மிதிபடும் கருத்துரிமை
நாடாளுமன்ற வேட்பாளர் திரு.கணேசமூர்த்தியை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் த.தே.பொ.க. துண்டறிக்கையை தோழர்கள் ஜெயக்குமார், இராமச்சந்திரன் ஆகியோர் மக்களிடம் விநியோகித்தனர். இந்த ஒரே காரணத்திற்காக தோழர் இ.சி.இராமச்சந்திரன் காவல்துறையால் காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்ததும் மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பி.யூ.சி.ல்.), பெரியார் தி.க., த.தே.பொ.க.,த.தே.வி.இ., ம.திமு.க., இ.பொ.க., த.ஒ.வி.இ. மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று இது பற்றி விசாரித்துத் தோழரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியபின், தோழர் இ.சி.இராமச்சந்திரனை இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஈரோடு காவல்துறையினர் விடுவித்தனர்.
கருத்துப்படம் ஒன்றை மக்களிடம் கொண்டு சேர்த்தது குற்றம் என்றால், இதே அளவுகோல் ஆளும் தி.மு.க. மற்றும் காங்கிரசு கூட்டணிக்கும் பொருந்துமா என்று தோழர்கள் கேட்ட கேள்விக்கு காவல்துறையிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதே போல் 26.4.09 அன்று சேலத்தில் திரு.பழ.நெடுமாறன் பேசிய கூட்டத்தில், ‘காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்’ என்ற துண்டறிக்கை அளித்த த.தே.பொ.க. தோழர்கள் பிந்துசாரன், சரவணக்குமார் ஆகியோரை காங்கிரசு திமு.க. அணியினர் தாக்க முற்பட்டனர். இதனைக் கண்ணுற்ற தமிழுணர்வாளர்கள் 300 பேர் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஐயா நெடுமாறன் தலையிட்டு காவல்துறையைக் கடிந்து கொண்ட பிறகு காலிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
சிவகங்கை தொகுதி ஆலங்குடியில் காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்த மாணவர்களை காங்கிரசு குண்டர்கள் தாக்கினர். தாக்கப்பட்ட மாணவர்களையே காவல்துறை கைது செய்தது. பெ.ம., தியாகு, கி.வெ. பேசும் சில கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கருணாநிதி அரசு தோல்வி பயத்தில் அடிப்படை சனநாயக உரிமைகளையே காலில் போட்டு மிதிக்கிறது.
|