சேலத்தில் தொடர்வண்டித் தலைமையகம்
சுப.வீ.
தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. தனியாக ஒரு தொடர் வண்டிக் கோட்டம் சேலத்தில் அமைக்கப் படும் என்று 13.12.2005 அன்று மத்திய இணையமைச்சர் வேலு இனிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சோலையார்ப்பேட்டை தொடங்கி போத்தனூர் வரையில் உள்ள அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களுக் குமான தலைமை நிலையம் இன்று வரை கேரளாவில் உள்ள ஒலவக் கோட்டிலேயே உள்ளது. இதனை தமிழகப் பகுதிக்கு, குறிப்பாக கோவை, ஈரோடு அல்லது சேலத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்பது நம்முடைய நெடுநாள் கோரிக்கையாகும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இக்கோரிக்கையைத் தந்தை பெரியார் முதலில் முன்னெடுத்தார். தொடர்ந்து பல கட்சிகளும் பல அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்றன. கேரளாவில் அரசியல் கட்சிகளும் பத்திரிகைகளும் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்தன. மாத்ருபூமி ஏடு இதனைக் கண்டித்துக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டுள்ளது.
தலைமையகம் கேரளாவில் அமைந் திருந்த காரணத்தால் இன்றுவரை சோலையார்ப்பேட்டை தொடங்கி அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் மலையாளிகளின் ஆதிக்கமே நிலவி வருகிறது. நிலைய அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதை நாம் காண முடியும். அதுமட்டுமல்லாமல், தொடர்வண்டி நிலையங்களில் உள்ள தேனீரகங்கள், பத்திரிக்கைகள் விற்கும் கடைகள், தொலை பேசி அழைப்பிடங்கள் ஆகியனவற்றில் பெரும்பான்மை மலையாளிகளிடமே உள்ளதையும் அறியலாம்.
இந்நிலையை மாற்ற ஏராளமான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. குறிப்பாக கோவை இராமகிருட்டிணன் நீண்ட நாட்களாகவே இதற்கான தொடர் முயற்சிகளைச் செய்துவந்தார். இப்போது பா.ம.க.வைச் சேர்ந்த இணையமைச்சர் வேலு முயன்று இப்பணியை முடித்துள்ளார். தொடர்வண்டி அமைச்சர் லாலு பிரசாத்திடம் ஒப்புதல் பெற்று, கடந்த மாதம் அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பு தமிழர்கள் அனை வரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதே போன்று தென் தமிழகத்தின் பல்வேறு தொடர்வண்டி நிலையங்கள் திருவனந்தபுரத் தலைமையகத்தின் கீழ் உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. அங்கும் மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. அத்தலைமை யகத்தையும் இரண்டாகப் பிரித்து, திருநெல்வேலியில் ஒரு தலைமை இடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களை அதன் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டும்.
மத்திய அரசும், தொடர்வண்டி அமைச்சகமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
- சனவரி 1 06
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|