Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

உலகத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா?
முனைவர் க.ப. அறவாணன்


K.P. Aravanan சென்ற இதழ் தொடர்ச்சி...

இன்னொரு பெண் கடல் கடந்து சென்ற தன் கணவன் திரும்பி வரும்வரை தன் அழகிய முகத்தைக் குரங்கு முகமாக மாற்றிக் கொண்டு காத்திருந்தாள் என்று சிலப்பதிகாரம் சுட்டும். அது வருமாறு, (வஞ்சினமாலை அடி: 19-23)

வேற்றொருவன்
நீள்நோக்கம் கண்டு
நிறைமதி
வாள்முகத்தைத்
தானோர் குரக்கு முகம்
ஆகென்று போன
கொழுநன் வரவே
குரக்குமுகம் நீத்த
பழுமணி அல்குல்
பூம்பாவை.

மாதவியின் மகள் மணிமேகலையைத் தனிநாயகியாக வைத்துப் படைக்கப்பட்டுள்ள மணிமேகலைக் காப்பியத்துள் சீத்தலைச் சாத்தனார் கடல்கடந்து பொருள் ஈட்டச் சென்ற சாதுவன் என்பவனுடைய அவல வரலாற்றை விரித்துரைப்பார். அவ்வரலாறு வருமாறு:

ஆதிரையின் கணவன் சாதுவன். சூது, வட்டு முதலான தீய பழக்கங்களை உடையவன். மனைவியைப் பிரிந்து சென்றான். வேசியிடம் உறவு கொண்டான். பொருள்களை இழந்தான். வேசி கைவிட்டாள். காசில்லாதவன் என்று தூற்றி ஒதுக்கினாள். அவமானம் உற்றான். மானங்கொண்டு பொருள்தேடப் புறப்பட்டான். கப்பலில் வணிகர் குழுமம் ஒன்று அயல்நாடு புறப்பட்டது. அதில் இவனும் பயணப்பட்டான். கடற் பயணத்தில் புயல் வந்துற்றது. கப்பல் உடைந்து சிதறியது. சாதுவன், உடைந்த மரத்துண்டு ஒன்றைக் கைப்பற்றி, நாகர் வாழும் தீவு ஒன்றில் கரை ஏறினான். அங்கும் அவர்களின் ஐயத்திற்கு உள்ளானான். பிறகு நற்பெயர் எடுத்தான். அவ்வழியாகச் சந்திரதத்தன் என்னும் வணிகன் கப்பலில் வந்தான். அந்தக் கப்பல் வழியாகத் தயாகம் திரும்பினான். கணவன் இல்லையே என்று தீக்குளிக்க நினைத்து, காப்பாற்றப் பெற்ற மனைவி ஆதிரையுடன் மகிழ்வுடன் வாழ்ந்தான்.
(16. ஆதிரை பிச்சையிட்ட காதை அடிகள். 3-126)

சிலம்பு, மணிமேகலைக்குப் பிறகு தமிழர் கடல் கடந்து பொருள் ஈட்டச் சென்றதற்கான வரலாறு காரைக்கால் அம்மையாரின் வரலாற்றில் காணப்பெறுகிறது. அவ்வரலாறு வருமாறு:

காரைக்காலில் பரமதத்தன் என்பவனின் மனைவியாகப் புனிதவதி வாழ்ந்து வந்தார். கணவன் வணிகன். வணிகத்திற்காக வெளியே செல்பவன் மதிய உணவிற்காக இல்லம் திரும்புவான். ஒருமுறை தன் மதிய உணவிற்காக மாம்பழங்கள் இரண்டைப் புனிதவதியிடம் கொடுத்திருந்தான். மதிய உணவிற்குக் கணவன் வரும் முன் சிவனடியார் ஒருவர் அவர்கள் இல்லத்திற்கு வந்திருந்தார். சிவ பக்தையான புனிதவதி சிவனடியாரை இல்லத்தில் உண்டு செல்ல வேண்டினார். விருந்தோம்பும்போது கணவன் வாங்கிக் கொடுத்திருந்த மாம்பழங்களுள் ஒன்றைச் சிவனடியார்க்குப் பரிமாறினார்.

அடியார் உண்டு சென்ற பின் கணவர் உணவிற்காகத் திரும்பினார். கணவருக்கு உணவிடும்போது எஞ்சிய மாம்பழத்தைப் பரிமாறினார். அவன் இன்னொரு மாம்பழத்தையும் வேண்டுமென்று கேட்க, மறுப்புச் சொல்லத் தயங்கிய புனிதவதி சிவபெருமானை வேண்டிப் புதிய மாம்பழம் ஒன்றைப் பெற்றாள். அதனைக் கணவருக்குப் பரிமாறினாள். சுவை வேறுபடவே புதிய மாம்பழம் ஏது எனக் கணவன் வினவினான். நடந்த வரலாறு முழுவதையும் கணவனிடம் விவரித்தாள். மனைவியின் தெய்வ ஆற்றல் அவனுக்கு அச்சத்தை ஊட்டியது. மனைவியிடம் சொல்லாமலேயே அவளைவிட்டுப் பிரிந்து கடல் கடந்து பொருள் ஈட்டச் சென்றான். ஈட்டிய பொருளுடன் பூம்புகாருக்குத் திரும்பாமல் மதுரை நகரம் சென்றடைந்து அங்கே இன்னொரு பெண்ணை மணந்து வாழ்ந்தான் என்பது சேக்கிழாரின் பெரிய புராணம் தெரிவிக்கும் கதை. (காரைக்கால் அம்மையார் புராணம் 30. பெரியபுரணம்; செய்யுள் எண் 1720-1782)

Tiruvalluvar இப்படி முன்னைக் காலங்களிலேயே தமிழர் பொருள் ஈட்டுவதற்காகக் கடல் தாண்டி வேறு வேறு நாடுகளுக்குச் செல்லுவதும், பொருள் ஈட்டித் திரும்புவதும் வழக்கங்களாக இருந்தன. தமிழர் பொருள் ஈட்டுவதற்காகக் கடல் தாண்டிச் செல்லும்போது தம்முடன் மனைவியை அழைத்துச் செல்லல் ஆகாது என்று தடைவிதிக்கப்பட்டது.

முந்நீர்வழக்கம் மகடூவொடு இல்லை - (தொல்காப்பிய நூற்பா. அகத்திணை. 37)

குலமட மாதரொடு கலமிசைச் சேறல் (செல்லுதல்) என்பது ஆகாமை அறிக

என்பர் நம்பியகப் பொருள் 85, இலக்கண விளக்க 435 உரைகாரர். நெடுங்காலம்வரை தமிழரிடையே அயல்நாடு செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்லல் ஆகாது என்ற கருத்து இருந்துள்ளது. இக்கருத்து ஐரோப்பியர் இந்திய - இலங்கை நாடுகளைக் கைப்பற்றிக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஆண்ட காலங்களில் மாறியது; மாற்றப்பட்டது. ஐரோப்பியர், இந்திய-இலங்கை உள்ளிட்ட ஆசியக் கண்ட நாடுகளைக் கைப்பற்றி ஆண்டது போலவே ஆப்பிரிக்க – ஆஸ்திரேலிய, அமெரிக்கக் கண்ட நாடுகளையும் கைப்பற்றி நெடுங்காலம் ஆண்டனர். தம் ஆட்சிக் காலங்களில் தாம் குடி அமர்ந்த நாடுகளில் இரப்பர், தேநீர், காப்பி, கரும்பு முதலான பணப்பயிர்களைப் பயிரிட்டனர்.

ஆப்ரிக்கக் கண்டம் போன்ற நாடுகளில் தங்க, வைரச் சுரங்கங்களை வெட்டினர். தங்கள் பண முதலீடு செய்யப்பெற்ற இடங்களில் கடின உடல் உழைப்புத் தொடர்பான கூலி வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் ஏழை எளிய மக்களை ஏமாற்றிக் கொண்டு சென்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கைக் கண்டிப் பகுதித் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசிய இரப்பர் மரக் காடுகளிலும் மொரீசியஸ் கரும்புத் தோட்டங்களிலும், ஆப்ரிக்க சுரங்கங்களிலும் இரவும் பகலுமாக வேலை செய்ய வைக்கப்பட்டனர். கொண்டு செல்லப்பட்டோரில் சில ஆயிரம் பேர் கப்பல் பயணத்திலேயே இறந்துபோய்ப் பிணமாகத் தூக்கியெறியப்பட்டனர். சென்று உழைத்த இடங்களிலும் சரியான குடியிருப்பு வசதி, உணவு ஆகியன இல்லாமல் கொசு முதலிய பூச்சிகளின் கடியாலும் இறந்து போயினர்.

எஞ்சியோர் அந்தந்தத் தாய்நாடு விடுதலை அடைந்த போது தாமும் விடுதலை அடைந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தது, இலங்கை 1948 இலும், மலேசியா 1954 இலும், சிங்கப்பூர் - 1964 இலும், மொரீசியஸ் - 1968 இலும், தென்னாப்பிரிக்கா - 1961 இலும் விடுதலை ஆயின. ஐரோப்பியர் ஆட்சி செய்த காலங்களில் ஒரு காலகட்டத்தில் குடியேறிய தமிழர்கள் தம்முடன் தம் குழந்தைகளையோ, மனைவியையோ உடன் அழைத்துச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. (பார்க்க: அறவாணன் எழுதிய தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?) அவ்வாறு வாய்ப்பற்றோர் குடியேறிய இடங்களிலேயே நிலையாகத் தங்க நேர்ந்தபோது அங்கு வாழ்ந்த பெண்களைத் திருமணம் செய்ய நேர்ந்தது. இங்ஙனமாகத் தமிழர்தம் புலப்பெயர்ச்சி வேறு வேறு நாடுகளில் கி.பி. 17, 18, 19 ஆம் நூற்றாண்டில் அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டு 1983 இல் இலங்கையில் இனக்கலவரம் மூண்டது, இதன் விளைவாக சிங்களர் தமிழர் கடைகளையும், வீடுகளையும் கொளுத்தினர். தமிழ்ப் பெண்களுக்கு ஊறு விளைவித்தனர், சிங்கள இராணுவம் தமிழர்களையே கொன்று விரட்டியது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து பிற பகுதிகளுக்குமாக ஈழத்தமிழ் அகதிகள், ஐரோப்பிய நாடுகள் கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா எனப் பல்வேறு இடங்களிலும் தஞ்சம் புகுந்தனர். ஆகத் தமிழர்களின் சமுதாய வரலாற்றைப் பறவைப் பார்வையில் பார்வையிடும்போது பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. இந்தியப் பூர்வீகத் தமிழர்.
2. இலங்கை பூர்வீகத் தமிழர்.
3. இலங்கை கண்டித் தமிழர்.
4. அயல்நாடுகளில் பிழைப்பிற்காகக் குடியேறிய தமிழர்.
5. அயல்நாடுகளுக்கு அகதி களாகச் சென்ற தமிழர்.

இவர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார எதிர்காலத்தைக் கடந்தகால படிப்பினைகளைக் கொண்டும், நிகழ்காலச் சூழ்நிலைகளைக் கொண்டும் கணித்தறிவோம்.

இரண்டாம் உலகப் பெரும்போர் 1945 இல் முடிவுற்றது. குறிப்பாக அமெரிக்காவால் அப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராக அமைந்திருந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பானியக் கூட்டணியில் ஜப்பான் நாட்டு இரோஷிமா, நாகசாகி எனும் இரு பெரும் நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஜப்பானிய நிலமும், மக்கள் பிறப்பும் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பாழ்பட்டுப் போயின. முடிவில் ஜப்பான் சரணடைந்தது.
ஜெர்மனியும், இத்தாலியும் சரணடைந்தன. இச்சூழலில் அமெரிக்கா உலகிலேயே மேலாதிக்க நாடாயிற்று. எனினும் அமெரிக்காவிற்கு நிகராக மாற்றுக் குரல் கொடுத்து வந்த சோவியத் யூனியனும் அதன் அதிபர் ஸ்டாலினும் அமெரிக்காவிற்கு நிகராக நின்று வந்தனர்.

அவ்வப்போது உலகில் தோன்றும் சிக்கல்களை எதிரெதிர் முகத்தில் குரல் கொடுக்கும் நாடுகளாக இவ்விரு நாடுகளும் 1990 வரை இருந்து வந்தன. சோவியத் யூனியன் 1990 இல் கோர்பசேவ் காலத்தில் சரிந்தது. முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளை ஒரு குடையின் கீழ் திரட்டி அமெரிக்காவிற்கு எதிராகச் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு நாடாகக் காத்துவந்த நிலைமை முடிந்து போனது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா அசுர பலம் பெற்றது.

உலகின் புதிய கண்ட நாடுகளுள் ஒன்று என்பதாலும், மிகப்பெரிய நாடு (97,72,614 ச.கி.மீ.) என்பதாலும், உலகில் வேறு நாடுகளில் உள்ள பல மொழிச் சிக்கல், பல பண்பாட்டுச் சிக்கல் இல்லாத நாடு என்பதாலும், உலக நாடுகளையே அதட்டும் நாட்டாண்மைப் பொறுப்பைத் தாமாகவே எடுத்துக் கொண்டுவிட்டது. உலகின் எந்த மூலையிலும் தோன்றும் மொழி, இன, மத நாட்டு எல்லைச் சிக்கல்களில் தானே மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் அளவிற்கும், முடிவில் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கும், தேவைப்பட்டால் தன் இராணுவத்தையே இறக்கிவிடும் அளவிற்கும் நாட்டாண்மை செய்யத் தொடங்கிவிட்டது. சான்று: முன்பு வியட்நாம், பின்பு குவைத்; அண்மையில், ஆப்கானிஸ்தான், ஈராக்.

இம்மட்டுமின்றி, அமெரிக்கா நினைத்தால் ஒரு நாட்டின் பகுதியாக உள்ள பல பிரதேசத்தைத் தனி நாடாகவே பிரித்துவிட முடியும். இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாக இருந்த கிழக்குத் தைமூரைப் பிரித்துத் தனி நாடாக்கியதில் (2002 மே 19) அமெரிக்காவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - பாலஸ்தீனிய சிக்கல், இலங்கையில் சிங்கள - தமிழர் சிக்கல், இந்திய - பாகிஸ்தானியச் சிக்கல் தீராமலிருப்பதற்கு அமெரிக்கத் தலையீடும் வல்லாண்மையுமே காரணம். ஆக எதிர்காலத்தில் உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் தமிழரின் நிலைமையும், இலங்கைத் தமிழரின் நிலைமையும் முடிவு செய்யப்படுவதில் அமெரிக்காவின் பங்கும், தலையீடும் கணிசமாக இருக்கும் என்பது உறுதி.

1990 வாக்கில் உலக மயமாக்கல், தாராளமய மாக்கல் எனும் பெயரில் உலகின் மிகப்பெரியப் பணக்கார நாடுகளான 1. அமெரிக்கா, 2. கனடா, 3. பிரான்ஸ், 4. பிரிட்டன், 5. நெதர்லாந்து, 6. இரஷ்யா, 7. ஜப்பான், 8. ஆஸ்திரேலியா எனும் எட்டு நாடுகளும் பொருள்களை உற்பத்தியாக்கி, உள்நாட்டுப் பயன் போக மிதமிஞ்சிய நுகர்வுப் பொருள்களை ஏனைய நாடுகளின் குறிப்பாக ஏழை நாடுகளின் தலையில் கட்டுவதற்காகச் செய்யப்பட்ட மிகப் பெரிய அரசியல் தந்திரமாகும். தமிழர் புலப்பெயர்ந்த நாடுகளும் அவர் பிறந்த பூர்வீக நாடுகளும், எட்டுப் பணக்கார நாடுகள் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டு விட்டன. இந்நாடுகளில் உற்பத்தியாகும் ஆடம்பரப் பொருள்களை நுகர்வதில் இவ்வெளி நாட்டு மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டு விட்டனர். ஒரு சான்று: கொக்கோ - கோலா.

இதனுடன் கூட உலகமயமாதல் பெயரில், பழைய காலனி நாடுகளான இப்பணக்கார நாடுகள் தங்கள் மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்ச் முதலானவற்றை அத்தியாவசியமான மொழிகளாகத் திணிக்கின்றன; நம்பவைக்கின்றன. இம்மூடநம்பிக்கை அந்தந்த நாட்டு மக்கள் தம் தாய்மொழிமேல் கொண்டிருக்க வேண்டிய நியாயமான பற்றுதலைச் சீரழிக்கின்றன. சொந்த மொழிகளையும் வளர விடாமல் அம்மொழிகளைப் பேசும் மக்களையும் வளர விடாமல் தடுத்து விடுகின்றன. இத்தகைய நிலை தமிழ் பிறந்த தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களிலும், குடி பெயர்ந்த இடங்களிலும் வேரூன்றி விழுது பரப்புகின்றது. இதன் விளைவாகப் புதிய தலைமுறையில் வரும் தமிழ்க் குடும்ப இளைஞர்கள், தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர்; தமிழ் கற்பதையும், தமிழில் கற்பதையும் வெறுக்கின்றனர். ஆக உலகமயமாதல் என்பது அந்தந்தத் தேசிய இனங்களின் பண்பாட்டைத் தடுக்கின்றன; கெடுக்கின்றன; அழிக்கின்றன. இவற்றுடன்கூட காலம் காலமாகத் தம் தலைமுறையினர் காப்பாற்றிவந்த பண்பாட்டைத் தாழ்வானது என்று கருத வைக்கின்றன. இறக்குமதியாகி ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்ட பண்பாடே உயர்ந்தது என்றும் கருத வைக்கின்றன. தாய்மண்ணிலும் புலம் பெயர்ந்த மண்ணிலும் இவையே நிகழுகின்றன.

இவற்றுடன் மட்டுமல்லாமல் தமக்குரிய தாய்மொழியையும் கற்கவிடாமல் தடுக்கின்றன. எனவே தமிழ்க் கல்வி புலம்பெயர்ந்த மண்ணில் கேள்விக்குறியாகி வருகிறது. இதில் சிங்கப்பூரும், மலேசியாவும் விதி விலக்கு. அரசியல், பொருளியல், சமூகவியல் தளங்களிலும், புலம்பெயர்ந்த தமிழர்க்கு முழு உரிமைகள், சமஉரிமைகள் எல்லா இடங்களிலும் கிடைத்துவிட்டன என்று கூறமுடியாது. இலங்கையில் இம்மூன்றுமே மறுக்கப்பட்டன, மறுக்கப்படுகின்றன என்பதே உண்மை. ஐரோப்பியக் கண்ட நாடுகளிலும், கனடாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்க்கு மெல்ல மெல்ல அரசியல் உரிமைகள் ஓரளவு கிடைத்து வருகின்றன. தாயகத் தமிழ் மக்களின் நிலையைவிடப் புலம் பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு இருக்கிறது. இம் மேம்பாட்டிற்குக் காரணம் தாய்மண்ணில் உழைப்புக்காக அளிக்கப்பெறும் கூலி, கவுரவத்தைவிடப் புலம் பெயர்ந்த நாடுகளில் கூடுதலாக இருப்பது ஒரு காரணம்.

இந்திய - இலங்கை நாணய மதிப்பு புலம் பெயர்ந்த நாடுகளின் நாணய மதிப்பைவிட மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். எ.கா: ஓர் அமெரிக்க டாலர் = 46 இந்திய ரூபாய். காலப்போக்கில் புலம் பெயர்ந்த தமிழர்கள், குடியேறிய நாடுகளிலுள்ள மண்ணின் மக்களுக்கு இணையான பொருளாதாரத்தை அடைய முடியுமா என்பதுப் போகப் போகத்தான் தெரியும். தமிழர்கள் ஓரளவு அந்நிலையை எட்டி வருதலை மலேசிய - சிங்கப்பூரில் காண முடிகிறது. சிங்கப்பூரில் அதிபராக ஒரு தமிழரே இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. சமூகத் தளத்தில் தமிழர்கள் (திரு. நாதன் செய்தி: 17-8-2005) `புலம்பெயர்ந்து வந்தவர்கள்தானே’, `அகதிகளாக வந்தவர்கள் தானே’ என்ற கருத்து முற்றும் எல்லா நாடுகளிலும் நீர்த்துப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது. எதிர் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். மற்றவர்களுடன் சமமாகக் கருதப்படலாம்.

அரசியல், பொருளியல், சமூகவியல் என்ற மூன்று தளங்களிலும் தமிழர்கள் சம வாய்ப்பை அடைய அவர்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியச் சில கடமைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தாம் அனைவரும் தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடைய மக்கள் என்பதை நினைத்து ஒன்று பட்டிருத்தல் வேண்டும். தமக்குள் சமூகக் கட்டொருமைப்பாடு குன்றாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறே இருப்பரேயானால் அந்தந்த மண்ணிலும் தமிழ் மக்கள் ஒரு கவுரவமான இனத்தினர் என்று கவனிக்கப்படுவர். மாறாகத் தம் தாய் மண்ணைச் சேர்ந்த கொடிய சாதிப் பிரிவுகளால் குடியேறிய நாடுகளிலும் பிரிந்து கிடப்பரேயானால் இழப்பது கோடியாய் இருக்கும். இவ்வுண்மையை உணர்ந்து நாம் வருங்கால உலகில் வாழ்வோமானால் நம் வருங்காலம் கேள்விக் குறியாக இருக்காது; இருக்கவே இருக்காது!

(மலேசியா ஈப்போவில் நிகழ்ந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழக விழாவில் ஆற்றிய உரை)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com