பாலஸ்தீனர்கள் மீது மீண்டும் இனக்கொலைத் தாக்குதல்
பாலஸ்தீன காஜா பகுதியின் மீது திசம்பர் 27,28 ஆகிய நாட்களில் இஸ்ரேல் இனவெறிப்படை அகதிகள் முகாம் மீதும் , குடியிருப்புகள் மீதும் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஏறத்தாழ 500 பேர் - குழந்தைகளும், பெண்களுமாய் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன தாயகத்தை மேற்கு கரை, காஜா என கூறுபோட்டு, அங்கங்கே இனவெறிச் சுவர் எழுப்பி சிதறடித்துள்ளது இஸ்ரேல். பாலஸ்தீனர்கள் கடந்த பல்லாண்டுகளாக நிரந்தரமான பொருளியல் முற்றுகையில் நெறிக்கப்பட்டு வருகின்றனர். காஜாப் பகுதியில் சட்டப்படி அமைந்த பாலஸ்தீன ஆட்சியை செயல்பட விடாமல் முடக்கி வைப்பதில் இஸ்ரேல் இனவெறி அரசோடு அமெரிக்க வல்லரசு இணைந்து செயல்படுகிறது.
இதுபோதாதென்று இப்போது இனக்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 1967-க்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியுள்ள கொடும் தாக்குதல் இது. பாலஸ்தீன தேசத்தையே மரணக்குழியில் தள்ளி பணிய வைக்க நினைக்கிறது. ஆனால் இப்படுகொலை தாக்குதலை பாலஸ்தீனம் எதிர்கொள்ளும் என அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
”அல்லாவைத் தவிர யார் முன்னாலும் அடிபணிய மாட்டோம். வெள்ளைக்கொடி காட்டி சரணடையமாட்டோம். மூன்றாவது மக்கள் போர் எழுச்சி (இன்டிஃடா) தொடங்கட்டும்.” என்று அமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹானியா உணர்ச்சிப் பொங்க அறிவித்துள்ளார். இனப்படுகொலையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த உருப்படியாக ஒன்றும் செய்யாமல் முனகல் கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றன. ஜியோனிய இஸ்ரேல் ஆட்சியோடு இந்திய அரசு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது நடந்துள்ள மனிதப் படுகொலைக்குப் பிறகாவது இந்திய அரசு இனவெறி இஸ்ரேலோடு கொண்டுள்ள படைக் கூட்டணியையும் பொருளியல் ஒப்பந்தங்களையும் கைவிட வேண்டும். இஸ்ரேலோடு உள்ள அரசு முறை உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக உலக அரங்கில் இந்தியா அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|