Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

தமிழன் துணிந்தால்...!
அகரம் அமுதா

தனக்கென்று நாடொன் றில்லாத்
தமிழனே! இன்னல் என்ப(து)
உனக்குற்றால் அன்றி நெஞ்ச
உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!
கணக்கற்றோர் ஈழ நாட்டிற்
களங்கண்டுச் சாகும் போதும்
'எனக்கென்ன?' என்று நீயும்
இருப்பதே மாட்சி யாமோ?

நம்மினம் உரிமை யற்று
நளிவெய்தித் தாழக் கண்டும்
நம்மினம் இடமொன் றின்றி
நானிலம் அலையக் கண்டும்
நம்மினம் வாழ்க்கை யற்று
நமனிடஞ் சேரக் கண்டும்
கம்மென இருப்ப தாநீ?
கண்ணில்தீ கனலச் செய்வாய்!

தமிழரென் றினமொன் றுண்டேல்
தனியவர்க் கோர்நா டெங்கே?
தமிழரென் றினமொன் றுண்டேல்
தனித்தமிழ் ஆட்சி எங்கே?
தமிழரென் றொன்று பட்டுத்
தனியீழம் பேணு கின்றார்
தமிழரென் றுணர்வுண் டென்றால்
தகைந்*தவர்க் குதவ வேண்டும்!

குமிழினம்* ஒன்று பட்டால்
குடிகொளும் வங்கம் என்றால்
துமியினம்* ஒன்று பட்டால்
தோன்றும்பா கிசுத்தான் என்றால்
உமியினம் ஒன்று பட்டால்
உயிர்பெரும் இசுரேல் என்றால்
தமிழினம் ஒன்று பட்டால்
தரணியே கைவ ராதா?

துயில்சேயுங் கிள்ளி விட்டுத்
தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்
பயில்நெஞ்சத் திந்தி யாதன்
படைவலி இலங்கைக் கீந்தும்
இயம்பிடும் 'பேசித் தீர்ப்பீர்!'
எந்தமிழ் இனத்தைக் கொல்ல
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்
முடிக்கிறார் தடுத்தோ மாநாம்?

இழுதை*போல் இன்னல் செய்தே
இன்புறும் கீழ்ம னத்தர்
கழுதைபோல் உதைத்த போதும்
கலங்கிடா உரனும் பெற்றோம்!
பழுதை*போல் கடித்த போதும்
பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்
பொழுதையார் நிறுத்தக் கூடும்?
புலிக்குமுன் பூசை ஒப்பா?

பொடாச்சட்டம் பொருதும் போதும்
புத்தீழம் புலரக் காண்போம்!
தடாச்சட்டம் தாக்கும்போதும்
தனியீழம் தழைக்கச் செய்வோம்!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்
இனிதீழம் எழுக என்போம்!
எடா!*சட்டம் என்ன செய்யும்?
இன்றமிழன் துணிந்தா னென்றால்!

அருஞ்சொற்பொருள்:- தகைந்து -துணிந்து; குமிழ் -நீர்க்குமிழ்; துமி -நீரின் நுண்துளி; இழுதை -பேய்; பழுதை -பாம்பு; எடா -ஏடா என்ற விளியின் குறுகல்

- அகரம் அமுதா (agramamutha08@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.