பெருச்சாளிகள்
பெ.மணியரசன்
வெள்ளைக்காரன் கட்டியது
கெட்டியாகத்தான் இருக்கும்
விண்ணளந்து நிற்கும்
எங்கள் சிறைச்சாலையும்
வெள்ளைக்காரன் கட்டியது
காலக் கிழவன் கணக்கை மறுத்து
ஆழக் காலூன்றி அசையாமல் நிற்கிறது
கட்டுக்காவலோ கதைத்து மாளாது
துப்பாக்கி ஏந்திய சூரர்கள்
சுவர்மேல் நிற்கின்றனர்.
நெடுங்கதவம் முழுசாய்த் திறக்காது
ஒடுங்கிக் குனிந்து உள் நுழைய
குட்டிக் கதவொன்று கூடவே இருக்கும்
தாக்கி அடக்கத் தயார் என்று காட்ட
காக்கி உடுப்பில் காவலர்கள் தடியோடு!
வாக்கி டாக்கியில் “ஓவர்” “ஓவர்”!
பெரிய அதிகாரிகள்
சிறிய அதிகாரிகள்
பேச்சும் சரசரப்பும் பேரதிகம்
இருபத்து நாலுமணி நேரம்
இத்தனை கெடுபிடி இருந்தும்
பெருச்சாளிகள் பெருத்துவிட்டன.
பண்டகசாலை,
பட்டறை வளாகம்
பாத்திரக்கிடங்கு,
சீருடைக் கூடம்
பார்க்குமிடமெல்லாம்
நீக்கமற வளைகள்.
பத்து மூட்டை அரிசி வாங்கினால்
பாதியைத் தின்றுவிடும்
பட்டைச்சோறு சிறுத்துவிடும்.
பருப்பைப் பதுக்குவதில்
விருப்பம் அதிகம்
குழம்பெனப் பேர்கொண்டு
குவளையில் விழும்
வெந்நீரில்
மிதப்பது மிளகாய் மட்டுமே
காய்கறி கீரை காண்பதரிது
சிறையாளிகள் இளைத்து
எலும்பாய்த் திரிகின்றனர்.
பெருச்சாளிகள் வயிறோ
பெருத்துக் கிடக்கிறது
பெல்ட் போட்டு இறுக்கினாலும்
பிதுங்கும் சதைகள்
வளைக்குள் நுழைய முடியாமல்
திணறும்!
எவ்வளவு பெருத்தாலும்
சிறையாளிகள் அதட்டினால்
பிடிபட்ட திருடன்போல் பம்மும்
சீருடை மட்டும் போட்டுவிட்டால்
சிறை அதிகார வரிசையில்
பெருச்சாளிகளும் சேர்ந்து விடும்.
|