புதரின் மறைவில்
கவித்துவன்...
நிறையவே
நிர்வாணமாகி விட்டார்கள்
இனி
சந்தேகிக்க ஒன்றுமில்லை
ஆதாய நாக்குடன்
அயராது நக்கித்தொலைக்க
அருகில் நிற்க முடியாமல்
வீச்ச மெடுத்து விட்டது
ஈழம் அவர்களின்
இதயக் குரூரத்தை – வெளியில்
எடுத்துப் போட்டு விட்டது
முத்துக்குமாரின்
தீச் சுடர்
ஒளிந்து கொண்டிருந்த
முகங்களையும்
உருவிக் காட்டி விட்டது
அரியணை சுகவாசிகள்
அம்மணமாய் நின்றபடி
கையசைக்கிறார்கள்
ஈழத்தமிழர்களின்
சிதைந்த உடல்கள் - அவர்களை
கேள்விக் கணைகளால்
துளைத் தெடுக்கின்றன
பிணங்களின் கேள்விகளுக்கு
பதில் கூற முடியாமல்
பல் இளித்துப் பரிதாபமாய்
நிற்கிறார்கள்
இன்னும்
ஏமாளிகளைத் தேடியபடி
தொடரவும் செய்கிறது!
அவர்களின் பயணம்
மறைந்து மறைந்து
மக்கள் புதருக்குள்
பம்முகிறார்கள்
நிர்வாணத்தை மறைத்துவிடும்
நினைப்புடன்
பதவியைப் பிடித்துவிடும்
பிழைப்புடன்
|