பெரியாரை அவமதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு முற்றுகை
இளந்தமிழர் இயக்கத்தினர் சிறையிலடைப்பு
ஈரோட்டில் 4.05.09 அன்று திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் “காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்” என்ற வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் “நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்” என்று பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 5.05.09 அன்று ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாம் தான் பெரியாரின் அதிகாரப்பூர்வமான பேரன். பெரியார் சிறு வயதில் செய்த தவறு காரணமாக சீமான் பிறந்திருக்கலாம் என்ற பொருளில் பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக அவர் ஒழுக்கக் கேடானவர் என கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பெரியாரின் அரசியல் எதிரிகள் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கும் இளங்கோவனின் இப்பேச்சுக்கு தமிழகத்தில் பலத்த கண்டனம் எழுந்தது.
இப்பேச்சுக்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்றும் 7.5.09 அன்று ஈரோட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இளந்தமிழர் இயக்கம் அறிவித்தது. அதன்படி, 9.5.09 அன்று காலை 10.00 மணியளவில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தொடங்கவிருந்த முற்றுகை ஊர்வலம் புறப்படும் முன்பாகவே திடீரென இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈரோடு மாநகர்ச் செயலாளர் வெ.இளங்கோவன், மக்கள் உரிமைக் கழகம் செல்வராசு உட்பட முன்னணி தோழர்கள் 10 பேரை காவல்துறை கைது செய்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுத்தது காவல்துறை.
பின்னர் பாவலர் சமர்ப்பா குமரன் தலைமையில் ஒரு அணியும், பவானி தாயம்மாள் தலைமையில் ஒரு அணியும் அடுத்தடுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தது காவல்துறை. மேலும் கைது எண்ணிக்கையை குறைவாக காட்ட வேண்டும் என்ற நோக்கில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பலரை அச்சுறுத்தி கைது செய்யாமல் விரட்டி விட்டனர். கைது செய்யப்பட்டத் தோழர்கள் 3 இடங்களில் தனித்தனியாக சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடைசி அணியாக கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவித்துவிட்டு மீதம் உள்ள 28 பேர் மீது பிணையில் வரமுடியாத 3 பிரிவுகள் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அன்றிரவே கோவை நடுவண் சிறையில் அடைத்தது காவல்துறை. மேலும் இப்போராட்டம் காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு துணை இராணுவம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் நடத்தி வரும் பிரச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டே இயக்கத்தின் முன்னணித் தோழர்களை காங்கிரஸ் - திமுக அரசு கைது செய்தது. இந்நிலையில் 11.05.09 அன்று கைது செய்யப்பட்ட தோழர்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப.பா.மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 15.05.09 அன்று கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒருநபர் ஜாமீன் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் ரந்தோறும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.
தோழர்களை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் நீதிபதிகளுக்கு தந்திகள் கொடுத்தும், பிணைதாரர்கள் மீது சந்தேகங்கள் எழுப்பி நாட்களை இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்த போதும், இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் நீதிபதி பிணை வழங்கினார். பிணை உத்தரவு சிறைக்கு செல்லும் முன்பாகவே சிறையிலிருந்த ஈரோடு தோழர்கள் பலரது வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த பெண்களை மிரட்டி அச்சுறுத்தும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை.
ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட 12 பேர் 19.05.09 அன்றும், செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உள்ளிட்ட 14 பேர் 20.5.09 அன்றும் விடுதலை செய்யப்பட்டனர். 19.05.09 அன்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பாக வதந்திப் பரப்பிய ஊடகங்களைக் கண்டித்தும் பல்லாயிரக்கணக்கில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்தும் உண்ணாப்போராட்டம் சிறையில் நடத்தினர். இப்போராட்டத்தில் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் மட்டுமின்றி வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கோவை நடுவண் சிறையில் இருந்த த.தே.பொ.க., பெரியார்.தி.க., மற்றும் தமிழின உணர்வாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை ராமகிருட்டிணன் தலைமையேற்றார்.
தந்தைப் பெரியாரை அவமதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவது என்றும், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட தோழர்களை நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியதற்காகவும், பிணை வந்தும் இழுத்தடித்து விதிகளுக்கு புறம்பாக தாமதமாக தோழர்களை விடுதலை செய்த கோவை நடுவண் சிறை அதிகாரிகளுக்கு வழக்குரைஞர் தாக்கீது அனுப்புவதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவு செய்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும் வரை வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடர்வதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்துள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|