நிகழ்வு
ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
ஹெச்.ஜி.ரசூல்
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளையின் 11 - 01 - 2009 ஞாயிறு நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது. தலித் சிந்தனையாளர் வி.சிவராமன்,கதையாளர் மீரான்மைதீன், ஆய்வாளர் பிரசாத் நிகழ்வை நெறிப்படுத்த அண்ணாச்சி கண்ணன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
கேரளமாநில மொழியியற்புல ஈழத்து ஆய்வாளர் கலாநிதி அரங்கராசன் சங்க இலக்கியம் முதல் ஈழம் பொருளில் ஆய்வுரையை நிகழ்த்தினார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு அகழ்வாராய்ச்சி, சங்க இலக்கியப் புலவர் ஈழத்து பூத்தன் தேவனார் சார்ந்து ஈழம் கருத்தாக்கத்தை அடையாளப்படுத்தினார்.ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கத்திற்கு மாற்றமான கனகிபுராணம்,கோட்டுப்புராணம்,பனையை மையப் பொருளாக்கிப் பாடப் பட்ட தாலப் புராணம் குரித்தும் விரிவாக உரையாடினார். கவிஞர் ஆர்.பிரேம்குமார் இக் கட்டுரைமீது தனது கருத்துரையைத் தெரிவித்தார்.
முனைவர் செல்வகுமாரன் புலம்பெயர் கதையுலகம் பொருளில் சோபாசக்தி,சக்ரவர்த்தி,கலாமோகன் படைப்புகளில் வெளிப்படும் வாழ்வியல் யதார்த்தத்தை விவரித்தார். கவிஞர் ஜி.எஸ்.தயாளன் கவிதை எதிர்ப்பின் மொழி பொருளில் வ.அய்.ச.ஜயபாலன்,சேரன்,சோலைக்கிளி, அனாரின் கவிதைமொழி குறித்து உரையாடினார். கவிஞர் நட.சிவக்குமார் ஈழ இலக்கியத்தில் தலித்திய வெளி பொருளில் டேனியலின் பஞ்சமர்,கானல்,பஞ்சகோணங்கள் நாவல்கலை முன்வைத்து உரையாற்றினார்.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீசான்கட்டைகளில் மீளஎழும் எழுத்துக்கள் பொருளில் அஸ்ரப்சிகாப்தீன்,ஸதக்கா,நளீம்,றஸ்மி,அலறி கவிதைகளினூடாக தமிழ்முஸ்லிம்கள்,தமிழ் விடுதலை போராளிகள் உறவுகள்.முரண்கள் வெளிப்படுவதை முன்வைத்தார். விமர்சகர் அனந்தசுப்பிரமணியன் தற்கால ஈழத்து குறும்படங்களின் கலைநோக்கு குறித்து பேசினார்.
நிறைவுரை ஆற்றிய சுபாஸ்சந்திரபோஸ் தற்போதைய உடனடித் தேவை இலங்கையில் போர்நிறுத்தமே இந்திய தமிழ் அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்றுகுவிக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
கவிஞர் பூதை செ.கன்ணன் நிகழ்வு குறித்த விமர்சனங்களை முன்வைத்து நன்றி கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|