இந்திய இலங்கை தேசியக் கொடி எரிப்புப் போராட்டம்
ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய சிங்களக் கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் இணைந்து இப்போராட்டத்தை 25.04.09 அன்று நடத்தின.
தஞ்சை
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் 25.04.09 காலை 10 மணியளவில் த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட அணியினர் இந்தியக் கொடியை நடுவீதியில் வைத்துக் கொளுத்தினர். பரபரத்துப் போன காவல்துறை தோழர்களைக் கைது செய்தது. அதற்கு சற்று நேரம் கழித்து இரண்டாவது அணியினர் தோழர் குழ.பா.ஸ்டாலின் தலைமையில் அதே இடத்திற்கு அருகில் இந்தியக் கொடியை எரித்து முழக்கமிட்டனர். திகைத்துப் போன காவல்துறை கொடி எரித்த தோழர்களையும், அருகில் நின்றகட்சிப் பொறுப்பாளர்களையும் கைது செய்தது. இவ்வாறு தோழர்கள் தெ.காசிநாதன், சிவராசு உள்ளிட்ட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் காலை 10.30 ணியளவில் நடந்தது. இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியபடி கொடிகளை எரித்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகர அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி, தமிழர் தேசிய இயக்கம் திருவள்ளுவன், சீனிவாசன், தோழர்கள் பா.சங்கர்(த.தே.பொ.க.), தேவேந்திரன்(த.தே.வி.இ.) உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு
ஈரோடு நகரத்தின் காளைமாடுச் சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த த.தே.வி.இ. தோழர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓசூர்
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 25.04.09 அன்று காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து உள்ளிட்டு இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து ஓசூர் நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்று மாலை விடுதலை செய்தனர். முன்னதாக தோழர்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
சென்னையில் இந்திய அரசின் தலைமை அலுவலகமான சாஸ்திரி பவனில் காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில் த.தே.பொ.க., த.தே.வி.இ. தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிவ.காளிதாசன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இந்திய - இலங்கைப் படைகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்க முயன்ற தோழர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
|