திரைப்பட விமர்சனம்: தவமாய்த் தவமிருந்து...
சுப.வீ.
படத்தை ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை.... கண்ணீர் மறைக்கிறது. படுத்து வீட்டில் உறங்க முடியவில்லை.... படம் ஒடுகிறது. அம்மா & பிள்ளை பாசம் அண்ணன்&தங்கை பாசம் என்னும் வரிசையில், இப்படம், அப்பா&மகன் பாசம் & அவ்வளவுதான், கதை ஒன்றும் புதிதில்லை என்று சிலருக்குத் தோன்றலாம்.கதை மட்டுமன்று, வாழ்க்கையும் எப்போதும் பழசுதான். அந்தப் பழைய வாழ்க்கையின், புதிய புதிய மொழிபெயர்ப்புகளே கலையும், இலக்கியமும்.
இப்போது இயக்குநர் சேரன், இப்படத்தில் ஒரு கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் இதயத் துடிப்பை, நெற்றிச் சுழிப்பை, கண்ணீரை, புன்னகையைக் கவிதைபோல் மொழி பெயர்த்துள்ளார், காவியம் போல் படமெடுத்துள்ளார்.
மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் படம் மிகவும் நீளமாய் இருக்கிறது, கதை மெல்ல நகர்கிறது, சில வேளைகளில் விவரணப் படம் (டாக்குமெண்டரி) போல் ஆகி விடுகிறது. ஆட்டம், பாட்டு, துள்ளல், கவர்ச்சி எதுவுமே இல்லை, நகைச்சுவைக்கும் பஞ்சம் & என்பனவெல்லாம் வணிக நோக்கிலான விமர்சனம். ஆனால் இப்படமோ வாழ்க்கையை, சமூகத்தை விமர்சிக்கிறது.
அடுத்தவர்களைக் கொலை செய்து மகிழும் "அந்நிய'ப் பண்பாட்டைப் புறந்தள்ளி, தவமாய்த் தவமிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோர்களின் தமிழ்ப் பண்பாடு இப்படத்தில் பதிவாகியுள்ளது.நாற்பது ஆண்டுகளாய் மிதிவண்டியை மிதித்து மிதித்தும், அச்சு இயந்திரத்தைக் காலால் அழுத்தி அழுத்தியும் காய்த்துப் போன அப்பாவின் காலடியில், மகன் சிந்தும் கண்ணீர், எந்தப் "பாதபூஜை'க் கலாச்சாரத்தைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது.
நெஞ்சம் நெகிழ்ந்து போக நிறையக் காட்சிகள் உண்டு. காற்றில் பறக்கும் முந்தானை, கட்டி உருளும் ஆபாசம், தொப்புள் தெரிய நடனம், இரட்டைப் பொருளில் உரையாடல் என்று ஒரு காட்சி கூடப் படத்தில் இல்லை.
சமூக உறவுகளை, மண்ணின் பண்பாட்டைச் சிதைத்தும், சீரழித்துமே படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், அவற்றை மேன்மைப்படுத்தும் விதத்தில், சேரனால் சிந்திக்க முடிந்திருக்கிறது.
ராஜ்கிரண், சரண்யா இருவருக்கும் நடிக்கவே தெரியவில்லை! வாழ்ந்திருக்கிறார்கள். பா.விஜய் எழுதியிருக்கிற "ஒரு முறைதான், ஒரு முறைதான்' பாடலை, மறு முறையும், மறுமுறையும் கேட்கத் தோன்றுகிறது.
கிராமம் என்றால், சாதியும், குடியும்தான் என்றில்லாமல், அந்த மக்களின் வெகுளித்தனத்தை, மனித நேயத்தை, பாசத்தை, அரவணைப்பைப் படம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார் சேரன். தமிழ் வழிக் கல்வி, கந்து வட்டிக் கடன் கொடுமை போன்றவை மிக மெலிதாகப் பேசப்பட்டுள்ளன. ஆனாலும் கவனத்தை ஈர்க்கின்றன.
இந்தப் படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. தாயின் கண்ணீரில் கரிக்கும் உப்பைப் போல!
இந்தப் படத்தை இளைஞர்கள் விரும்புவார்களா என்பதும் ஒரு கேள்வி.
விரும்பினால்தான் பிழைக்கும்! படமல்ல, இந்த நாடு!
நன்றி : ராஜமுத்திரை
- டிசம்பர் 16 2005
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|