Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

செங்கிப்பட்டியில் காவல்துறை அட்டூழியம்

தமிழின உரிமையை வலியுறுத்தியும், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும் பேசிய த.தே.பொ.க பொதுச்செயலாளர் பெ. மணியரசன், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, திரை இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் தமிழகமெங்கும் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 22.12.2008, மாலை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்றது. ஆனால் ஊர்வலத்தின் முடிவில் காங்கிரசு தலைவர்கள் கே.வி. தங்கபாலு மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உருவப்படங்கள் எரிக்கப்பட்டதற்காக விசாரணைக்காக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெ. காசிநாதன் உள்ளிட்ட ஐந்து பேரை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் காவல்துறை அதி விரைவுப் படை தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் சாணூரப்பட்டியில் இறங்கி கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள், கடைக்காரர்கள் அனைவரையும் மிரட்டி அச்சுறுத்தினர். செங்கிப்பட்டி காவல் துறையினரோடு பேசிக்கொண்டிருந்த கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட 15-பேரை கைது செய்தனர்.

செங்கிப்பட்டியிலிருந்து தொடங்கி புதுக்குடி, காமாட்சிபுரம் வரை உள்ள கிராமங்களில் த.தே.பொ.க. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று கடுமையாக அச்சுறுத்தினர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை போல அதி விரைவுப் படையினர் நடத்திய இந்த அத்துமீறலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே தலைமை தாங்கினார். இதில் சிறுவர்கள் கூட தப்பவில்லை எடுத்துக்காட்டாக கட்சியின் மாவட்டத் துணை செயலாளர் குழ. பால்ராசுவின் 13- வயது மகன் தமிழ் மாறனை அதி விரைவுப்படையினர் காவல் வண்டியில் ஏற்றினர். அப்பகுதி பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தப்பிறகு சிறுவனை விடுவித்தனர்.

பெ. மணியரசன், சீமான் கைதைக் கண்டித்து சென்னை உள்ளிட்டு பல்வேறு இடங்களில் காங்கிரசுத் தலைவர்கள் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டது. அதற்கெதிராக திருமாவளவன் உருவப்பொம்மை எரிக்கப்படுவதும் நடந்து வருவதைப் பார்க்கிறோம். அங்கெல்லாம் இவ்வாறான வீடுபுகுந்து தேடுதல் வேட்டை நடைபெறவில்லை. மாறாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இந்த தேடுதல் அத்துமீறல் நடைபெற்றுள்ளது. இது அரசு மற்றும் மாவட்ட காவல்துறை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராகக் கொண்டுள்ள வன்மத்தையே காட்டுகிறது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற 22-ஆம் நாள் நள்ளிரவு தொடங்கி அடுத்த இரு நாள்கள் இரவு, பகலாக இத் ”தேடுதல் வேட்டையில்’’ காவல்படையினர் ஈடுபட்டது இதனை உறுதிசெய்கிறது.

இந்திராகாந்தி நெருக்கடி நிலை அறிவித்து, திமுக அரசைக் கலைத்த சூழலில் அன்றைக்கு சி.பி.எம். கட்சி அமைப்பு இருந்த கிராமங்களில் அதே ஒன்றியத்தில் இவ்வாறான அடக்குமுறை வேட்டை நடைபெற்றது. அன்றைக்கு தலைவர் நா. வெங்கடாசலத்தையும், தோழர் பெ. மணியரசனையும் கைது செய்ய முடியாத காவல்துறை இந்த அடக்குமுறையில் ஈடுபட்டது.

அன்றைக்கு சி.பி.எம். தோழர்களை காவல்துறைக்குக் காட்டிக் கொடுப்பதில் அப்பகுதி அ.தி.மு.க.வினர் சிலரும், சி.பி.ஐ. கட்சியினர் சிலரும் ஈடுபட்டனர். இன்று நடக்கிற தேடுதல் வேட்டையில் த.தே.பொ.க. தோழர் வீடுகளைக் காட்டிக் கொடுப்பதில் அப்பகுதி சி.பி.எம். பிரமுகர்கள் சிலர் முனைப்பாக ஈடுபட்டனர். எந்தவித சிறு ஞாயமும் இல்லை. ஆயினும் எந்தவித கேள்விமுறையுமின்றி இந்த அநீதி அரங்கேறியது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. இதனை த.தே.பொ.க. எதிர்கொள்ளும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.