கவிதை
மீசை வணிகம் ஆதவன் தீட்சண்யா
வினோதகனாய்த் தெரியும் ஒருவன்
நகரத்தின் சந்தடி மிகுந்த சதுக்கங்களில் நின்று
தன் கைவசமிருக்கும் மீசைகளை விற்றுவிட்டுப்போக காத்திருக்கிறான்
வேறொரு நகரத்தில் நேற்றிருந்தது போலவே
அவனுக்குத் தெரியும் அவனது வாடிக்கையாளர்கள் யாரென்று
மீசையின் மகிமையை அறிந்த அவர்கள்
நகரத்தின் இண்டு இடுக்குகளிலிருந்து கரப்பானைப்போல வெளிப்படுவார்கள்
இருட்டத் தொடங்கியதும்
நூறுமீசைகளை வைத்துப் பார்த்து ஒன்றை தேர்வுசெய்கிறவராய்
அவனது வாடிக்கையாளர் ஒருபோதும் இருப்பதில்லை
கஞ்சாப்பொட்டலம் கைமாறும் லாவகத்துடன்
முகமேற்றி அனுப்பிவிடுவான் மீசைகளை
வேண்டாமென யாரோ மழித்தெறிந்த வெறும் மயிர்களைக்கொண்டு
அவன் படைத்தனுப்பும் புதிய ஆண்கள்
அந்த நொடியிலிருந்தே மீசையை முறுக்கி
வீரத்தையும் அதிகாரத்தையும் ஆண்மையையும் வெளிப்படுத்துவார்கள்
தங்களது ஒட்டுமீசை விழுந்துவிடக்கூடாதென்ற பயத்தோடு.
நன்றி: உயிரெழுத்து
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|