தமிழின அழிப்பில் இந்திய அரசு :
இயக்குநர் பாரதிராஜா “பத்மஸ்ரீ” விருதை திருப்பி அனுப்பினார்
திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை திரைப்பட வர்த்தகசபை அருகில் நடைபெற்றது. 23.04.09 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை வகித்தார். திரைத்துறையினரும், சின்னத்திரையினரும் பெரும் எண்ணிக்கையில் இத்தொடர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அன்று தி.மு.க. அறிவித்திருந்த பொது அடைப்பு நடந்தபோதும் பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. திரு பழ.நெடுமாறன், தோழர் பெ.மணியரசன், திரு. த.வௌ;ளையன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர். தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சார்பில் தீர்மானங்களை பாரதிராஜா முன் வைத்தார். “இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப்போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்” என்று குற்றம் சாட்டிய அத்தீர்மானம், போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாமல் பிரதமர் மன்மோகன் சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ, சோனியா காந்தியோ தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்தால் “எங்கள் முழு எதிர்ப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்” என்று எச்சரித்தது.
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றும்போது இயக்குநர் பாரதிராஜா ‘இனக்கொலைக்குத் துணை போகும் இந்திய அரசு அளித்த பதம்ஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்புகிறேன்’ என்று உணர்ச்சி ததும்ப அறிவித்தார். அறிவித்தவாறு விருதைத் தில்லி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
தமிழ்த்திரையுலகில் யாரும் செய்யமுன்வராத அரிய செயல் இது என இனவுணர்வாளர்கள் அனைவரும் பாரதிராஜா அவர்களை வாழ்த்துகின்றனர். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இயக்குநர் பாரதிராஜா அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறது.
|