Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு
உழைக்கும் மக்களே உண்மையான அறிவாளிகள்

சுபவீ

2004 அக்டோபர் 8, இந்து ஆங்கில நாளேட்டில், யு. எஸ். ஐயர் என்பவரின் கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது. “தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. இனி ஒருவராலும் அதைத் தடுக்க முடியாது” என்று தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அண்மையில் அறிவித்துள்ளதைக் கண்டு பொறுக்கமுடியாமல், பெங்களூரிலிருந்து ஒரு ஐயர், தன் கடிதக் கணையை ஏவியுள்ளார்.

இது ஒரு தற்கொலைச் சலுகை என்று தன் கடிதத்தை முடிக்கும் அவர், தங்கள் ஊழியர் முன்னேறிய வகுப்பினரா, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா என்பன குறித்து, எந்த ஒரு தொழிலதிபரும் கவலை கொள்வதில்லை என்று எழுதுகின்றார். அதாவது, தங்களின் நிறுவனம் முன்னேறுவதற்கு யாரை நியமிக்கலாம் என்றுதான் சிந்திப்பார்களே அல்லாமல், சாதி அடிப்படையில் ஊழியர்கள் சேர்க்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்பதே அக்கடிதம் கூறவரும் செய்தி.

சாதிபற்றிக் கவலையில்லை என்று கூறும் அவரது பெயரைப் பார்த்தீர்களா? பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆணா, பெண்ணா என்பதும் கூடத் தெரியவில்லை. சாதி மட்டும்தான் துருத்திக் கொண்டு நிற்கிறது. தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்களாம். ஆனால், சமூக அக்கறையுள்ள அமைப்புகளும், அரசாங்கமும் நாட்டின் முன்னேற்றம், சமூகநீதி ஆகியன குறித்துக் கவலைப்பட வேண்டியுள்ளதே.

தனியார் நிறுவனத்தில் அரசு எப்படித் தலையிடலாம் என்று சிலர் கேட்கின்றனர். அரசிடமிருந்து மலிவு விலைக்கும், இலவசமாகவும், நிலத்தையும், நீரையும், மின்சாரத்தையும் தனியார் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாமாம். ஆனால், அதற்குப் பிறகு அரசு தலையிடக் கூடாதாம். இங்கே எத்தனை கிராமங்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றன? அந்தச் சிற்றூர்களிலிருந்து நிலத்தடி நீரையெல்லாம், பெரிய பெரிய ஆழ்குழாய்களைப் போட்டு உறிஞ்சிக் கொள்ளும் இவர்கள், அந்தக் கிராமத்து மக்களில் சிலருக்கு வேலை கொடுத்தால், என்ன குடிமுழுகிப் போய்விடும்? நிர்வாகத்தின் முன்னேற்றம் எப்படித் தடைப்படும்?

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில் சேர்வோர் அனைவரும் தகுதிக் குறைவானவர்கள் என்பது இங்குத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது வெளியிடப்பெறும் மதிப்பெண் பட்டியலைப் பார்த்தால் ஓர் உண்மை பளிச்செனத் தெரியும்.

பொதுப்போட்டியின் குறைந்த அளவு மதிப்பெண் 94 விழுக்காடு என்று இருந்தால், பிற்படுத்தப்பட்டோர் போட்டியில் அது 90 அல்லது 91 விழுக்காடாக இருக்கும். ஆதித்தமிழர் பட்டியலில் மேலும் சில மதிப்பெண்கள் குறையும். அவ்வளவுதான். ஆனால், பொதுப்போட்டிக்கும், பிறபோட்டிகளுக்குமிடையே, மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பது போலவும், 40 - 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள் பலர் இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்துவிடுவது போலவும், இங்கு ஒரு பெரும் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூட எவராலும் காட்ட முடியாது.

மேலும், மேட்டுக்குடியினரின் கல்வி, கறிக்குதவாத வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே. தமிழகத்தில் மிகப்பெரிய தொழில்களும், பாரம்பரியத் தொழில்களுமான உழவு, நெசவு, மீன் பிடித்தல் ஆகியனவற்றிலும், பிற தொழில்களிலும் நேரடியாக ஈடுபடும் உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாம் பட்டறிவு (அனுபவம்) கூடுதலாக இருக்க முடியும். அவர்களுக்குக் கிடைக்கின்ற ஏட்டுக் கல்வி, அதாவது நூலறிவு, அவர்களின் பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றிகரமாக ஈடுபடவைக்கும்

ஆகவே, பிற்படுத்தப்பட்டோர், ஆதித்தமிழர் சிற்றூர்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள், நிறுவனங்களையும், தேசத்தையும் மேன்மைப்படுத்துமேயன்றித் தரங்குறைத்து விடாது. இத்தனை உண்மைகளையும் எடுத்துச் சொல்லித், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதைச், சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் உடனே செய்ய வேண்டும். சமூக நீதியை ஏற்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சிறு சிறு அமைப்புகள் அனைத்தும் இக்கோரிக்கைக்கான வேலைத் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இந்தியாவின் தலைமை அமைச்சரே, இதற்கு ஆதரவாக இருக்கும் இத்தருணத்தில், சூழலை மிகச் சரியாகப் பயன்படுத்தி, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையும் அல்லவா? தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் வெறும் அறிவிப்புத்தான் கொடுத்துள்ளார். அதை ஆணையாகச், சட்டமாகக் கொண்டுவர நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தத் திசையில் இதுவரை பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அலறத் தொடங்கிவிட்டன அக்கிரகாரங்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

- அக்டோபர் 16, 2004

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com