Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2008

திராவிடத்தை விட்டு வாருங்கள்
உறையிலிடாதான்

இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப்பட்டு உள்ளது. கொள்கை ரீதியாகத் திராவிட இயக்கம் தோற்றுவிட்டது. "திராவிட'' என்ற பெயரால் சில கட்சியினர் அமைச்சர் பதவிகள் பெற்றனரே தவிர, மொழிவழி தேசிய இனக்கொள்கையே வெற்றி பெற்றுள்ளது. பெயரில் மட்டும் "திராவிட'' என வைத்துக் கொண்டு தமிழ்நாடு, தமிழர் என்றே பேசுகின்றனர். இவ்வுண்மையை ஒப்புக் கொள்ளும் நெஞ்சுரம் திராவிட இயக்கத்தவரிடம் இல்லை. திராவிட இயக்க அடிப்படைக் கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டன என்ற உண்மை விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மை அவர்கட்கு இல்லை.

இப்படி எழுதுவதால் அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றோரின் கடந்த கால நற்பணிகளைக் புறக்கணிப்பது என்பதல்ல. கடந்தகால நற்பணிக்காக அவர்களைப் போற்றிப் புகழ்வோம். தற்கால நிலையை ஆய்வு செய்வோம். "திராவிட'' என்பது தேசிய கீதத்தில் தான்; மொழிவழி தேசியமே உண்மை. "கன்னடக் கட்சியினருக்குத் தமிழர் என்றாலே ஒவ்வாமை'' எனக் கலைஞ÷ கூறியுள்ளார். ஆந்திரா, கேரளா, கன்னடத்தாருக்குத் திராவிட உணர்வு கிடையாது. ஆனால் பெயரை வைத்துப் பிழைக்கும் தலைவர்கள் கட்சிகளைக் கலைக்கமாட்டார்கள்.

அதனால்தான் இந்த திறந்த மடலைத் தலைவர்கட்குத் தீட்டவில்லை. அவ்வியக்க அன்பர்களின் சிந்தனைக்கே விடுக்கிறேன். அண்டை மாநில மக்களை வெறுத்துப் பகைத்துத் தள்ளவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகத் தமிழ்த் தேசிய இயக்கங்களில் இணைவீர்.

காவிரியாற்று நீர்ச்சிக்கலில் நடுவண் அரசு அமைத்த தீர்ப்பாயத்தின் முடிவை கர்நாடகம் ஏற்க மறுக்கிறது. தமிழ் மாநிலப் பகுதியான ஒகனேக்கல் பகுதியில் குடிநீர்த்திட்டம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கர்நாடகத்திற்கு எப்படி உரிமையுண்டு? முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கேரள அரசு தடுக்கிறது. பாலாற்று நீர் தமிழகத்திற்கு வரவிடாமல் அங்கே ஆந்திர அரசு அணை கட்டுகிறது. அன்று உரிமைக்குப் போராடிய அண்ணாவின் வழித் தோன்றல்கள் நாங்கள் தான் என முரசொலிப்போர், இன்று தமிழ்நாட்டின் பகுதியிலே குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தும் உரிமையைப் பெற மற்றவர்களிடம் கெஞ்சுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அவ்வுரிமையை நிலை நாட்டாமல் அடங்கிக் கிடக்கின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.

ஆற்றுநீர்ச் சிக்கல்களில் மட்டுமல்ல, தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்துவதிலும், பள்ளிகள் அனைத்திலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்குவதிலும் மாநில அரசுக்கு உரிமை இருந்தும், அந்த உரிமையை இன்னும் பயன்படுத்தாமல் இருக்கின்றது மாநில சுயாட்சி கேட்ட தி.மு.க. அரசு. ஆகவே தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளில் இருக்கும் அன்பர்களே, தமிழ், தமிழர், தமிழ்நாடு நலனில் நாட்ட உள்ளவர்களே, மொழிவழித் தமிழ்த் தேசிய இயக்கங்களில் இணைவீர். நாம் ஒருங்கிணைந்து தமிழர்கள் இளிச்சவாயர்கள் இல்லை, ஏமாளிகள் அல்லர்!


Unable to connect to database! Please try again later.