தலையங்கம்
தேர்தல் களத்தில் ஈழம்
ஊடகங்கள் ஊதிப் பெருக்கி; காட்டியது போல், காங்கிரசுக் கட்சி பெரிதாக வளர்ந்துவிடவில்லை. தேர்தல் முறையில் உள்ள குறைபாடு காரணமாகவே அக்கட்சி 206 இடங்களைப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் விகிதம் 18.2 விழுக்காடு; இதற்கு அது பெற்ற இடங்கள் 21. அதே மாநிலத்தில் பா.ஜ.க. பெற்ற மொத்த வாக்குகள் விகிதம் 17.5 விழுக்காடு. இதற்கு பா.ஜ.க. பெற்ற இடங்கள் 10 மட்டுமே. விகிதாச்சார முறை (Propoertional representation) இல்லாததால் இந்தக் கோளாறு. தமிழ்நாட்டில் மொத்தம் 10 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு ஓர் இடம் கூட கிடைக்கிவில்லை.
மொத்தமாக பதிவான வாக்குகளை மொத்தமுள்ள இடங்களால் வகுத்து, ஓர் இடத்திற்கு எத்தனை வாக்குகள் என்று கணக்கிடவேண்டும். இந்தச் சராசரி அடிப்படையில் ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகளில் எத்தனை இடங்கள் என்று ஒதுக்குவது விகிதாச்சார தேர்தல் முறையாகும். இந்த விகிதாச்சார வாக்கு முறையைக் கொண்டுவர காங்கிரசும் பா.ஜ.க.வும் மறுக்கின்றன. அவ்வப்போது இக்கட்சிகளுக்கு லாட்டரிச்சீட்டு அடிப்பது போல் இப்பொழுதுள்ள தேர்தல் முறையால் விழுந்த வாக்குகளின் விகிதத்தை விஞ்சி இடங்கள் கிடைப்பதால், விகிதாச்சார முறையை இக்கட்சிகள் ஏற்பதில்லை. சிறு கட்சிகளுக்கு அவற்றிற்கு விழுந்த வாக்குளின் விகிதத்திற்கு ஏற்ப இடங்கள் கிடைப்பதை காங்கிரசும் பா.ஜ.க.வும் விரும்பவில்லை.
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அளவில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளை விட இரண்டு விழுக்காடு வாக்குகள்தான் கூடுதலாக இப்போது கிடைத்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் 145 இடங்கள் பெற்ற அக்கட்சி இத்தேர்தலில் 206 இடங்கள் பெற்றுள்ளது. இப்பொழுதுள்ள முறையில், 51 வாக்கு வாங்கிய வேட்பாளர் வெற்றி பெறுகிறார். 49 வாக்கு வாங்கியவர் தோல்வியுறுகிறார். இதனால் வெறும் இரண்டு வாக்குக் கூடுதலாகப் பெற்றவர் வெல்கிறார்.
ஆசிரியர் குழு
ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்
குழு உறுப்பினர்கள்
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி
புதிய தமிழர் கண்ணோட்டம்,
44-1, பஜனை கோயில் தெரு,
(முத்துரங்கம் சாலை அருகில்),
கண்ணம்மாபேட்டை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.
தொலைப்பேசி: 044- 2434 8911
[email protected]
tamizhdesiyam.blogspot.com
ஆண்டுக் கட்டணம்: ரூ.120
மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300
வாழ்நாள் கட்டணம்: ரூ.1200
|
வெறும் இரண்டு வாக்குகள் குறைவாகப் பெற்று 100 தொகுதிகளில் தோற்றாலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்காது. இப்பொழுது அனைத்து வாக்குகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது. அதிர்ஷ்ட வாக்குகளுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி இன ஒடுக்குமுறை இருக்கும் இலங்கையில் கூட விகிதப் பிரதிநிதித்துவ முறை உள்ளது. அதனால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருபத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். விகிதத் தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற குரல் அனைத்து முனையிலிருந்தும் எழ வேண்டும்.
அடுத்து, கணிப்பொறி வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று தெரிய வருகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க பழைய வாக்குச் சீட்டுமுறையைக் கொண்டு வரவேண்டும். அமெரிக்காவில் கூட கணிப்பொறி முறை கிடையாது; வாக்குச் சீட்டு முறையே உள்ளது. எனவே காங்கிரசுக் கட்சி பழையபடி அனைத்திந்திய வலிமையைப் பெற்று வந்துவிட்டதாகவும், சோனியா - ராகுல்காந்தி ஆகியோர் அனைத்திந்தியத் தலைவர்களாக மக்களால் ஏற்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இந்திய தேசிய ஆதிக்கவாதிகளின் கற்பனைச் சித்திரமின்றி உண்மையில்லை.
மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மற்ற இடதுசாரிக் கட்சிகளும் வீழ்த்தப்பட்டது பெருமளவில் காங்கிரசுக்குகு; கை கொடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் கூட மம்தா பானர்ஜியின் மாநிலக்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் தலைமையின் கீழ் போட்டியிட்டுத்தான் காங்கிரசு வென்றது. மராட்டியத்தில், தேசியவாதக் காங்கிரஸ் என்ற மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் கூடுதல் இடங்களைக் காங்கிரஸ் பெற்றது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையில் கூட்டணி சேர்ந்துதான் ஏழு இடங்களைப் பெற்றது. உ.பி., பீகார் மாநிலங்களில், பகுசன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய மாநிலக்கட்சிகளின் செயல்பாட்டில் குறை கண்ட மக்கள் காங்கிரசுக் கட்சி - பா.ஜ.க. ஆகியவற்றிற்கு வாய்ப்பளித்துள்ளனர். பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஒன்றுபட்ட சனதாதளத்திற்குத் தான் கூடுதல் இடங்கள்(20) வழங்கியுள்ளனர். அங்கு காங்கிரசு இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. உ.பி.யில் 21 இடங்கள் பெற்றுள்ளது காங்கிரசு.
மாநிலக் கட்சிகள் இல்லாத மத்தியப்பிரதேசம், இராசஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஐ.க.வும் காங்கிரசும் கணிசமான இடங்கள் பெற்றுள்ளன. இவ்வளவுதான். வாக்காளர்களுக்கு இந்திய தேசியப் பார்வை வளர்ந்துவிட்டது என்பதும் ராகுல்காந்தி பெருஞ் செல்வாக்கு பெற்று அனைத்திந்தியக் கதாநாயகனாக வடிவம் பெறுகிறார் என்பதும் வெறும் விருப்பங்கள் மட்டுமே. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அம்மதிப்பீடுகள் உண்மை அல்ல.
தமிழ்நாட்டில், ஈழத்தமிழர் சிக்கலைத் தேர்தல் சிக்கலாக மாற்றிய பெருமை முதலில் தேர்தலில் போட்டியிடாத தமிழ் அமைப்புகளையும், தமிழ் இன உணர்வாளர்களையுமே சாரும். இம்முயற்சிக்கு 50 விழுக்காடு வெற்றி கிடைத்துள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது. தோல்வியுற்ற ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதில் உள்ள மாயமந்திரத்தை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இராசகண்ணப்பன் தான் வெளிப்படுத்த வேண்டும். தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், பிரபு, கார்வேந்தன் போன்ற இனத்துரோகிகள் தோற்றார்கள்.
ஈழச்சிக்கல் மையச்சிக்கல் ஆன பிறகு, காங்கிரசு - தி.மு.க. அணிக்கு முழுத்தோல்வி கிடைக்காததற்கான காரணங்கள் என்று நாம் கருதுபவை: 1965 - இந்தி எதிர்ப்புபு; போராட்டத்தின் பலனை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ள தி.மு.க. இருந்தது. அதற்கு முன் பத்தாண்டுகளாக இந்தி எதிர்ப்பு உணர்வைத் தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் அது பரப்பி வந்தது. அப்போது அது முழுஅளவில் காங்கிரசு எதிர்ப்பை முன் வைத்தது. அதுபோல் ஒரு கட்சி ஈழத்தமிழர்க்காக இப்போது இல்லை. ஈழத்தை எதிர்க்கும் காங்கிரசு அல்லது பா.ஜ.க. தலைமையில் கூட்டணி சேரும் கட்சிகள் தான் இங்கு ஈழச்சிக்கலை முன்வைத்தவை. தமிழகத்தில் தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் இக்கட்சிகள் கூட்டு வைப்பவை.
ஈழத்தையும் விடுதலைப்புலிகளையும் தொடர்ந்து எதிர்த்து வந்த செயலலிதா திடீரென்று தேர்தல் நெருக்கத்தில் குட்டிக்கரணம் போட்டு “ஈழம் அமைத்துத் தருவேன்” என்று முழங்கியது நம்புவதற்கு குரியதாக இல்லை. கிராமங்கள் பலவற்றில் ஈழச்சிக்கல் குறித்த முழுவிவரம் போய்ச் சேரவில்லை. ஈழத்தின் தொல் பழங்குடி மக்கள் தமிழர்கள் என்ற உண்மை தெரியவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழகத்திலிருந்து போனவர்கள் என்று இன்றும் தவறாகக் கருதும் மக்கள் தமிழ்நாட்டில் கணிசமாக உள்ளனர்.
தமிழக அரசு அடக்குமுறைகளை ஏவி, ஈழம் தொடர்பான குறுந்தகடுகள் வழங்குவதைத் தடுத்தது. ஈழத்தை முன்னிட்டு காங்கிரசைத் தோற்கடிக்கக் கோரும் துண்டறிக்கைகள் வழங்குவதைத் தடை செய்து பரப்புரையில் ஈடுபட்ட பலரைத் தளைபடுத்தி சிறையிலடைத்தது. குறுந்தகடுகள் வைத்திருந்தோரைத் தளைப்படுத்தியதுள பலரது வீடுகள் காவல்துறையால் சோதனையிடப்பட்டன. தே.மு.தி.க., கொங்குநாட்டுக் கட்சி ஆகியவை கணிசமான வாக்குகள் பெற்றன. வெற்றிபெறும் அளவு வாக்குகளை அவற்றால் பெற முடியவில்லை. இது பல இடங்களில் எதிரணியின் வாக்குகளைப் பிரித்து, தி.மு.க. அணிக்கு வாய்ப்பளித்தது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நிர்வாகத்தை தி.மு.க. மேம்பட்டமுறையில் செயல்படுத்தியது. எதிரணி பணம் கொடுக்கவில்லை என்று பொருள் அல்ல. தி.மு.க. அணி அளவிற்கு பணம் கொடுக்கவில்லை. மேற்கண்ட காரணங்களால், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய துணை புரியும் காங்கிரசு - தி.மு.க. அணிக்கு முழுத்தோல்வி ஏற்படவில்லை. ஈழச்சிக்கல் இத்தேர்தலில் ஒரு சிக்கலாக இல்லை என்று சிலர் கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது போல் அம்பலமாகி போன பொய் ஆகும்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இத்தேர்தலையும் வாக்களிக்காமல் புறக்கணித்தது. ஆனால் வாக்களிக்கும் தமிழர்கள் காங்கிரசைத் தோற்கடியுங்கள் என்று பரப்புரை இயக்கம் நடத்தியது. இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில், தமிழ் இனம் அழியும் போது, இனக்கொலை புரிவோரையும் அதற்குத் துணைபோவோரையும் ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டும் என்ற அவசரத் தேவை எழுகிறது. தேர்தல்களத்தில அவர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தது மிகச்சரியான நடவடிக்கை. தமிழ் இன உணர்ச்சியின் - மனித நேயத்தின் வெளிப்பாடு அது.
நம் இனத்திற்கு இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ள போதும் கூட அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உடனடியாக இயலக்கூடிய முறையில் தலையிடத் தவறினால், அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு இனக்கொள்கை ஏதுமில்லை என்றாகும். அந்த அமைப்புகள் தங்களுக்கென்று வைத்துள்ள வெவ்வேறு கொள்கைகளுக்காக, ஈழத்தமிழர் இனப்படுகொலையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினவே அன்றி, உண்மையில் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பது அவ்வமைப்புகளின் முதன்மை நோக்கமல்ல என்றாகும்.
தமிழின உணர்வாளர்களும் தமிழ்த் தேசிய அமைப்புகளும், தேர்தல்களத்தில், இனப்பகைவர்களுக்கும் இனத்துரோகிகளுக்கும் எதிராகப் பரப்புரை செய்தது பயனற்றுப் போய்விட்டது என்று கருதக் கூடாது. ஈழச்சிக்கலை முதல் தடவையாகத் தேர்தல் சிக்கல் ஆக்கியதே நாம் தான் என்று பெருமைப்பட வேண்டும். இத்தோடு நம்பணி முடியவில்லை. இனஎதிரிகளையும் இனத்துரோகிகளையும் வீழ்த்த மற்ற களங்களிலும் போராடுவோம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|