருக்கிய சருகோசைக்கு
மான்கள் பதகளித்துத்
திசைகளில் தெறித்தன..

சுடுகுழல்களின் வெடியோசை
புகுந்த நிலத்தின்
பூமரங்களில் நாளைக்கான
மொட்டுக்களும் இருந்தன
புத்தகங்களும்
கவிதைகளும் கூட..

எண்ணிக்கைகளைக் கூட மறந்துவிடலாம்
நாங்கள் எத்தனையாவது தடைவையாக
புதிய பட்டினங்களைச் சமைக்கிறோம்
என்கிற கவலைகள் ஏதுமற்று
காடுகளை வனையத்தொடங்குகிறோம்
துப்பாக்கிகளின் ஏவலின் கீழ்
திரும்பத் திரும்ப
காடுகள் இரக்கமுள்ளவை..

நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..

- த.அகிலன் (t.agiilan@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.