Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo


நீட்சேயின் பரந்த போக்கு

குறிப்பு: சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஒருவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற கட்டுரை இது, அவரை நீங்களே கண்டுபிடியுங்கள், தமிழில் மொழிபெயர்த்ததும் நாங்களல்ல, எண்பது எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நீட்சே விவாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கவனங்கொள்ளத் தக்க செய்தி, ஆயினும் என்ன. ஏறக்குறைய எல்லா அறிஞர்களும் சிந்தனையாளர்களும் "வைதிக. சனாதன.சமூக மனு நெறிகளை” இயற்கை விதிகளைப்போல் அப்படியே ஏற்றுக்கொள்கிற சிக்குப் பிடித்த செக்கு மாடுகளாய்த்தான் வாழ்ந்திருக்கிறார்கள், இன்று நாம் அவற்றைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிற - கட்டுடைத்திருக்கிற- மாற்றுகளைத் தேடியிருக்கிற யுகத்தைப் படைத்திருக்கிறோம் என்பது மனிதப்பண்பை மீட்டெடுத்துக்கொள்கிற வளர்ச்சியாகிறது,
                                                                                                                                                                                   -இதழாசிரியர்

“தத்துவ அறிஞர்” என்னும் சொல்லின் திட்டமான கருத்துப்படி ஆராயப் புகுந்தால் நீட்சே புலவர், சமூகவியலாளர் என்ற வகையில் அடங்குவாரேயன்றித் தத்துவ அறிஞர் என்ற வகையில் அடங்க மாட்டார். மேலும், அவர் ஓர் அனுபூதிமான். ஐரோப்பிய அனுபூதிமான்கள் வரிசையிலே அவர் ஒருவராய் இருக்கின்றார். நீட்சேயின் கொள்கைகள் ஆழமற்றவையானாலும், பிளேக், விட்மன் முதலிய ஞானிகளின் குரலையே அவரிடத்தும் கேட்கின்றோம். இம்மூவரும் இக்கால ஐரோப்பாவின் சமயக் கருத்தைக் கூறும் ஒருமை நெறியாளர். இவர்களுடைய மதம் கருத்துவாதம் சார்ந்த தனித்துவம் எனலாம். நீட்சேயின் தற்படைப்புத் திறம் விளக்கமில்லாத செயற்கையான புதுமையிலே தங்கியிருக்கிறதெனக் கூற முடியாது. ஆனால், மிகப்பழையதொரு கொள்கையை அவர் கவிதைப் பண்போடு திருப்பிக் கூறுகிறார். அவ்வளவுதான் என்று வைத்துக்கொள்வோமானால், அவர் என்றுமே மேற்கொள்ளாத சில கோட்பாடுகளை நாம் மறுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் உண்டாகாது.

மிகைபடக் கூறும் தன்மையும், காரசாரமான போக்கும் அவருடைய நூலிலே ஓரளவு காணப்படுகிறதென்பது உண்மையே. ஆனால், தகுதியற்ற மதிப்பீடுகள், போலியாசாரக் கொள்கையாளர் காட்டும் ஒழுக்கம், பாசாங்கு என்பவற்றுக்கெதிராக ஆர்வத்தோடு கூறும் கண்டனமாகவே அöது அமைந்திருக்கிறது. இந்தக் கண்டனத்தை மக்கள் மிக்க வெறுப்போடு ஏற்றனர் என்பதைக் காணும்போது, நீட்சே ஒருசமயம் ஒரு தீர்க்கதரிசியாய் இருக்கலாமென்றும் எண்ண வேண்டியிருக்கிறது. அவர், கட்டடம் எழுப்புவோர் கழித்துவிட்ட கல்லைப் போன்றவர்; "மக்கள் உன்னை ஏளனஞ் செய்தால் உனக்கு மங்களம் உண்டாக” என்னும் முதுமொழிக்கு இலக்கணமானவர். நீட்சேயின் “அதிமனிதன்” என்னும் அழகிய கோட்பாடு விசேடப் பொருளுடையது. இது சீனருடைய அதீத மனிதன் என்னும் கோட்பாட்டையும், இந்தியத் தத்துவ தரிசனங்களிலே கூறப்படும் மகாபுருடன், போதிசத்துவர், சீவன்முத்தர் என்னும் கோட்பாடுகளையும் ஒத்தது. சீவராசிகளெல்லாம் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன; எல்லாம் ஒன்றே. புருடனும் பிரகிருதியும், ஆன்மாவும் சடமும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்திருக்கின்றன என்ற எண்ணம் இடையறாது அனுபூதிமான்களின் சிந்தனையில் ஊறிக்கொண்டிருக்கும். இதுவே இந்த அனுபூதிமானிடம் காணப்படும் கொள்கைகளுள் முக்கியமானது. இலௌகிகம், தெய்விகம் என இரண்டாய் விடயங்களைப் பிரிக்கும் தூய்மைவாதிகளுக்கு இது மாறானது.

நன்மை தீமை என்பவற்றுக்குச் சார்பற்ற சனாதனமான பயன்மதிப்புக் கொடுத்து, நரக சுவர்க்கங்களைப்பற்றியும், பாவ புண்ணியங்களுக்குப் பிரதியுபகாரமாகப் பரிசும் தண்டனையும் வழங்கும் முறையைப்பற்றியும் பேசும் சமயங்களைப்போலல்லாது எந்த மதக்கோட்பாடுகளிடையிலும் விரக்தியின்றித் தாராளமாகப் பழகும் நிலையும் அவரிடமுண்டு. "எல்லாப் பொருள்களும் இணைந்து பிணைந்து ஒன்றையொன்று மோகித்துக்கொண்டு கிடக்கின்றனஃ என்று அவர் கூறுகின்றார். "என் சகோதரர்களே, நான் உங்களை வேண்டிக் கேட்கிறேன். உலகத்தோடு ஒன்றியிருங்கள். பரலோகவிடயங்களைப்பற்றிப் பேசுவோரின் பேச்சைக் கேளாதீர்ஃ, "எனக்கு- எனக்குப் புறம்பாக ஒன்று எப்படி இருக்க முடியும்? அப்படியொன்றில்லைஃ, "ஒவ்வொரு கணமும் வாழ்வு தொடங்குகின்றது. ஒவ்வோர் "இவ்விடத்திலும்ஃ "அவ்விடம்ஃ என்று பந்து சுற்றிக்கொண்டு வருகிறது. நடு என்பது எங்குந்தானுண்டுஃ, "ஒவ்வொரு கணத்திலும் ஆக்க நிலை நியாமானதாகத் தோன்ற வேண்டும்......... எதிர்கால நிகழ்ச்சி நிகழ்கால நிகழ்ச்சிகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் சமாதானம் கூறக்கூடியதாய் இருக்கக் கூடாது.ஃ இந்த வாக்கியங்கள் எல்லாம் "தத்துவமசிஃ என்னும் வேதாந்த மகா வாக்கியம் போன்றவை. இவை ஒருமைக் கொள்கையிலிருந்து அனுமானிக்கப்பட்டவை; அனுபூதிக் காட்சியின் பயனாக உண்டான கூற்றுகள்.

அதீத மனிதன் நன்மைதீமைகளுக்கு அதீதமாயுள்ளவன். அவன் மக்களுள் மாணிக்கம்; மக்களுக்குத் தலைவனும் இரட்சகனும் அவனே. இக்கொள்கை உலக சரித்திரத்திலே அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டு வருகிறது. இந்த இலட்சியத்தை அடைந்தவனுக்கு இந்திய நூல்களிலே பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அருகதன்(சிறந்தோன்), புத்தன்(ஞானம் பெற்றோன்), ஜீனன்(வென்றவன்), தீர்த்தங்கரன்(கரையைக் கண்டவன்), போதிசத்துவன்(பூரண அறிவுள்ளவன்), சீவன் முத்தன்(சீவனோடிருக்கும்போதே விடுதலை பெற்றவன்) என்பன சில. இவனுடைய செய்கைகள் நன்மை தீமை என்ற பாகுபாட்டைச் சேராதவை. அöது அவனுடைய சுதந்திர நிலையிலிருந்து உண்டானவை.

இந்தச் சீவன்முத்தரைப்பற்றி நீட்சே என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம். "இனம், மேலினம் என்ற வகையில் நமது வளர்ச்சி உயர்கின்றது. ஆனால், "எல்லாம் எனக்காகஃ என்ற எண்ணம் மிகக் கீழ்த்தரமானது. அது பயங்கரமானதொன்று.ஃ இவ்வாறு கூறும் ஒரு கொள்கை தன்னலம் கருதும் கொள்கையா? அப்படியானால், உபநிடதக் கோட்பாடுகளையும் தன்னலங் கொண்டவையென்றே கூற வேண்டும். அங்கே இந்த ஆன்மாவின் நிமித்தம் நாம் எல்லாப் பொருள்களையும் எமக்கு இதமானவை என்று கொள்ளுகின்றோம். ஒருமைவாதி கட்குத் தன்னலம் பிறர் நலம் என்ற பேதங்கிடையாது. ஏனெனில், அங்கே எல்லாருடைய நலமும் ஒன்றே. சுவானுபூதியே மேலான சேவை. நாம் செய்யக்கூடிய மேலான தொண்டு ஒரேயொரு சேவை. அது நாம் நமது சுயநிலையை அடைதல். அது நீ ஆகிறாய். இது கருத்துவாதச் சார்பான தனித்துவவாதம். அöதாவது தனிநிலைக் கொள்கை, உள்ளத்தே சாந்தி பெறுதல் என்ற இந்தக் கோட்பாடு எல்லா நிலைகளிலும் பொருத்தமானது. ஏனெனில், நாம் செய்து கொண்டவை நம்மை இரட்சிப்பதில்லை. நாம் என்னவாயிருக் கிறோமோ அதுவே இரட்சிக்கும். எல்லாப் பொருள்களும் உன்னை நோக்கிப் பாயவும், உன்னிலே கலக்கவும் முயல்; பின்னர் அவை உன்னிலிருந்து வெளியே உனது அன்பின் கொடையாகப் பாயட்டும். இத்தகையதோர் அன்புக்கொடை எல்லாப் பயன் மதிப்புகளையும் தன்னுள்ளடக்கியதாயிருக்கும். இத்தகைய தன்னலம் சுகத்துக்கேதுவானது; பரிசுத்தமானது என நினைக்கிறேன்.

ஆனால், வேறு ஒரு தன்னலமுமுண்டு. இது மிக்க வறுமையும் தணியாத பசியுமுடையது. இöது எப்பொழுதும் களவெடுக் கவே பார்த்துக்கொண்டிருக்கும். ஒளியுள்ள பொருள் எல்லாவற்றையும் கள்வனுடைய கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும்; பசியுடையரிடத்துக் காணும் வேட்கையோடு நிறையப் பொருள் வைத்திருப்பவரை அளவிட்டுப் பார்க்கின்றது; எப்போதும் வள்ளல்களின் வீட்டைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டேயிருக்கும். "இதுவே பெண்ணணங் கைத் தெய்வமாக உருவகப்படுத்தியது. இது பயமும் குரோதமுங் கொண்டு வாழ்வதிலும் சாவதே மேல்; மற்றவர்களின் கோபத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாவதிலும் சாவதே பன்மடங்கு மேல்ஃ என்று கூறிக்கொள்ளும்.

ஒருவன் தனது துயர்களையும் மற்றவர் துன்பங்களையும் நினைந்து நினைந்து இரங்குவதை நீட்சே வெறுக்கிறார். வாழ்வு கட்டமானதே; உயர்மனிதன் விடயத்தில் அவன் உயர்ந்த வாழ்வைத் தானாகவே தெரிந்துகொண்டபடியால் மிக கட்டமுள்ளதே. "என்னுடைய துயரும் நண்பர் துயரும்.... இவற்றைப்பற்றி ஏன் கருத்துக் கொள்ள வேண்டும்?” "வாழ்வு சகிக்க முடியாத கட்டம் நிறைந்தது” என்று நீர் எனக்குச் சொல்லுகிறீர். அப்போது நீர் ஏன் காலையில் மமதை கொள்கிறீர்? மாலையில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இருக்கிறீர்?” மேலைநாட்டுச் சனநாயகங்கள், கூடிய தொகையினர்க்குக் கூடிய மகிழ்ச்சியைக் கொடுப்பதே நமது லட்சியமெனக் கொண்டிருக்கும் நோக்கத்துக்கு இந்தக் கொள்கை மாறுபட்டதாகும்.

ஐரோப்பாவிலே, ஐரோப்பிய நீட்சிய யுத்தத்தையுண்டாக்கியவர் களில் நீட்சேயும் ஒருவர் எனக் கூறி, நீட்சே போன்ற கவிஞரும், தத்துவ ஞானியும், அனுபூதிமானுமான ஒருவரை கிராம்ப்ஸ், ட்ரீக்ஸ் ஆகிய கிளர்ச்சிக்காரரோடு சேர்த்துக் குறிப்பிடு வோரைப் பற்றிப் பேசுவதனால் பயனில்லை. செர்மனி, இங்கிலாந்து ஆகிய தேசங்களிலேயுள்ள மட்டமானவர்களை நீட்சே எவ்வாறு இகழ்ச்சியுடன் நோக்கினார் என்பதை அவருடைய எழுத்துகளிலிருந்து எடுத்துக்காட்டலாம். ஐரோப்பாவிலே விவேகமும் சீர்மையுமுள்ள பண்பாடு பிரான்சின் பண்பாடென்றும், பிரான்சின் உயர்ந்த உணர்ச்சித் திறனை செர்மனியின் இரசாபாசத்தோடு ஒப்பிட்டுக் காட்டினார். நீட்சே ஐரோப்பாவின் அடிப்டை ஒற்றுமையை நன்கு உணர்ந்திருந்தார் என்பதை மேற்கோள்களால் காட்டுவது எளிதாயிருக்கும். இன்று துயர் சூழ்ந்த நிலையிலே அந்த ஒற்றுமை வெளியாகியுள்ளது. ஆனால், இஃது ஒன்று சேர்ந்த அசையும் ஒரு சலனமாய் அன்றும் இன்றும் காணப் படுகிறது. அந்த ஒற்றுமையின் முன்பு இன்றை குரோதங்கள் ஒரு சிறு சம்பவம் போலவே தோற்றமளிக்கின்றன. நீட்சே தேசாபிமானத்தை உயர்வுக்கு ஏதுவான ஒரு பண்பாக என்றுமே கருதியிருக்க மாட்டார்.

தேசாபிமானம் என்ற பைத்தியத்தன்மை ஐரோப்பிய நாடுகளிடையே மனச்சோர்வுடன் கூடியதொரு பிரிவை உண்டாக்கிவிட்டது. இந்தப் பைத்தியத்தன்மையைப் பயன்படுத்திக் குறுகிய நோக்கமும், அவசர புத்தியுமுள்ள அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்றுவிட்டார்கள்; அவர்கள் பின்பற்றும் பிரிவுக்கொள்கை எவ்வளவுதூரம் கோணங்கிக் கூத்தென்பதை அவர்கள் உணர்வதில்லை. இக்காரணங்களாலும், இங்கே கூறமுடியாத வேறு பல காரணங்களாலும், ஐரோப்பா ஒன்றுபட விரும்புகிற தென்பதற்குரிய காணத் தவற முடியாத அறிகுறிகள் இப்போது தட்டிக் கழிக்கப்படுகின்றன. அல்லது தான்தோன்றித் தனமாகவும், தவறாகவும் தப்பருத்தம் செய்யப்டுகின்றன. இந்த நூற்றாண்டிலே வாழும் அறிவாளிகளும், தாராள சிந்தை யுடையவர்களும் அவர்களுடைய ஆன்மாவின் நூதனமான தொழிற்பாட்டுச் சத்தியும் இந்த ஒற்றுமைக்கே முயன்று கொண்டிருக்கின்றது. இப்புதிய ஒற்றுமைக்கு வழி காண்பதில் ஈடுபட்டிருக்கிறது. இதன் பயனாக எதிர்கால ஐரோப்பாவின் ஆதரிச புஐடனை எதிர்நோக்கியிருக்கிறது. போலித்தன்மை களிலோ, பலவீனமான தருணங்களிலோ, வயோதிகக் காலத்திலோதான், ஒருசமயம் அவர்கள் தாய்நாட்டின் சேய்களானார்கள். ஆனால் தேசாபிமானிகளாக மாறியதும் அவர்கள் தங்களுடைய சுயஇயல்பை மாற்றிக்கொண்டார்கள். இந்த ஐரோப்பிய ஒற்றுமை நிசமானதொரு காரியமென்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்று ஐரோப்பா மாத்திரம் அன்று, உலகம் முழுவதுமே- பெரியோரின் அருட்சத்தியால் ஒன்றுசேர விரும்பிய இந்த உலகம் முழுவதுமே - உலக சரித்திரத்திலே முதன்முதலாகன அதன் அடிமனத்திலிருந்து வந்த இந்த இலட்சியத்தை அடையும் தருவாயிலிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலக ஒற்றுமை என்ற கருத்து மிக அருமையான கருத்துதான். ஆனால் அது செயற்படுமா என்று எண்ணினர். இன்று இந்தநிலை உண்டாகியிருக்கின்றது.

அதிகார வேட்கைக்கும் கொடுங்கோன்மைக்கும் எவ்வகைத் தொடர்புங் கிடையாது. அஃது உயர்குடியினரின் கொடுங் கோன்மைக்கும் மாறானது. இன்னம் துன்பம் என்ற இரட்டைகளின் நோக்கங்களில் நமது வாழ்வு சிக்கக்கூடாது. வாழ்வின் இலட்சியம் சீவன்முத்தர் நிலையடைவதே. அந்தநிலை சுதந்தரமும் இயல்பாகக் கருமங்களைச் செய்யும் பண்பு முடையது. அது நன்மைதீமைக்கு அப்பாற்பட்ட நிலை. இந்நிலை பகவத்கீதையில் துக்கிக்கத்தகாதவர் விடயத்திலே துக்ங்கொள்ளுகிறாய் (அசோச்சியானன்வசோச்ஸ்த்வம்) எனக் காட்டப்படுகிறது.போலி இரக்கங் காட்டாது தலைமகன் போருக்குச் சித்தமுடையவனாக வேண்டுமென்றும், பயன் கருதாமல் கடமையைச் செய்ய வேண்டுமென்றும் அது கூறுகிறது. "வெற்றிதோல்வி என்ற இரண்டின் அடிப்படை மனோபாவம் ஒன்றே” என்று கூறுகிறார் விட்மன். "எந்த மனோபாவத்துடன் யுத்தத்தில் வெற்றி ஈட்டப்படுகிறதோ அதே மனோபாவத்துடன் தோல்வியும் கிட்டுகிறது. தலைவன் காயமடைவானானால், தனது தோழர்களை முன்செல்லுமாறு கூறுவானேயொழியத் தனக்கு நிகழ்ந்த ஆபத்தைக் குறித்து அனுதாபங் காட்டுமாறு சைனியத்தைத் தாமதிக்கச் செய்ய மாட்டான்; தோழர்கள் தன்னைப் பின்பற்ற மாட்டார்களென நினைத்து அவர்களை அவமானப்படுத்த மாட்டான். "இரக்கத்தைக் காட்டிலும் உனது அன்பு பலமுள்ளதாய் இருக்கட்டும். அந்த அன்பு தன்னலச்சார்பான அன்பன்று; அயலானை நேசித்தலன்று; தேசாபிமானமன்று; உனது அயலானிடத்தில் அன்பு காட்டுவதிலும் சிறப்புடையது எதிர்காலத்தவரிடம் காட்டக்கூடிய அன்பு; மக்களிடத்துக் காட்டக்கூடிய அன்பிலும் மேலானது, பொருள்களிடத்தும் கற்பனைப் பொருள்களிடத்தும் காட்டக்கூடிய அன்பு. "நான் என்னை எனக்கு இனியவரிடத்தும் எனக்குச் சமமான அயலாரிடத்தும் அர்ப்பணம் செய்கிறேன். இதுவே கலைப்படைப்பாளர்கள் எல்லாரும் பேசக்கூடிய மொழி.” "ஓ என் சொற்களை உணரக்கூடியவரே நீர் சங்கற்பம் செய்யக் கூடியதை நிறைவேற்றுவீராக. ஆனால், முதலில் சங்கற்பம் செய்யக்கூடிய சக்தியை உடையவராவீராக!”

தன்னை அடக்கி ஆளமாட்டாதவன், மற்றவர்களுக்கு அடங்கி நடப்பானாகõ இந்தக் கோட்பாடு, "நாம் நினைத்தபடி செய்தல், நமது சித்தப்படி நடத்தல்” என்ற கோட்பாட்டுக்கு வெகு தூரத்திலுள்ளது. "எல்லாம் எனக்கே என்று சொல்லும் கீழான மனோபாவம் நமக்குப் பயங்கரத்தை உண்டாக்குவதாகும்” என்கிறார் நீட்சே.

நீட்சேயின் போதனை தூய நிட்காமிய கருமம்: "நான் சுகத்தைத் தேடுகிறேனோ? நான் எனது கருமத்தைச் செய்வதிலேயே ஊக்கமுடையேன். இன்பதுன்பம் என்ற வகையில் உலகத்துப் பயன்களை அளவிட்டுக்கொள்ளும் முறையை ஆக்கச் சத்தியுடையோரும் கலைஞரும் மிகக் கேவலமானதாகவே கருதுவர்” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஏனெனில், சீவன்முத்தனுக்கு இன்பமுமில்லை; துன்பமுமில்லை. "நீ மனத்தில் சங்கல்பம் செய்வதைச் செயலில் செய்.” இந்தக் கோட்பாடு அகங்காரமுடையதுமன்று; பிறர்நலச் சார்புடையது மன்று. புலன்களின் தூண்டுதல்களுக்கு இசைதலும் அவ்வப்போதுண்டாகும் விருப்பங்களுக்கு இணங்குதலும், நமது சூழ்நிலைக்கு நாம் அடிமைப்படுவதாகும். இது பற்றற்ற சங்கற்பமாகாது; அதற்கு எதிரானதாகும். தன்முனைப்பு, சீவன்முத்தனுக்கு ஏற்புடையதொன்றன்று. சீவன்முத்தன் தன்னை மேலோங்க விடமாட்டான். இது பிறர் நலம் நாடலுமன்று. ஏனெனில், எனக்குப் புறம்பானது ஒன்றில்லா விட்டால் பிறர் நலத்துக்கு எங்கே இடமிருக்கப்போகிறது? ஆன்ம போதமே உயர்ந்த கடமை; தன்னை அறிதல், சுவானுபூதி. "வைத்தியரே முதலில் உமது நோயைச் சுகப்படுத்தும். அதன்பின்னர் உம்மிடம் வந்த நோயாளியையும் சுகமாக்கும்.” தன்னுடைய நோயை முதலிலே தீர்த்து அதைத் தன் கண்ணாலே காண்பானாக. "எவன் தன்னைச் சுகப்படுத்திக் கொள்கிறானோ அச் சுகப்பாடே சிறந்த பரிகாரம்.ஃ சுவாங்கு என்பவரின் பழையதொரு கோட்பாடு இது. புராதன இருடிகள் முதலில் ஞானத்தைத் தாமே பெற்றார்கள்; பின்னர் மற்றவர்கள் பெற வழி செய்தனர். இந்த ஞானத்தை நீர் பெறும் வரையும் துர்ச்சனருடைய செயல்களைப்பற்றிக் கருத்தெடுப்பதற்கு உமக்கு எங்கே நேரம் வரப்போகிறது? உனது ஆன்மாவை நீ வளர்த்துப் பேணிக்கொள்; மற்றவையெல்லாம் தாமாகவே வளர்ந்து செழிக்கும். இயேசுநாதர், "உன் கண்ணிலுள்ள துரும்பை முதலில் வெளியே எடுத்துவிடுஃ என்று கூறியிருப்பது ஞாபகத்துக்கு வரும்.

உலகத் தலைவர்கள், கடமை என்பதற்குச் சாதாரணமாகக் கொடுக்கப்படும் பொருளில் கடமையை உணர்ச்சியோடு செய்பவரல்லர். ஞானக்காட்சியில்லாதவர்கள் கடமையை ஒரு வியாச்சியமாகக் கொள்வர். அஃது ஒரு தலைக்கீடு. மேதாவிலாசமுள்ளவர்களின் செயல்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டா. ஆனால், உள்ளிருந்து வரும் கட்டளைக்கு அடங்க வாழ்வை அர்ப்பணம் பண்ணுவர். இந்தக் கட்டளை உலகத்தவர்க்குத் தீமையுடையதாகத் தெரிந்தாலும் அவர்கள் அதையே நிறைவேற்றுவர்.

இயேசு தாழ்மையுடையவரா? அல்லது
தமது விநயத்தை உறுதிப்படுத்த நிரூபணங்
களைத்தாம் காட்டினாரா?
குழந்தையாயிருந்த காலத்திலே
பெற்றோரை விட்டு ஓடிவிட்டார்.
அதனால் அவர் பெருந்துயரடைந்தார்.
அவர் நாவில் வந்த வார்த்தைகள் இவையே;
"நான் என் பரமபிதாவின் கருமங்களையே
செய்கிறேன்”.

ஒரு கருமத்தின் செம்மை அதைச் செய்வோனுடைய ஒருமைப்பாட்டிலே தங்கியிருக்கிறது. கருத்தா பூரணமாக ஒன்றுபட்டவனாயிருக்க வேண்டும். தமது சுபாவத்துக் கேற்றவாறு நாம் கருமத்தைச் செய்ய வேண்டும். அந்தச் சுபாவம் பூரண வளர்ச்சியடைந்துவிட்டதானால் தெய்விகம் பூரணமாக வெளிப்படும். இத்தகைய கருத்துகளை மனத்தில் வைத்துக்கொண்டுதான் நீட்சே ஆழ்ந்த சிரத்தையுடன் பின்வருமாறு அறைகூவுகிறார்:

"தாயானவள் குழந்தையிலே கண்ணுங் கருத்துமாய் இருப்பதுபோல உமது உயிர் உமது கருமத்திலிருக்கட்டும். நண்பர்களே! அப்போது நீவிர் தன்னலமற்ற கருமமே சிறந்தது என்று சொல்வதை நிறுத்திவிடுவீர்கள்”.

சாக்ரடீஸ் செய்த பிரார்த்தனையும் இதுதான். "உள்ளும் புறமும் ஒத்திருப்பதாக; அகமனிதனும் புறமனிதனும் ஒரே மனிதனாக இருப்பானாக” என்பதே. இது தவிர்த்த மற்றவை எல்லாம் பாசாங்கு. குறைந்த தரத்திலேயுள்ள மனிதன் வெளி விவகாரங்களையே பொருளாகக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறான். நீண்ட ஆயுள், கீர்த்தி, செல்வம், பட்டம், பதவி, நன்மக்கட்பேறு என்பவற்றில் பற்றுள்ளவரை அவனுக்குச் சுதந்தரம் கிடையாது. உயர்ந்த படியிலுள்ள மனிதன் வேறு வகையான வாழ்க்கையுடையவன். சுவாங்கு கூறுவதுபோல அவனுடைய வாழ்க்கை அவனுடைய அகத்தன்மையோடு பொருத்தமுடையதாய் இருக்கும். அவனுக்கு நிகரானவர் உலகில் கிடையாது. அவர்கள் தமது வாழ்வை அகத்து விவகாரங்களைக்கொண்டு ஒழுங்கு செய்வர்.

"பிரேம சாகரம்” என்னும் நூலிலே "சீவன்முத்தர் செய்ய முடியாதது என்ன? அவர்களுடைய போக்கை யார் அறிவார்? தமக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை; தம்மை அடைந்து போற்றித் துணை கேட்போர்க்கு அவர்கள் வேண்டுவதைக் கொடுப்பர். அவர்களுடைய போக்கு அதுதான். எல்லாரோடும் அவர்கள் சேர்ந்துள்ளவராகவே காணப்படுவர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவரோடும் சேராது தாமரை இலையிற் பனித்துளிபோலத் தனித்து ஒட்டாது நிற்பதைக் காணலாம்ஃ எனக் கூறப்பட்டுள்ளது. சுவாங்கு சீவன்முத்தரைப் பற்றிக் கூறும்போது, "அவன் அடங்கியிருக்கும்போது சிந்தையற்றிருக்கின்றான். செயலில் ஈடுபடும்போது கவலையின்றிக் கருமம் புரிவான். அவனுக்கு நல்லது தீயது, சரி பிழை என்பதொன்றும் கிடையாது. கடல் சூழ்ந்த வையகத்திலே எல்லாரும் இன்பமடைந்தால் அதுவே அவனுக்கு மகிழ்ச்சி தரும். எல்லாரும் பங்கு கொண்டால் அவன் பங்கில்லாதிருப்பான். தாயை இழந்த குழந்தையைப் போல மக்கள் அவனை நாடுவர்; வழியைத் தவறவிட்ட பிராணிகளைப்போல அவனைச் சூழ்ந்துகொள்வர். அவனே போதிசத்துவன்” என்று கூறுகின்றார். "நிருவான பதம் அடைந்ததும் கருமங்களெல்லாம் தாமாகவே தொழிற்பட்டு நிறைவேறுகின்றன” என்கிறார் அசுவகோசர். தமது நடத்தையின் ஒழுக்கத் தராதரங்களைப்பற்றிப் போதிசத்துவர் கருத்துக் கொள்வதில்லை. அவர்கள் தம்மியல்பாகவே கருமங்கள் செயற்படும் நிலையை அடைந்தமைக்குக் காரணம், "அவர்களுடைய செயல்களெல்லாம் ததாகதர் களுடைய (புத்தர்கள்) செயல், ஞானம் என்பவற்றோடு ஒன்றிக் கலந்திருத்தலே”. இயேசுநாதர் செய்கையெல்லாம் மேலான அறமாயின. ஏனெனில், அவர் உள்ளுணர்ச்சியினாலும், மனத்திலெழும் அகத்தூண்டலினாலும் செயல் புரிந்தாரே யன்றி விதிகளுக்கமையச் செயல் புரிந்தாரில்லை”. உலகுக்கு உட்பொருளாய் விளங்குவோர் அதீத மனிதரே என்கிறார் நீட்சே. அவர் குறிப்பிடுவது இந்தச் சீவன்முத்தர்களையே; போதிசத்துவர்களையே. அகங்கார புத்தியுடையவர் உறுதிப் பொருள்களின் பயனாகவும், மனிதகுலத்தின் இலட்சியமாகவு முள்ள இத்தகைய பெருமக்களின் நிலையை அறிந்து கொள்வது அரிது. இவர்கள் நன்மைதீமையைக் கடந்தவர்கள்; தாமே தமக்குப் பிரமாணமானவர்கள். சாதாரண மனிதரானால், "என்ன கொடுமை ! நான்கூட ஒழுக்கத்தை மேற்கொள்வது எனது கடமையெனவும் என்னுடைய இச்சைகளை அடக்குவது அறமெனவும் கருதுகிறேன்”, என்று கூச்சலிடுவான்.

எனவே, நீட்சேயும் ஏனைய அனுபூதிமான்களும் புகழ்ந்து போற்றும் "தன்னலத்தை”, கருமங்கள் எல்லாம் உலகம் பழியாத கருமங்களாயிருக்க வேண்டுமென்று நினைப்போருடைய கருத்துப்படி ஆராய்ந்தால் விளங்கிக்கொள்ள மாட்டோம். மனிதனுடைய ஒழுக்க நெறிகளை எந்த அறநூல்களிலும் காண முடியாது; தன்னுடைய சுபாவத்தை இடைவிடாது வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் விசுவத்தின் தத்துவங் களிலேயே அதைக் காணலாம். மலர்களைப் பாருங்கள்.

இங்கே ஒருவகையான சிற்றின்பப் போக்குண்டுதான்; ஆனால், அது போலி. இங்கே ஒரு அதிகார வேட்கை உண்டுதான்; ஆனால், அது அகங்காரத்தால் பிறந்ததன்று. இங்கே ஒரு தன்னலமுண்டு. ஆனால் அது பிறர் நலம் போற்றும் தன்மையைப் பெரிதுமுடையது. இந்த விகற்பங்களை நீட்சேகூட எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால், நித்திரை போலப் பாசாங்கு செய்வோரை எவ்வாறு எழுப்புவது? உயர்நிலையை யடையும் ஒருவரின் தோல்வியைப்பற்றியே நீட்சே பின்வருமாறு கூறுகிறார்: "ஒருகாலத்தில் அவர்கள் பெருவீரராக வரலாம் என எண்ணினர். அவர்கள் இன்று சிற்றின்ப லோலராய்விட்டனர்”.

"புலன்களை வென்றவன் நீதானா? தன்னடக்கம் பெற்றவன் நீதானா? விருப்புவெறுப்புகளைக் கடந்தவன் நீதானா? குணமென்னும் குன்றேறி நின்றவன் நீதானா? இவ்வாறு நானுன்னைக் கேட்கிறேன். உனது இச்சை, தேவை, ஒழுக்கம், பிணக்கு என்பவற்றில் மிருகந்தான் பேசுகிறதா? ஒழுக்கக்கேடு, இச்சைப்படி ஒழுகல் என்பன உயிரின் சுவாதந்திரியமென்று கூறுவோர்க்கு நான் எச்சரிக்கை செய்கிறேன், இதற்கும் அதற்கும் வெகுதூரம்”.

தன்னைத்தானே காதலிக்கப் பழகுதல் என்பது இன்றைக்கும் நாளைக்கும் ஏற்புடைய விதியன்று. எல்லாக் கலைகளிலும் இதுவே சிறந்தது; நுண்மையானது; பொறுமையோடு பயிலப்பட வேண்டியது; கடைசியான கலை. "உண்மை யானதும் இலட்சியபூர்வமானதுமான தன்னலமென்பது ஆன்மாவைச் சதா கவனித்து அதை நெறிப்படுத்தல்; இதன் பயனாக நமது விளைவு பயனுடையதாகும்”.

இது சிற்றின்பலோலனாய் இருக்க வேண்டுமென்ற வகையான கோட்பாடன்று. இöது ஒருவகையான துறவுநிலை; தவம்; இயலுமானால் இத்தவத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்தணனுக்கு கடினமான தருமமும், சூத்திரனுக்கு இலேசான தருமமும் மனுவினால் வகுக்கப்பட்டமைக்கு இதுவே காரணம். மனுவின் கோட்பாடும் நீட்சேயுடைய கோட்பாடு போன்றதே. இந்த நியதியை உணர்ந்த நீட்சே வருணாசிரமத்தைப் புகழ்ந்தார். மலையிலே உயர்ந்து செல்லச்செல்ல உச்சியை அணுகஅணுகக் குளிர்மையுண்டாவது இயல்பே. "அந்தணன் என்போன் தன்னுடைய இன்ப நுகர்ச்சிக்காக எதையுஞ் செய்யக்கூடாதுஃ என மாரக்கண்டேய புராணம் கூறுகிறது.

மேலைநாட்டு நாகரிகம் தேய்ந்து அழிந்துபோன தன்மையை அறிந்தவர்கள் ஐரோப்பாவின் மனசாட்சி நீட்சேயில் விழித்துக்கொள்வதை உணர்வார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com