தலையங்கம்
சுவரை வைத்துதான் சித்திரம் தீட்ட முடியும்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் வாசகர் அனைவர்க்கும் மே நாள் புரட்சி வாழ்த்துகள்! உழைக்கும் மக்கள் உலகு தழுவிய அளவில் கொண்டாடும் நாளாக இருப்பது மே நாள் மட்டுமே. மே நாளின் தோற்றம் தொழிலாளர் உரிமையும் நலனும் சார்ந்ததாகவே இருந்தது. ஆயினும் அந்நாளைப் பன்னாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் முழக்க நாளாக இரண்டாவது அகிலம் ஏற்றது. எங்கெல்ஸ் அதை முன்மொழிந்தார்.
மிகத் தெளிவாக லெனின், சனநாயகப் புரட்சிக்கும், நிகரமைப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கம் உறுதி ஏற்கும் நாளாக - அதற்கான ஆர்ப்பாட்டங்கள் - எழுச்சிப் பேரணிகள் நடத்தும் நாளாக மேநாளைக் கடைபிடிக்க வேண்டும் என்றார். தேசிய விடுதலைப் புரட்சியாளர்கள், சனநாயகப் புரட்சியாளர்கள், நிகரமைப் புரட்சியாளர்கள் என போராடும் மக்கள் அனைவரும் மேநாளைக் கொண்டாடி எழுச்சி கொள்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆண்டு தோறும் மேநாள் கொண்டாடி வந்தனர். இவ்வாண்டு அந்நிகழ்வுகள் நடக்குமா என்பது தெரியவில்லை. இந்த மேநாளில் தேசிய இனம், வர்க்கம், சாதி, மதம் குறித்த சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஆயுத உதவி, நிதி உதவி, அரசியல் உதவிஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழ் இனத்தை அழித்து வருகிறது. இந்தியா ஒரு முதலாளிய நாடு; பார்ப்பனியக் கருத்தியல் வழிநடக்கும் நாடு; அது தனது விரிவாதிக்கத்திற்காகவும் பொருளியல் சுரண்டலுக்காகவும், தமிழின எதிர்ப்பிற்காகவும் சிங்கள இனவெறிக்குத் துணை போகிறது. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. சீனாவை ஆள்வது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. மாசேதுங் தலைமை தாங்கிய கட்சி அது. மாபெரும் மனித நேயம், எல்லாவகை ஒடுக்குமுறைக்கும் எதிர்ப்பு, தேசிய இனங்களுக்குள்ள பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை, பாட்டாளி வர்க்க அனைத்துத் தேசியம், ஆயுதப்புரட்சி ஆகிய கோட்பாடுகளைக் கொண்டது தான் மார்க்சிய லெனினியம்.
ஆசிரியர் குழு
ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்
குழு உறுப்பினர்கள்
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி
புதிய தமிழர் கண்ணோட்டம்,
44-1, பஜனை கோயில் தெரு,
(முத்துரங்கம் சாலை அருகில்),
கண்ணம்மாபேட்டை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.
தொலைப்பேசி: 044- 2434 8911
[email protected]
tamizhdesiyam.blogspot.com
ஆண்டுக் கட்டணம்: ரூ.120
மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300
வாழ்நாள் கட்டணம்: ரூ.1200
|
சீனக் கம்யுனிஸ்ட் கட்சி, ஈழத்தமிழர்களை அழிக்கும் சிங்களப் பேரினவாதப் போர் வெறிக்குத் துணை போவது எப்படி? இந்தியாவில் உள்ள மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்களப் பேரினவாத - தமிழர் அழிப்புப் போரை சுற்றி வளைத்து ஆதரிப்பது எப்படி? இலங்கையில், தான் மட்டுமே அசல் மார்க்சிய - லெனினியக் கட்சி என்று கூறிக்கொள்ளும், ஜனதா விமுக்தி பெரமுனா, இராசபட்சே நடத்தும் தமிழின அழிப்புப் போரின் வேகம் போதாது என்று சாடுவது எப்படி? மார்க்சிய - லெனினியக் கட்சிகள் இவ்வளவு பெரிய மனித அழிவை ஆதரிப்பது எப்படி? இந்த மேநாளில் இது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்தக் கட்சிகள் பாட்டாளிவர்க்க அனைத்துத் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டு, சொந்த தேசிய நலனில் மட்டும் முழு அக்கறை காட்டுகின்றன. சொந்தத் தேசிய நலனுக்காக அடுத்த நாட்டுத் தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கவும் தயங்காதவை இவை. மாசேதுங் தலைமை இருந்த போதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, திபெத்தியர்களின் தேசியத் தாயகத்தை வன்கவர்தல் செய்தது. திபெத்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை படை கொண்டு தாக்கி நசுக்கியது. இன்றும் அந்த ஒடுக்குமுறை தொடர்கிறது. துருக்கிஸ்தானியர்களின் விடுதலைப் போராட்டத்தைப் படைகளை ஏவி சீனா நசுக்குகிறது.
ஸ்டாலின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மேலாதிக்கம் தலை தூக்கியதை லெனினே கடுமையாகக் கண்டித்தார். ரஷ்ய, சீன அரசுகள் இன்று இப்போக்கில் இன்னும் தீவிரம் காட்டுகின்றன. தன் நாட்டில் தேசிய விடுதலையை ஏற்காத சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, பிறநாட்டுத் தேசிய விடுதலை இயக்கங்களை சொந்த நலனுக்காக எதிர்ப்பதில் வியப்பில்லை. அண்மையில் சீனாவின் வெளியுறவுத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், தெற்காசிய மண்டலத்தில் நேப்பாளமும், இலங்கையும், தனது நெருங்கிய நட்புநாடுகள் என்றும், பிரிவினைவாத - பயங்கரவாத சக்திகளை எதிர்த்து இலங்கை அரசு நடத்தும் போருக்கு சீனா எல்லா உதவிகளையும் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தெற்காசிய மண்டலத்தில் வட அமெரிக்காவும், இந்தியாவும் ஆதிக்க நிலை பெறாமல் தடுக்க, சீனா இந்த நிலைபாட்டை எடுக்கிறது. தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கைக்கு எல்லா வகைப் பங்களிப்பையும் சீனா வழங்குகிறது. இந்திய தேசியம் என்ற பார்ப்பன - இந்தி தேசியத்தையும், அதன் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ஈழத்தமிழர்களின் தன்னுரிமையை மறுக்கிறது மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி. அவர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்வதை சுற்றி வளைத்துப் பேசி ஆதரிக்கிறது அக்கட்சி.
செயலலிதா தனி ஈழத்தை ஆதரிப்பது தேசவிரோதச் செயல் என்று அண்மையில் காங்கிரஸ் அமைச்சர் கபில் சிபல் கூறினார். இதே கருத்தைத்தான் சி.பி.எம்., பா.ஜ.க. போன்றவை கொண்டுள்ளன. ; மனித நேயத்தின் கொடுமுடியாக உள்ள பாட்டாளி வர்க்க அனைத்துத் தேசியம் என்ற மார்க்சிய - லெனினியக் கோட்பாட்டை இக்கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் சொந்த தேசிய வெறிக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தத் தன்னல வெறியை மறைப்பதற்காக, நாடுகள் பிளவுபடக்கூடாது; நாடுகள் பிளவுபட்டால் பாட்டாளி வர்க்கம் பிளவுபடும் என்று கூறி ஆகப் பெரிய மார்க்சியர்கள் போல் பாட்டாளி வர்க்க அனைத்துத் தேசிய முகமூடியை மாட்டிக் கொள்கின்றன.
இந்திய தேசியத்திற்குட்பட்ட பார்ப்பன - வங்காளி - மலையாளி இனவாதக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்கள இனவெறிக் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவை, ஐந்தாண்டுக்குமுன் தனது அனைத்திந்திய மாநாட்டிற்கு உடன்பிறப்புப் பேராளராக அழைத்ததையும் நினைவு கூர வேண்டும். வர்க்கத்தை முதன்மைப்படுத்துகின்ற இந்தியாவின் பழம் பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமை ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கப் போராடவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைமை ஈழத்தமிழரைக் காக்கப் போராடுகிறது. இக்கட்சிகளின் பிறமாநிலத் தலைமைகள், ஈழத்தமிழர்க்காக சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலைக்காகக் கட்சி நடத்தும் மாயாவதி, பாஸ்வான் போன்றோர் இவ்வளவு பெரிய மனிதப்பேரழிவைக் கண்டு கொள்ளவே இல்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகக் கட்சி நடத்தும் முலாயம் சிங், லல்லுபிரசாத் ஆகியோர் ஈழமனித அழிவைப் பொருட்படுத்தவே இல்லை.
இந்துத்துவா பேசும் பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைமையும், அக்கட்சியின் பிறமாநிலத் தலைமைகளும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. தோ;தலுக்குப் பயன்படும் என்ற அளவில், அவ்வப்போது போர் நிறுத்தம் பற்றி அத்வானி பேசுகிறார், அவ்வளவே. பிரிட்டன், நார்வே, சுவீடன், டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், செர்மனி, வட அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மரீசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் வீதிக்கு வந்து கூக்குரல் எழுப்பி தங்கள் இனம் அழிக்கப்படுவதை அந்தந்த நாட்டிற்கும் தெரிவித்து, போர் நிறுத்தம் கோரினர். இவர்கள் போராடவில்லை எனில் இந்த நாடுகளும் போர் நிறுத்தம் கோரி இருக்குமா என்பது ஐயமே!
தமிழ்நாட்டில் சாதி, மதம், வர்க்கம், கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வில் இந்த அளவுக்காவது தமிழர்கள் போராட வில்லை என்றால் இந்திய - சிங்களக் கூட்டுப் படைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள் மொத்த ஈழத்தமிழர்களில் பாதிப்பேரைக் கொன்று போரை முடித்திருக்கும். இந்த மெய்நடப்புகளை வைத்துப் பார்த்தால், இனம், தேசிய இனம் என்ற சமூக வடிவம் தான், வர்க்கம், சாதி, மதம் ஆகியவற்றை விஞ்சி செயலூக்க மிக்கதாக உள்ளது.
ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் வர்க்கப்ப பேராட்டம் நடக்கும்; சாதி, மத ஆதிக்கம் மற்றும் பிற்போக்குத் தனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு தேசிய இனமும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போராட்டங்களின் வழியாகவே, உலகத்தூய்மைக்கான போராட்டம் தொடரும். இன உணர்ச்சி, மொழி உணர்வு ஆகியவற்றிற்கு உட்பட்டே வர்க்க உணா;ச்சி, சாதி, மத உணர்ச்சிகள் செயல்புரிகின்றன.
இன உணர்ச்சி, வர்க்கப் போராட்டத்தைத் தடுக்கும் என்று கருதக்கூடாது. இன உணர்ச்சியை உரியவாறு செயல்படுத்தும் போது அது வர்க்கப் போராட்டத்தை ஊக்கப்படுத்தும். அதேபோல் சாதி, மத ஆதிக்கங்களையும் மற்றுமுள்ள பிற்போக்குத் தனங்களையும் களைந்து, சமூக ஓர்மையை வளர்க்கும். தேசியம் குறித்து இரட்டை அணுகுமுறையைக் கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாரார் கடைபிடிக்கின்றனர். இந்த இரட்டை அணுகுமுறை உலக அளவில் நடக்கிறது. ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் தேசிய நலனுக்காக, பிற தேசிய உரிமைகளைப் பறிக்கின்றனர் அல்லது பலியிடுகின்றனர். இதற்கு இன்றையச் சான்றாக சீனா இருக்கிறது. ஏற்கெனவே சோவியத் ரசியா இதையே செய்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கும் போது, செச்சன்யாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்கியது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய முதலாளிய ரசியா செச்சன்யா மீது 10 ஆண்டுகள் கடும் போர் நடத்தி, பல்லாயிரக்கணக்கான செச்சன்யர்களைக் கொன்று குவித்தது. இனப்படுகொலைக் குற்றவாளியாக உள்ள ரசியா, சிங்கள இனவெறிப் போர்க்கு ஆயுத உதவியும் அரசியல் உதவியும் செய்கிறது. ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தென்னமெரிக்கப் பேராளர்கள், ஈழத்தமிழர் இனக்கொலை சிக்கலை விவாதிக்க முன்மொழிவு செய்த போது, நீக்க வாக்கு(ரத்து ஓட்டு) போட்டு அதைத் தடுத்தவை சீனாவும், ரசியாவும் என்பதைக் கவனிக்க வேண்டும். தன்தேசிய வெறியும் பிறதேசியப் புறக்கணிப்பும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை சாரத்தில் முதலாளியக் கோட்பாடாகும். இந்தியாவின் பழம்பெரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இந்திய தேசிய வெறியும், பிற தேசிய மறுப்பும் கொண்டு செயல்படுகின்றன.
இந்தப்புள்ளியில் மேற்கண்ட கம்யூனிஸ்ட்டுகளும் ஏகாதிபத்திய முதலாளியரும் ஒன்றிணைகின்றனர். ஏகாதிபத்திய முதலாளியர் தம் தேசிய இன ஆதிக்கக் கொள்கையர். பிறதேசிய இனங்களை அடிமைப்படுத்துவர். இதன் இன்னொரு வகை வெளிப்பாடுதான் தன் தேசியத்தைக் காத்துக் கொள்ள பிற தேசியங்களைப் பலியிடும் சில கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் அணுகுமுறை. இப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் செயல்முறை, ஏகாதிபத்திய உலகமயத்திற்கு உறுதுணை செய்யக்கூடியது. மற்ற தேசிய எல்லைகளை அழித்து அவற்றை உலகச்சந்தைக்கான நிலப்பரப்பாக மாற்றுவது உலகமயத்தின் நோக்கம். ஒருநாணயத்தின் இருபக்கங்கள் போல் மேற்கண்ட கம்யூனிஸ்ட்டுகளும் ஏகாதிபத்தியரும் செயல்படுகின்றனர். இவர்கள் எதிர் எதிர் திசையில் பயணம் செய்து ஓர் இடத்தில் வந்து சேர்வார்கள்.
தமிழ்ப் பாட்டாளிவர்க்கம் தன்னைத் தமிழ்த் தேசியத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். மட்டுமின்றி, தமிழ்த் தேசியப் புரட்சியில் முன்னணிப் பாத்திரம் வகிக்க முன்வர வேண்டும். தனக்கான தேசமாகத் தமிழ்த் தேசத்தை அடையாளம் கண்டு கொள்ளாத தமிழ்ப் பாட்டாளி வர்க்கம், தான் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டம் குறித்த புரிதல் இல்லாமல் குழம்பி நிற்கும். பொருளியல் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மட்டுமே வர்க்கப் போராட்டமாகக் கருதிக் கொள்ளும். வர்க்கப் போராட்டத்தில் பொருளியல் போராட்டங்களும் ஒரு கூறு. வர்க்கப் போராட்டத்தின் தலைமைக் கூறு அதன் அரசியல் போராட்டங்களே!
தனக்கான தேசத்தை இறையாண்மையுள்ளதாக அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் தனக்கான நிகரமைப் போராட்டத்தை நடத்தாது. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத ஆசைப்பட்டால் எப்படியோ, அப்படித்தான் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் நிகரமைப் புரட்சிக்கு ஆசைப்படுவது. தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தங்களுக்கு அனைத்திந்திய உறவுகள் - அமைப்புகள் உருவாகும் என்று கருதுவது கானல் நீர் போன்றதுதான் என்பதை ஈழத்தமிழர் இனப்படுகொலை நமக்கு உணர்த்தியுள்ளது.
தமிழ்த் தேசியம் இங்கு வலுவாகக் காலூன்றி வளர்ச்சி பெற்றால் பிற தேசிய இனங்களுடன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் போக்கு காலப்போக்கில் ஏற்படும். நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியம் தேசிய இன விடுதலையை மட்டும் வலியுறுத்தி, வா;க்கம், சாதி போன்ற உள் முரண்பாடுகளைப் புறக்கணிப்பது அல்ல.
ஒரு தேசிய இனம் தனக்குள் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டால் அல்லது உரிய அழுத்தம் அதற்குக் கொடுக்காவிட்டால், அத்தேசமக்கள் கொடிய சுரண்டலுக்கும் வறுமைக்கும், சனநாயக மறுப்புக்கும் உள்ளாவர். அதே போல், வர்ண சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கூர்மைப் படுத்தத் தவறினால், தமிழ்த் தேசிய ஓர்மை உறுதி பெறாது; நிலையானதாகஇருக்காது.
தமிழ்த்தேசியம் என்ற இலக்கினை முதன்மைப் படுத்தாமல் வர்க்கம், சாதி ஆகிய முரண்பாடுகளைத் தீர்க்க முனைந்தால், அது வெறும் தொழிற்சங்கவாதமாகவே இருக்கும். சுவரை வைத்து தான் சித்திரம் தீட்ட முடியும். தமிழ்த் தேசியம் என்பது சுவர். அதில் தீட்டப்படும் சித்திரங்களதாம், வர்க்கச்சுரண்டல் ஒழிப்பும் - நிகரமை உருவாக்கமும்; வர்ணசாதி ஆதிக்க ஒழிப்பும் - சமூக சமத்துவமும்.
|