Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
திரைப்பட விமர்சனம்: தம்பி

சுப.வீ.

சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி. சமூகத்திற்காகத் தன்னை எரித்துக்கொள்கிறவன் புரட்சியாளன். தம்பி - இரண்டாவது வகை

Madhavan தம்பி பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம். முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது.

“இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதில்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.”

பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி, ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ ஒரு தாயின் மடி. இம்முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது. கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத்தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குநரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம். இந்த வெளிச்சம் இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம். இந்த இரைச்சல் ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல்.

ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவிகளிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று, இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? என்று தம்பி இரைச்சலிட, அடி, அவனுங்கள அடி என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.

கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம், உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க, ஜெயில்ல இருக்காரு என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்விளைக் கேட்க, “எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார்” என்று விடை வருகிறது. கொல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்பமும் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது. இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.

பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப் பழி வாங்குவதே வேலையா இருந்தா, பாதி உலகம் சுடுகாடாப் போயிடுமே என்னும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது. “எங்கப்பாவை நீ கொன்னுட்டே இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ளை, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.... இந்த வேலையே வேணாம். யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும். இங்க... இப்போ... நான் நிறுத்திக்குறேன்” என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.

Madhavan and Pooja சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளாக உள்ளனர். ஒளிப்பதிவாளருக்கும் ஒரு பெரும் பங்கு உள்ளது.

“சாமியை ........
................
சாக்கடை..........
............ கைகளை மறந்திட்டோம்” என்ற பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.

சே குவேரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில். காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தம்பியின் வடிவில். இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குநர் சீமானுக்குத்தான் வரும்.

அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று, ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்!.

(தென்செய்தி இதழில் வெளியான கட்டுரை)

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.