Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது" - தீபச்செல்வன்
பேட்டி: நிந்தவூர் ஷிப்லி


ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம்.

01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள்

தீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். அப்பாவால் சிறிய வயதில் கைவிடப்பட்ட சூழ்நிலையில் அம்மா இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாய் தனித்து எங்களை வளர்த்து வருக்கிறார். போரில் எனது அண்ணன் ஒருவனை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு தங்கை இருக்கிறார். இது தான் எங்கள் குடும்பம். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.

02) நிந்தவூர் ஷிப்லி :- முப்பது வருடங்களாக யுத்தத்தினால் சிதைந்து கொண்டிருக்கும் வடபுலத்திலிருந்து குறிப்பாக கிளிநொச்சி வன்னிப்பகுதியிலிருந்து மிகுந்த நெருக்கடியான சூழலிலும் ஒரு எழுத்தாளனாக உங்களை எங்கனம் நிலைநிறுத்திக்கொண்டீர்கள்..?

தீபச்செல்வன் :- உன்மைதான், யுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.

03) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தின் மீதான ஆர்வம் அல்லது வெறி எப்படி உங்களை தொற்றிக்கொண்டது.?

தீபச்செல்வன் :- முன்பு வாசிப்புக்கள் ஓரளவு எழுதத் தூண்டியிருந்தன. ஆனால் அவை போலச்செய்தல்களாகவும் பலவீனமானவையாகவும் இருந்தன. மிகவும் வறுமையான வாழ்வுச்சூழ்நிலை அம்மாவின் தனித்துவிடப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்தில் அனுபவித்த கொடுமைகள் சொந்தங்களின் நடைமுறைகள் போர் இடப்பெயர்வு என்பன என்னை எழுதத் தூண்டியிருந்தன. எழுத்து நிம்மதியை தந்தபொழுது எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தான் எழுத்தைவிட்டு நீங்கமுடியாதிருக்கிறது.

04) நிந்தவூர் ஷிப்லி:- உங்கள் சமூகம் சார்ந்த வாழ்வியல் வலிகளை உலகளாவிய ரீதியில் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தற்கால இலக்கிய ஊடாட்டங்கள் அல்லது எழுத்து அசைவுகள் எப்படி இருக்கின்றது..? அவைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?

தீபச்செல்வன் :- உலகளாவிய ரீதியில் இன்று இலக்கிய வாசிப்பு ஊடாட்டங்களை ஏற்படுத்த முடிகிறது. இதற்கு இணையம் பெரியளவில் உதவுகிறது. சமூகம் பற்றிய ஓட்டங்களையும் வாழ்வியல் வலிகளையும் உடனுக்குடன் பேசுகிற வசதி நிலவுகிறது. அதிலும் இன்று கருத்தூட்டங்கள் என்பது நிதானமாகவும் ஆழமாகவும் கூட முன்னெடுக்கப்படுகிறது.

05) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தில் உங்கள் குரு யார்? யாரையேனும் பின்பற்றுகிறீர்களா? வழிகாட்டிகள் அல்லது முன்னோடிகள் என்று யாரையேனும் முன்மொழிகின்றீர்களா?

தீபச்செல்வன் :- குரு என்று யாருமில்லை. யரையும் பின்பற்றுவதும் என்றில்லை. இந்தக் கேள்வியை பல உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. உன்னை நீ கண்டு பிடி என்றே நெருங்கி பழகுகின்ற படைப்பாளிகள் கூறியிருக்கிறார்கள். சிலருடைய படைப்புக்களை வாசிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. எனது எழுத்துக்ளை காட்டி கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். சில இடங்களில் ஏற்றிருக்கிறேன். பலர் என் எழுத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரன், நிலாந்தன், பொன்காந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். கருணாகரன், நிலாந்தன் என்னை கூடுதலாக செம்மைப்படுத்தியவர்கள் என்று கூறலாம். கருணாகரன் சில வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.

அது போல நம்மைப் போன்ற இளையவர்களின் கருத்து உரையாடல்களும் இடம்பெறுகின்றன. றஞ்சனி, பஹீமாகான், சித்தாந்தன், மாதுமை, பிரதீபா, அஜந்தகுமார் போன்றோரிடமும் நல்ல உரையாடல்கள் இடம்பெறுகின்றன.

06) நிந்தவூர் ஷிப்லி :- உங்கள் தீபம் இணையத்தளம் பற்றிச் சொல்லுங்கள்

தீபச்செல்வன் :- அது பதுங்குகுழியிலிருந்து தொடங்கப்பட்ட வலைப்பதிவு. அதன் மூலம்தான் எழுத்தை உலகளாவிய அளவில் பகிர்ந்து வருகிறேன். தீபத்தை பலர் வாசித்து வருகிறார்கள். அந்தப் பக்கத்தை குழந்தைகளின் பக்கமாகவே பதிந்து வருகிறேன். உடனுக்குடன் கிடைக்கிற பின்னூட்டங்கள் ஆறுதலும் தருகிறது. அவைகள் செம்மைக்கு உதவுகின்றன.

07) நிந்தவூர் ஷிப்லி :- யதார்த்த நிகழ்வுகளை வியாக்கியானம் செய்யும் படைப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தீபச்செல்வன் :- இது பற்றி ஓரளவு கூறமுடிகிறது. யதார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் அதற்குரிய வடிவத்தையும் மொழியையும் கொண்டிருக்க வேண்டும். இயல்பான வெளிப்பாடு இங்கு முக்கியமானது போலுள்ளது. அதன் மூலம்தான் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. தவிரவும் இது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இயல்பான வடிவம் மொழி என்பவற்றின் ஊடாக யதார்த்தத்தைப் பேசுகிற பொழுது அது வெற்றியளிக்கிறது.

08) நிந்தவூர் ஷிப்லி :- 1990 இற்குப் பின்னரான கிளிநொச்சி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா? போர் நகங்களின் கீறல்களை ஒரு எழுத்தாளனாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- 90களுக்குப் பிறகு கிளிநொச்சி பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வப்போது அதன் வளமான பகுதிகள் அழகான இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 96இல் கிளிநொச்சி நகரமே அடிமையாக்கப்படடு சிதைந்து போனது. அங்கு பல பொதுமக்ககள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மீண்டும் மீட்கப்பட்டபொழுது மீளுகின்ற வாழத் துடிக்கின்ற மனதோடு நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்படட்து. இப்படியான நகரத்தை மீண்டும் குறிவைத்து வருகிறார்கள். ஈழப்போராட்டம் இன்று கிளிநொச்சி நகரத்தில்தான் மையாக கிடக்கிறது. அது மீண்டும் சிதைக்கப்படுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

09) நிந்தவூர் ஷிப்லி :- கிழக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் வடக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

தீபச்செல்வன் :- அப்படி வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எல்லாம் படைப்புக்கள்தான். பொதுவாகவே ஈழத்துப் படைப்புக்களுக்ககுரிய இயல்புகளைதான் காணமுடிகிறது. தமிழ்த்தேசியம் பெண்ணியம் சாதியம் போன்ற தன்மைகளில் இயல்பு ஒன்றுகின்றன. இரண்டு பகுதிகளும் இணைந்த மொழி வாசனை என்பவற்றைக் காண முடிகிறது. சிலருடைய படைப்புக்கள் குறிப்பிட்ட பிரதேச சொற்கள் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அது வன்னி யாழ்ப்பாணம் தீவகம் மன்னார் மட்டக்களப்பு என்றே வேறுபடுகின்றன. அதிலும் இன்று எழுதி வருபவர்களிடம் அந்த வேறுபாடுகளைக்கூட காணமுடியவில்லை. அவர்கள் வேவ்வேறு பிரதேச அனுபவங்களையும் எல்லாப் பிரதேசங்களுக்கரிய இயல்புடனும் எழுதுகிறார்கள்.

10) நிந்தவூர் ஷிப்லி :- யாழ் பல்கலைக்கழக தமிழ் விஷேட துறை மாணவன் என்பதனால்தான் எழுத்தில் உங்களை சீர்படுத்திக்கொண்டீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

தீபச்செல்வன் :- இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவன் என்பதனாலோ தமிழ்விசேடதுறை மாணவன் என்பதனாலோ எழுதி வருவதாகக் கூற முடியாது. நமது தமிழ்த்தறையில் ஒரு கட்டுரையைக்கூட சரியாக எழுதமுடியாத மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மருத்துவபீடம் முகாமைத்துவபீடம் விஞ்ஞானபீடங்களில் பல்ல படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள்.

இருந்தாலும் இன்று பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எழுதுவதை அடையாளம் காட்டுவதில்லை. சில விரிவுரையாளர்கள் மாணவர்கள் எழுத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. முன்பு பல்கலைக்கழகங்களை மையப்படுத்தியே அங்கிருந்து எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இப்பொழுது ஆக்க பூர்வமான எழுத்துக்களை பல்கலைக்கழக சூழலில் காணமுடிவதில்லை. வறண்ட சொற்களோடும் பண்டிதத்தனத்தோடும் பல தமிழ்துறைகள் இருக்கின்றன. முதலில் அவை நவீன அறியிவல் துறையாக ஆக்கப்படவேண்டும்.

பல்கலைக்கழகம் தமிழ்த்துறை என்று எழுத்துச்சூழலை வட்டமிட முடியாது. எழுத்து வாழ்விலிருந்துதான் உருவாகிறது. நல்ல எழுத்தாளர்கள் பலரை பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான் காணமுடிகிறது.

11) நிந்தவூர் ஷிப்லி :- கவிதைகள் தவிர வேறெந்த துறைகளில் உங்களுக்கு நாட்டம் இருக்கிறது?

தீபச்செல்வன் :- கவிதைகள் தவிர ஒளிப்படம் எடுப்பதிலும் நாட்டம் இருக்கிறது. வீடியோ விவரணம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. சமீபமாக ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். அத்தோடு எனது பார்வை கருத்துக்களுக்கு எட்டிய வகையில் விமர்சனங்களும் எழுதி வருகிறேன். நல்ல படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கிறது முயற்சித்துக்கொண்ருக்கிறேன்.

12) நிந்தவூர் ஷிப்லி :- தற்போதைய பின்நவீன இலக்கியங்கள் பற்றி தாங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- பின் நவீனத்துவ இலக்கியங்கள் தமிழில் அழகியல் பூர்வமான படைப்புக்களைத் தருகின்றன. இதை கருத்துக்கள் பதுங்கிக் கிடக்கும் அல்லது ஒளிந்திருக்கும் படைப்புக்கள் அல்லது குவிந்துகிடக்கும் படைப்புக்கள் என்று கூறலாம். வடிவத்திற்கும் மொழிக்கும் அதிகமான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி நிற்கிறது. முன்பு நாட்டாரியல் இலக்கியம் செவ்விலக்கியம் என்பன பிரிந்து கிடந்தன. ஆனால் பின் நவீனத்துவ இலக்கியங்களில் நாட்டாரியல்கூறுகள் கலந்த சமூகத்தின் அசலான தோற்றதத்தை காணமுடிகிறது. படைப்பக்களில் ஆழமும் கனதியும் ஏற்பட்டிருக்கிறது. இரசனை அதிகரித்திருக்கிறது.

அதிகாரங்களினால் மக்களது வாழ்வும் கருத்துக்களும் விழுங்கப்படுகின்ற சூழ்நிலையில் பின் நவீனத்துவ இலக்கியங்கள் கருத்துக்களை பதுக்கி காவிச் செல்கிறது. மனிதர்களைப்போல கருத்துக்களும் இங்கு பதுங்கிக்கிடக்கின்றன.

13) நிந்தவூர் ஷிப்லி :- இலங்கையின் எழுத்துத்துறை முன்னொருபோதுமில்லாதவாறு இன்றைய காலகட்டங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்து என்கிற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

தீபச்செல்வன் :- அப்படிக்கூற முடியாது. இப்பொழுது இலங்கையை மற்றும் ஈழத்தை பொறுத்தவரை எழுத்து ஆபத்தானதாகக் காணப்படுகிறது. சமூகத்தை அசலாக பிரதிபலிக்கின்ற படைப்புக்கள் மிகவும் குறைவாகவே வருகின்றன. எல்லாவற்றையும் அப்படி கூறிவிடமுடியாது. சிலரிடம் துணிச்சலும் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. ஆனால் அதிகாரங்களினால் அவைகளின் மேலாதிக்கங்களினால் சில எழுத்துகள் அடங்கி விடுகின்றன. தணிக்கை எச்சரிக்கை என்பன இயல்பான எழுத்தைப் பாதிக்கிறது. ஊடகங்கள் அரசம மற்றும் தனியாள் அதிகார மயமாகிவிட கருத்து நசிபடுகிறது. பொறுப்புள்ள ஒரு படைப்பாளிக்கு இது சங்கடமானதாயிருக்கும். சிலர் அதிகாரங்களிற்கு மடிந்து ஏதோ எழுதி தம்மை எழுத்தில் தீவிரமாகக் காட்டுவது பக்கங்களை நிறைப்பது படங்களை பிரசுரிப்பது நமது இலக்கிய வளர்ச்சி இல்லை என்றுதான் படுகிறது.

14) நிந்தவூர் ஷிப்லி :- போர்வலிகளைத்தவிர வேறு கருக்களில் நீங்கள் கவிதை எழுத எத்தனிக்கிறீர்கள் இல்லை. கவிதையின் உள்ளார்ந்தம் மிகப்பரந்தது இல்லையா?

தீபச்செல்வன் :- நான் போர் வலிகளைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தனிமனித உணர்வுகள் போன்று பலவற்றை எழுதுவதாக நினைக்கிறேன். அறையிலும் வெளியிலும் சந்திக்கின்ற மனிதர்களின் முகங்கள் கோபம் நெருக்கம் பிரிவுகள் போல பலவற்றால் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறன். மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கங்களை 'பல்லி அறை' என்ற வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். எழுதுகின்ற எல்லாக் கவிதைகளையும் படித்தால் இது புரிந்து விடும். இருந்தாலும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமாக நான் எழுதுகின்ற போர் மற்றும் அரசியல் கவிதைகளைத்தான் பத்திரிகைகள் இணையதளங்கள் பிரசுரிக்க முக்கியம் கொடுக்கின்றன.

15) நிந்தவூர் ஷிப்லி :- விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தால் உங்கள் கவிதை நூலொன்று வெளிவர இருப்பதை அறிகிறேன்... அந்நூல் பற்றி கூறுங்கள்?

தீபச்செல்வன் :- கவிதைப் புத்தகம் வெளியிடுவதை முதலில் நான் சிந்திக்கவில்லை. சுவிஸலாந்திலிருக்கும் எழுத்தாளர் மாதுமைதான் புத்தகம் வெளியிடுகின்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தினார். 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' என்ற அந்த புத்தகம் வெளிவர அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இது தான் எனது முதலாவது புத்தகமாக வருகிறது. தெரிவுசெய்யப்பட்ட கவிதைகள்தான் இடம்பெறுகின்றன. காலச்சவடு பதிப்பகம் அதனை சிறப்பாக வடிவமைத்து வெளியிடுகிறது. இங்கு நிலவுகின்ற போர்ச்சூழலில் புத்தகம் பதிப்பது வெளியிடுவது மிகவும் சிக்கல் மிகுந்திருக்கிறது. எனவே காலச்சுவட்டின் இந்த வெளியிட்டிற்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.

16) நிந்தவூர் ஷிப்லி :- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் வகிக்கும் பங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தீபச்செல்வன் :- நிறையவே இருக்கிறது. அதுவும் பிரக்ஞை பூர்வமான பங்களிப்பிருக்கிறது. ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை சித்திலெப்பைதானே எழுதியிருக்கிறார். உமறுப்பலவர் பேராசிரியர் உவைஸ் போன்றவர்களின் பங்களிப்புக்கள் செம்மையானவை. பிற்காலத்தில் நுஃமான் சோலைக்கிளி மஜித் பௌசர் ஓட்டமாவடி அறாபத் அஃராப் போன்றவர்கள் பங்களித்திருக்கிறார்கள். பங்களித்து வருகிறார்கள். சமகாலத்தில் அனார் அலறி பஹீமகான் வஸீம் அக்ரம் போன்றோர் எழுதி வருகிறார்கள். பெருவெளி போன்ற இதழ்கள் வருகின்றன. தமிழுக்கும் முஸ்லீம்களும் இடையிலிருக்கிற நெருக்கம் இன்னும் நிறைவே இருக்கிறது. (முழுவற்றையும் குறிப்பிட முடியவில்லை)

17) நிந்தவூர் ஷிப்லி :- இது நமது இரண்டாவது உரையாடல். முதல் உரையாடலுக்கும் இதற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் துளிர் விட்டிருக்கிறதா? இதைத் தொடர நீங்கள் விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- நீங்கள் பேசிய விடங்களுக்கும் நான் பேசிய விடயங்களுக்கம் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் வெள்வேறு சூழலில் வாழ்வதனால் அப்படி இருக்கின்றன. கேள்விகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கின்றன. தொடர்ந்து உரையாடலாம். அதன் மூலம் மிக இளையவர்களான நாம் நமது எழுத்தை செம்மைப்படுத்துகின்ற பக்குவத்தை அடையலாம்.

அத்தொடு நமது அந்த உரையாடலை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான தினகரன் தணிக்கைகளுக்கு உட்படுத்தி தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறது. அதில் போரில் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய நிலைகள் - அரசு காட்டும் போர் முனைப்பு - செலவிடும் பணம் போன்ற விடங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இணையதளங்களில் அது முழுமையாக வெளிவந்திருந்தது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறான விடயங்களிலிருந்து உரையாடல்களையும் கருத்துக்களையும் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

18) நிந்தவூர் ஷிப்லி:- இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- எழுத்து ஆபத்தானதாக இருக்கிறபொழுதும் எழுத்தை விட்டு நீங்க முடியவில்லை. அதுதான் நிம்மதியாக இருக்கிறது. போர் தின்று ஏப்பமிடுகிற எங்கள் மண்ணில் நிம்மதி மலர வேண்டும். எமது மக்களுக்கு நாடும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். நாங்கள் வாழவே விரும்புகிறோம். காலம் காலமாய் கிராமத்திற்குக் கிராமமும் நாட்டிற்கு நாடும் அகதியாக திரிந்துகொண்டிருக்கிற எங்கள் சனங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும். எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது.

நன்றி தீபச்செல்வன். மிகுந்த நெருக்கடியான சூழலிலும் நமது இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது. உங்கள் நூல் விரைவில் வெளிவரவும் எழுத்துத்துறையில் நீங்கள் இன்னுமின்னும் முன்னேறவும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உடனிருக்கும். மீண்டும் சந்திப்பில் இன்னும் அலசுவோம். நன்றி நண்பரே.

- தீபச்செல்வன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com