தலையங்கம்
சுயமரியாதை இல்லாத சூத்திர ஆட்சி
சுயமரியாதை இல்லாத சூத்திரஆட்சி, பார்ப்பன ஆதிக்கத்தின் பாதுகாப்பு அரண் என்பதை தி.மு.க ஆட்சி மெய்ப்பித்து வருகிறது. சுப்பிரமணியசாமி என்ற பொறுக்கி மீது முட்டை வீசப்பட்டதற்காக, வழக்குரைஞர்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைச் சந்தித்தனர்.
காவல்துறையினர் மற்றும் ஆட்சித்துறையினர் அடங்கிய அதிகார வர்க்கத்தினரின் எதேச்சாதிகார உளவியல் 19.02.2009 உயர்நீதிமன்றத் தாக்குதல் மூலம் மீண்டும் அம்பலமானது. ஆட்சி- அதிகாரவர்க்கம் இரண்டும் முன் கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றியது தான் அன்றைய வன்முறை.
ஆசிரியர் குழு
ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்
குழு உறுப்பினர்கள்
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி
புதிய தமிழர் கண்ணோட்டம்,
44-1, பஜனை கோயில் தெரு,
(முத்துரங்கம் சாலை அருகில்),
கண்ணம்மாபேட்டை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.
தொலைப்பேசி: 044- 2434 8911
[email protected]
tamizhdesiyam.blogspot.com
ஆண்டுக் கட்டணம்: ரூ.120
மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300
வாழ்நாள் கட்டணம்: ரூ.1200
|
இந்நிகழ்வின் தொடக்கம் என்ன?
சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தீட்சிதர்களிடமிருந்து மீட்டு இந்து அறநிலைய ஆட்சித்துறை ஏற்றுக்கொண்டது. அதை எதிர்த்து தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளார்கள்.
அவ்வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளக்கோரி சு.சாமி 17.02.2009 அன்று உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிமன்ற அறையில் வழக்குரைஞர்களுக்கான இருக்கையில் திமிராக உட்கார்ந்து கொண்டார். சிதம்பரம் வழக்கு 56-வது எண்ணில் இருந்தது. அன்று மாலையோ, மறுநாளோ அது விசாரணைக்கு வரலாம். பார்ப்பன அதிகாரத்திமிரோடு காலையே வந்து உட்கார்ந்துகொண்டு முதலில் சிதம்பரம் வழக்கை எடுக்கும்படி கோரினார் சு.சாமி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர்கள் சு. சாமியின் ஈழத் தமிழர் எதிர்ப்பைக் கண்டித்து முழக்கமிட்டவாறு நீதிமன்ற அறைக்கு வந்தனர். அப்பொழுது வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும், ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
இந்தச்சூழ்நிலையில் தமிழர் எதிர்ப்பு நரம்பையே பூணூலாக மாட்டிக் கொண்டுள்ள சு.சாமி நீதிமன்றத்திற்கு வந்தது வழக்குரைஞர்களை ஆத்திரமடையச்செய்தது. அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவ்வேளை சு.சாமி மீது அழுகிய முட்டைகள் வந்து விழுந்தன. சு.சாமியின் முகத்தில் ஒரு முட்டை உடைந்து ஒழுகியது. (புஷ்ஷின் முகத்தில் செருப்பே வீசப்பட்டது.) இதைத்தான் உலகில் நடைபெறாத கொடிய வன்முறையாக ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் எடுத்துக்கொண்டு அராஜக ஆட்டம் ஆடினர். சு.சாமி புகார் எதுவும் கொடுக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமே முன்வந்து (suomoto) இதை வழக்காக எடுத்துக்கொண்டனர். இதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மன்றம் அமைக்கப்பட்டது.
19.02.2009 காலை வலுவான அதிரடிப்படைப்பாதுகாப்போடு மீண்டும் சு.சாமி உயர்நீதிமன்றம் வந்தார். அப்போது, வழக்குரைஞர்களைப் பார்த்து, ‘‘இவர்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டில் வக்கீல் ஆனவர்கள் இவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று சாதியைக் குறிக்கும் வகையில் இழிவுப்படுத்திப் பேசினார்.
இதுபற்றி (தீண்டாமை) வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சு.சாமி மீது நடவடிக்கைக்கோரி வழக்குரைஞர் ரஜினிகாந்த் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சு.சாமி மீது முட்டை வீச்சு நிகழ்வுக்காக வழக்குரைஞர்கள் 21 பேர் பட்டியலை வைத்துக்கொண்டு, எஸ்பிளனேடு காவல் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்வோம் என்றனர். வழக்குரைஞர்கள் 16 பேரைத்தூக்கி காவல் வேனுக்குள் எறிந்தனர்.
மற்ற வழக்குரைஞர்கள் அவ்வண்டியைச் சூழ்ந்துகொண்டு காவல்துறையினரை எதிர்த்து முழக்கமிட்டனர். இதனால் அந்தப் பதினாறுபேரையும் காவல்துறையினர் விடுவித்தனர். ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் மீது சு.சாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்குரைஞர்கள் முழக்கமெழுப்பினர். சு.சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குரைஞர்களை உடன் கைதுசெய்ய மீண்டும் முயன்றனர். ஒருதலைச் சார்பான அந்நடவடிக்கையை வழக்குரைஞர்கள் எதிர்த்தனர். இதைச் சாக்காக வைத்து, காவல்துறையினர் தடியடியைத் தொடங்கினர்.
இது தற்செயல் தடியடியல்ல. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்கூட்டியே உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையைச் சேர்ந்த சிலர் கருப்பு முழுக்கால்சட்டை, வௌ;ளை மேல்சட்டையுடன் வழக்குரைஞர் தோற்றத்தில் நின்றுகொண்டு காவலர்கள் மீது கல்லெறிந்தனர். வழக்குரைஞர்கள்தாம் கல்லெறிந்து ஆத்திரமூட்டியதுபோல் போலித்தோற்றம் ஒன்றை உருவாக்கினர். மேலதிகாரிகள் சுட்டுத்தள்ளு, சுட்டுத்தள்ளு என்று ஆங்கிலத்தில் கத்தினர். கண்ணில் கண்ட வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அடித்து நொறுக்கினர் காவல்துறையினர். பொறுப்புத்தலைமை நீதிபதி முகோபாத்தியாவிடம் வழக்குரைஞர்கள் முறையிட்டனர். அவர் சுதாகர் என்ற நீதிபதியை அனுப்பி காவல்துறையினர் அடிப்பதை நிறுத்துமாறு சொல்லச் சொன்னார். சுதாகர் சொல்லைக்கேட்க மறுத்தனர் காவல்துறையினர். அவர் ”கட்டுமீறிப்போய்விட்டது’’ என்று முகோபாத்யாவிடம் முறையிட்டார்.
ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், அமைதிப்படுத்த வெளியே வந்தார். அவர் மண்டையை உடைத்தனர் காவல்துறையினர். சுகுணா என்ற பெண் நீதிபதி வந்து அமைதியாக இருக்கும்படி சொல்லும்போது காவலர்கள் “உன்னைப்பார்த்தால் நர்சு மாதிரி இருக்கிறது. நீ நீதிபதி என்று சொல்கிறாயே’’ என்று இழிவாகப் பேசினர். நீதிபதி சுதந்திரம், அமைதிப்படுத்த வந்தபோது அவரையும் அடித்தனர். சிறுவழக்குகளுக்கான 12-வது நீதிமன்றத்தில் காவலர்கள் நடத்திய அராஜகம் சொல்லுந்தரமன்று நீதிபதி சொர்ண நடராஜன் மேடையில் உட்கார்ந்திருக்கும்போதே நீதிமன்றப் பின்புறக் கதவை பூட்சுகாலால் உதைத்து உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த காவலர்கள் நீதிபதியை அடித்தனர். அவர் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். அங்கேயும் புகுந்து தாக்கினார். அவர் மேசை மீதிருந்த கணிப்பொறியை அடித்து உடைத்தனர்.
சிறுவழக்குகளுக்கான முதன்மை நீதிபதியின் நீதிமன்றம் தாக்கப்பட்டு குழல்விளக்குகள் உடைக்கப்பட்டன. சிறுவழக்குகள் நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் சங்கக் கூடம் தாக்கப்பட்டது. அங்கிருந்த வழக்குரைஞர்கள் மண்டை உடைக்கப்பட்டது. பலருக்கு எலும்புகள் முறிந்தது. அந்தக் கூடத்தில் கொட்டிய இரத்தத்தின் கறை இன்னும் அப்படியே உள்ளது. அங்கே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தையும் அடித்தனர். அப்போது நேரம் மாலை 6 மணி. அந்த சுவர்க்கடிகாரம் அந்த ஆறுமணியைத் தான் இன்னும் காட்டுகிறது. முள் நகரவில்லை. பெண் வழக்கறிஞர் சங்க அலுவலகத்திற்குள் புகுந்து அடித்து கதவு சன்னல்களை நொறுக்கினர். அருகில் உள்ள குழந்தைகள் காப்பகத்தை அடித்து விளையாட்டுப்பொருட்களை நொறுக்கினர். ஒரு குழந்தைக்கும் பலத்த அடி. மனுநீதிச்சோழன் சிலைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு விளக்குடன் கூடிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கார்களைக் காவலர்கள் அடித்து சேதப்படுத்தினர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நின்ற, வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கார்கள், பைக்குகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தம்பு தெரு, அர்மீனியன் தெரு போன்ற அண்டைத் தெருக்களில் காவலர்கள் புகுந்து அங்குள்ள வழக்குரைஞர்கள் அலுவலகங்களையும், வழக்குரைஞர்களையும் தாக்கினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காவல்துறையினர் சிலரும் காயம்பட்டதாக மருத்துவமனையில் சேர்ந்தனர். வழக்கறிஞர்களையும் உயர் நீதிமன்ற வளாகத்தையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிட திட்டம் வகுத்துக் கொடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். அத்துடன் நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழையக் கூடாது என்று தடுத்தும் வருகின்றனர். அரசியலில் எதிர் எதிர் முகாம்களில் ஒரே நேரத்தில் தம்மை அடையாளம் காட்டிட பஞ்சு மிட்டாய் வசனம் பேசி பழக்கப்பட்ட முதலமைச்சர் கருணாநிதி, இச்சிக்கலிலும் அப்படி ஒரு நாடகம் ஆடுகிறார்.
வழக்குரைஞர்களும், காவல்துறையினரும் தம் இருகண்கள் என்று பசப்புகிறார். “வழக்குரைஞர்கள் வேலைக்குத் திரும்பவில்லை என்றால் காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம் நடத்துவேன்’’ என்று பொய் மிரட்டு மிரட்டினார். ஆனால் அவரை யாரும் நம்பத் தயாராயில்லை. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தலைவர் பால் கனகராசு தி.மு.க.விலிருந்து விலகிவிட்டார். காட்டுமிராண்டித்தனமாக வழக்குரைஞர்களைத் தாக்கிய காவல்துறையினரைப் பாதுகாக்கிறார் கருணாநிதி.
தமிழ் இன உணர்வாளர்கள், மனித உரிமைகளை மதிப்போர் அனைவரும் வழக்குரைஞர்களின் கோரிக்கைகளை ஆதாிக்கவேண்டும். தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநர் ஜெயின், சென்னை மாநகரக் காவல் ஆணையர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அந்த வன்முறைக்குக் காரணமான, அதில் ஈடுபட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாக வழக்குப் பதிந்து அவர்களை, நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும், அவர்கள் அனைவர் மீதும் பொதுச்சொத்து சேதப்பிரிவுகளையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்யவேண்டும்.
உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் சிலரும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் சிலரும் நீதித்துறையின் மீதான, வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். ஸ்ரீ கிருஷ்ணா குழுவிடம் நடந்த உண்மைகளைச் சொல்ல பாதிக்கப்பட்ட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதிகார வர்க்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்ய இந்திய - சிங்களக் கூட்டுப்படை நடத்தும் போரை நிறுத்தக்கோரித் தமிழகமெங்கும் வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கவை. அதேபோல் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் பாராட்டத்தக்கது. ஈழத் தமிழர் உயிர் காக்க வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டம், வழக்குரைஞர்களின் ஆற்றல் என்ன என்பதை அரசுக்கு உணர்த்தி இருக்கிறது.
சட்டக்கல்லூரிகளை உடன் திறக்கவேண்டுமென்றும், உயர்நீதிமன்றத்தில் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திய காவல்துறையினரை நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்றும் ஓங்கிக் குரல் கொடுப்போம்.
|